நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.
நானென்ன புத்தனின் தந்தையா? கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். [...]



மழையின் சுவடுகள்