திருமண அறிமுகம்

may-3-2008-my-card-020

அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .

என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.

பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.

15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.

ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் கூப்பிடுவாள்.

நர்மதாவிற்கு அலங்காரம் நடக்கும் போது பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அலங்காரம் முடிந்து மண்டபத்திற்கு காரில் கிளம்பும் போது நர்மதாவுடம் காரில் ஏறிக் கொண்டாள்.

மண்டபத்தில் தாய் மாமன் நான் மாலையிட்டு கல்யாண மேடைக்கு அழைத்து வந்ததை சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை சுரேஷை ஏற்கனவே பல முறை பார்த்திருப்பதால் மேடை மீது ஏறி இருவரிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

நேரமானதும் பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க தாலி கட்டுதல் முடிந்தது.

கூட்டம் நிரம்பிய மண்டபத்தில் குழந்தைகள் கூட்டத்தில் விளையாட தோழமைகள் அதிகமிருந்ததால் ஒரே ஓட்டமும் விளையாட்டாக இருந்தாள் அன்புமதி.

எல்லாம் முடிந்து மணப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் வர அனைவரும் கிளம்பிய போது அன்புமதியை தேடி கூட்டிக் கொண்டோம்.

மாப்பிள்ளை வீட்டில் சடங்குகள் முடிந்து கிளம்ப வேண்டிய நேரம்
நெருங்கியது.

என் அக்கா சாந்தி மற்றும் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இனி முதல் இத்தனை காலம் தனது கண்களில் ஒன்றாக இருந்த நர்மதா அடுத்த வீட்டுப் பெண். இனி அவள் வீடு இது தான் என்று உணர்ந்து
கண்கள் கலங்கத் துவங்கியிருந்தனர்.

மாப்பிளை வீடு நான்கைந்து தெருக்கள் தள்ளித் தான் இருக்கிறது என்றாலும் அது நீண்ட தொலைவு தான் இனிமேல்.

இனி மாப்பிள்ளை வீட்டின் விதிகள் தான் நர்மதாவைக் கட்டுப்படுத்தும்.

விட்டுப் பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தவர்களை அனுபவப் பட்ட முதிர்ந்த ஒரு குரல் ’ கிளம்புங்கப்பா அங்க வேலை கிடக்குதில்ல ’ என்று கிளப்பிவிட்டது.

பெண் வீட்டினர் அனைவரும் கிளம்பத் தயாரானோம்.

அக்கா சாந்திக்கும், மணப் பென்ணின் தங்கை நிவேதாவுக்கும் கண்கள் ஊற்றெடுத்துக் கொண்டன எனக்கும் கூட கண்கள் கலங்குவதை கட்டுப் படுத்த முடியவில்லை.

உமா பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த அன்புமதியை அழைத்து வந்தாள்.

நர்மதாவின் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழியக் காத்திருந்தது.

ஒவ்வொருவராய் நர்மதாவிடமும் மாப்பிள்ளையிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.

அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் கடைசியாய் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

அன்புமதி நர்மதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாங்கள் வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தோம். அன்புமதி திடிரென பிடித்திருந்த என் கைகளை விலக்கி விட்டு நர்மதாவை நோக்கி ஓடினாள்.

என்ன ஏதுவென்று தெரியாமல் திரும்பிப் பார்ப்பதற்குள் அன்புமதி ஓடிப் போய் நர்மதாவின் கைகளைப் பிடித்து,

‘ எல்லாரும் போறாங்கடி, வாடி நர்மதா , நீ மட்டும் ஏன் இங்க இருக்க வாடி வாடி விட்டுட்டு போயிறப் போறாங்க’

என்று மறுபடி மறு படி சொல்லிய படி நர்மதாவை இழுக்க ஆரம்பித்தாள்.

அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போனோம்.

சில அழுத மனங்கள் விம்மலை வெளிப் படுத்தின, சிலருக்கு சிறுமியின் அறியாமை இதழ்களில் சிரிப்பைச் சிந்தியது.

ஓடிச் சென்று அன்புமதியைத் தூக்கிக் கொண்டேன்.

‘ நர்மதாவுக்கு இங்க வேலை இருக்கு அதை முடிச்சிட்டு அப்புறமா வரும் , என்று சொன்னேன் அன்புமதியிடம்.

நம்பாமல் ‘ அப்புறம் வருவியாடி’ என்று நர்மதாவை அன்பு கேட்க
நர்மதா அழுத விழிகளோடு ஆமென தலையாட்டினாள்.

அன்புமதியை தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

வாசல் வரை நர்மதாவை திரும்பிப் பார்த்த படி வந்தாள் மதி.

போகும் போதோ, போய் சேர்ந்த பிறகோ பொங்கிப் பெருகும் அன்புமதியின் கேள்விகளுக்கு வழக்கம் போல் உண்மையான பதில்களால் திருமணத்தை அறிமுகம் செய்து வைப்பதாய் உறுதி கொண்டேன்.

2 பின்னூட்டங்கள்

  1. நல்ல பதிவு சுதா..

  2. எதார்த்தமும்..உண்மையுமான..நிகழ்வு..கண்கலங்கினேன்..சுதா..


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்