அன்புமதிக்கு டாம் அன்ட் ஜெர்ரி என்றால் அவ்வளவு பிடிக்கும்.
வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் டிவிடியில் இருக்கும் டாம் அன்ட் ஜெர்ரி படங்களைப் பார்ப்பது தான் வேலை..
6 வயது சிறுமிக்கு இயல்பான பொழுது போக்கு தான் என்றாலும் அவ்வப் போது எனக்கு உறுத்தலாக இருக்கும்.
ஓரே வீட்டில் யாரோ போல நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது இப்போதெல்லாம்.
நாங்கள் என்பது நான், மனைவி உமா , மகள் அன்புமதி.
நகர வாழ்வின் கைகளில் சோழி முத்துகள் போல உருட்டி எறியப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நொடிகள் தோறும் என்று உணர்கிற தருணங்கள் வாழ்வின் அபத்தங்களை வலிக்கச் சொல்கின்றன.
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உலுக்கி எழுப்பி…
அவசர குளியல், அவசர உணவோடு அவசரமாய் உடை மாற்றி பள்ளிக்கு அனுப்புகிறோம்.
அடுத்து அவசரமாக நாம் குளித்து உண்டு உடை மாற்றி அலுவலகங்கள் எனும் தீரா பசியுடைய கட்டிட வாய்களின் உணவாக ஓடுகிறோம்.
மாலைப் பொழுதில் சக்கைகளாய் களைத்து திரும்பும் நாமும் குழந்தைகளும் ..
கடலில் அள்ளிய உள்ளங்கை நீரென வடிந்து கொண்டிருக்கும் தினசரி நாட்களின் எஞ்சிய உயிருள்ள பொழுதுகளை தொலைக் காட்சிகள், கணிணிகள், வீட்டு வேலைகள் என்று முகம் தெரியாத தாக உதடுகள் ஈரம் துளியுமின்றி உறிஞ்சிக் கொள்கின்றன…
மூவரும் ஒன்றாய் வீட்டில் இருக்கும் பொழுதுகள் மிகக் குறைந்ததாய் இருக்கின்றது.
என்றாவது ஆபூர்வமாய் ஒன்றாய் இருக்கும் நேரங்களையும் ஆளுக்கொரு வேலையில் கழித்து விடுகிறமென்ற உறுத்தல் விழித்திருக்கிறது எப்போதும்.
அப்படி மூவரும் இணைந்திருந்த ஒரு நாள் அது…
கணிணியில் முன் அமர்ந்திருந்தேன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் உமா.
அன்புமதி டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
குழந்தையுடன் நேரம் செலவழிப்பதில்லை என்று முந்தைய நாளில் தான் பேசி வருந்திக் கொண்டிருந்தோம்.
டாம் அன்ட் ஜெர்ரி பார்ப்பதில் இருந்து கவனம் திருப்பி அருகில் அழைத்துக் கொள்ளத் தோன்றியது.
அன்பு என்று கூப்பிட்டேன்.
அடுத்த அறையில் இருந்தே என்னப்பா என்றாள்.
இங்க வாப்பா என்றதும் தனது முக்கிய வேலையின் போது அழைக்கப்படுவது குறித்த அலுப்போடு வந்தாள்.
என்ன பண்ணுற என்று தெரியாதது போல் கேட்டேன்.
டாம் அனட் ஜெர்ரி பார்க்கப் போறேன் என்றாள்.
விளையாட்டாய் பேசி எங்களுடன் இருக்க வைக்க வேண்டுமென்று தோன்றியது என்ன சொல்லமென்று யோசிக்கையில் மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது.
எல்லாக் குடும்பங்களும் போல எப்போதும் எதாவது வாக்குவாதம், சண்டை நடந்து கொண்டிருக்கும் எனக்கும், உமாவுக்கும்.
குழந்தைகள் முன்னால் சண்டையோ வாக்குவாதமோ வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அது ஒவ்வொரு முறையும் மறந்து போவதும் அதன் பிறகு அடுத்த சண்டைக்கு முந்தைய நிமிடம் வரை நினைவில் இருப்பது என்ன மாயமோ?
ஒரு சில நிகழ்வுகளில் அன்புமதி நாட்டாமையாக மாறி சாமாதானப் படுத்தி தீர்ப்பளித்ததும் உண்டு.
இதெல்லாம் கண நேரத்தில் துண்டுக் காட்சியாக ஓடித் தீர்ந்தது.
அன்புமதியை டாம் அன்ட் ஜெர்ரி பார்ப்பதிலிருந்து சமாதானப் படுத்தி அழைத்து வரும் வார்த்தை நாவின் நுனிக்கு வந்து சேர்ந்தது.
‘ நாங்க தான் நிஜ டாம் அன்ட் ஜெர்ரி இங்க இருக்கோம்ல எங்களைப் பார்த்தா போதாதா பாப்பா’
சாமர்த்தியமாய் பேசிய திருப்தியை அனுபவிக்கும் முன் ஒரு வினாடி கூட யோசிக்காமல் அன்புமதி சொன்ன பதில் குறி தவறாத ஒரு கத்தியைப் போல் சரியாய் பாய்ந்து இன்னும் வலித்துக் கொண்டு இருக்கிறது.
அப்படி மதி என்ன சொன்னாளென்றாள்…
‘ ஆனா இந்த டாம் அன்ட் ஜெர்ரில காமெடியே இல்லையேப்பா ‘
3 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
வாழ்வின் தேடல்களுக்காகவும், தேவைகளுக்காகவும் எதையெல்லாம் நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை நறுக்கென்று சொல்கிறது இப்பதிவு.
Unarvu, Athangam, Iyalamai, Anbu, Aaruthal, Karunai ellame iruku very nice
uravugal matrum kulandhaugal kuritha ungal paarvai arpudham. melum solvadhaanal chithran solliyiruppadhu pola narukkenru irukkiradhu ippadhivu