எனக்கு எப்போ கல்யாணம்

“அப்பா எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்க” கேட்டது என் மகள் அன்புமதி.

ஒரு நொடி அதிர்ச்சியும் உடனே சிரிப்பும் தான் வந்தது. இதில் என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்குது என்கிறீர்களா?

என் மகளுக்கு 5 வயது.

பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அந்தக் கேள்வியை கேட்டு விட்டு பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள் அன்புமதி.

இது இடைவிடாது கேள்விகள் கிளைவிடும் காலம் என்பதை அறிந்திருந்ததால் அன்புமதியை புரிந்து கொள்ள முடிந்தது.

பொதுவாக குழந்தைகள் தனக்குப் புதிராய்த் தோன்றும உலகத்தை, உலகத்தின் நடைமுறையை,பழக்க வழக்கங்களை கேள்விகள் மூலமே புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

தனக்கு வழிகாட்டியாய் இதைச் செய், இதைச் செய்யாதே என்று தீர்மானிக்கும் ஆட்களையோ, தனக்கான கேள்விகளுக்கு காது கொடுக்கும் நபர்களையோ விடை சொல்லிகளாகத் தேர்ந்தெடுகிறார்கள்.

அதற்கான பதிலில் இருக்கும் உண்மையும், கேலியும், பொய்யும் குழந்தையின் அறிவுவளர்ச்சியை, படைப்புத் திறனை தீர்மானிக்கின்றன என்பதனை நானறிவேன்.

ஆகவே ‘ நீ பெருசா ஆனதுகப்புறம் கல்யாணம் பண்ணுவோம்’ என்று பொறுப்பாய் பதில் சொன்னேன்.

‘எதுக்குப் பாப்பா’ என்று நான் கேட்டேன் எதற்காக அப்படிக் கேட்டாள் என்பதை புரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.

‘ இல்லப்பா எனக்கு கல்யாணம் பண்ணும் போது தண்ணியடிக்காத, தம்மடிக்காத, பையனாப் பாத்துக் கல்யாணம் பண்ணி வையுங்க ‘ என்றாள்.

சிரிப்பு வெடித்துக் கிளப்பியதை அடக்கிக் கொண்டேன்.

அவளுக்கு முக்கியமாய் தோன்றும் ஒரு விசயத்தை கேலியின் மூலம் அவமதிப்பது சரியில்லை என்பதால் சிரிக்கவில்லை.

‘சரிடா செல்லம்’ என்றேன்.

உடை மாற்றப் பக்கத்து அறைக்கு அன்புமதி போனதும் மனம் விட்டுச் சிரித்துக் கொண்டேன்.

பிற்காலத்தில் அன்புமதிக்கான துணையை நான் பார்க்கப் போகிறேனோ? அவளே கூட்டி வந்து அறிமுகப் படுத்தப் போகிறாளோ?

ஆனாலும் இதற்கான கருத்தை, கேள்வியை , எங்கிருந்து பெற்றிருப்பாள்.

பெரியவர்களின் பேச்சிலிருந்தா? தொலைக் காட்சியிலிருந்தா? திரைப் படத்திலிருந்தா? இல்லை குடிகாரனொருவனை தந்தையாய் அடைந்த பள்ளித் தோழியிடமிருந்தா?

கேள்விகள் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன…

No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.

மறுமொழியவும்