ஈரானியத் திரைப்படங்கள் தொடர்ந்து உலக அளவில் பெரும் கவனிப்பையும், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருகின்றன.
எளிமையான கதைக் கருக்களை வலிமையாய் பயன்படுத்தி பார்ப்பவர்கள் மனங்களில் அழியாத சுவடுகளாய் உறைந்து விடக் கூடிய சக்தியை பெற்றவைகளாய் இருக்கின்றன ஈரானியப் படைப்புகள்.
ஈரானிய அரசியல் நிலை, மதக் கட்டுப்பாடுகள், கடுமையான தணிக்கைமுறை, இவைகளின் நடுவே, இந்த சாவல்களைத் தாண்டி தனித்துவம் கொண்ட நட்சத்திரங்களாய் ஒளிவிடுகின்றன ஈரானிய திரைப்படங்கள்.
சமீபத்தில் பார்த்து, வியந்து, ரசித்த படம் ஆப் சைட்.
தனது உயரிய படைப்புகள் உலகம் முழுதும் அறியப்படுவரும், தங்கச் சிங்கம் உள்ளிட்ட பெரும் விருதுகளைப் பெற்றவருமான ஜாபர் பஹானியின் ஆக்கம் இது.
வொயிட் பலூன், மிரர், சர்கிள், கிரிமிசன் கோல்ட் போன்ற படைப்புகளைத் தொடர்ந்து 2006 ல் வெளியான படம் தான் ஆப் சைட்.
கிரிகெட், கால் பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளை அரங்கத்தில் இருந்தோ அல்லது தொலைக்காட்சிகளின் நேரலைகளிலோ பார்த்திருக்கிறோம்.
ஆண்களும் பெண்களுமாய் ரசிகர்கள் போடும் கூச்சல்களை, ஆட்டம் பாட்டங்களை, விநோதமான சேஷ்டைகளை, விளையாட்டு வீரர்களின் போஸ்டர்களை ஏந்திப்பிடிப்பவர்களை, வீரர்களைப் போலவே சீருடை அணிந்தவர்களை, தேசிய கொடியை முகத்தில், கன்னத்தில், நெற்றியில் வரைந்தவர்களை, இப்படி இன்னும் எத்தனையோ காட்சிகளை நாம் கண்டிருக்கிறோம்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதிப் போட்டி ஈரானுக்கும், பஹைரைனுக்கும் இடையில் நடைபெறப் போகின்ற தினத்தில் துவங்குகிறது கதை.
ஊரே கோலாகலமாய் இருக்கிறது. விளையாட்டு அரங்கத்தை நோக்கி பல் வேறு வண்டிகளில், ரசிகர்கள், மாணவர்கள் உற்சாகத்துடன் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்தக் கூட்ட்த்திற்குள் தனது மகளைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஒரு தந்தை.
தனது மகளுக் கூட்டத்தோடு கூட்டமாய் விளையாட்டுப் பார்க்கப் போவதாய் வந்த தகவலை அடுத்து அவர் மகளைத் தேடிக் கொண்டு அலைகிறார்.
ஏனென்றால் ஈரானில் பெண்கள் ஸ்டேடியத்தில் விளையாட்டுப் போட்டியைக் காண்பது சட்டப்படி குற்றம்.
மாணவர்கள் செல்லும் இன்னொரு வண்டியில் ஆணைப் போல உடையணிந்து, தலையில் தொப்பி போட்டுக் கொண்டு , முகத்தில்தேசியக் கொடியை வரைந்து கல்லூரி மாணவியைப் போல் உள்ள ஒரு பெண் பயணம் செய்கிறாள். அதை ஒருவன் கண்டுபிடித்து அவளிடம் எங்களோடு உள்ளே வந்து விடு. பிரச்சனை வந்தால் நாங்கள் உதவுகிறோம் என்கிறான். அந்த பெண் அதை மறுத்துவிடுகிறாள்.
வண்டி ஸ்டேடியத்தை அடைகிறது. ஆயிரக் கணக்கானோர் போய் விளையாட்டைக் காணப் போய் கொண்டு இருக்கிறார்கள். அவள் கையிலோ டிக்கெட் இல்லை. என்ன செய்வது என்பதறியாமல் நடந்து கொண்டிருக்கும் போது பார்க்கிறாள். விளையாட்டு வீர்ர்களின் படங்களை விற்கும் ஒருவன் நுழைவு சீட்டை ப்ளாக்கில் ரகசியமாக விற்றுக் கொண்டிருக்கிறான்.
அவள் அவனிடம் நுழைவுச் சீட்டு எவ்வளவு என்று விசாரிக்கிறாள். அவன் எளிதாய் அவள் பெண் என்பதை கண்டு பிடித்து விற்க மறுக்கிறான். கடைசியில் ஏற்கனவே விற்றதை விடவும் பல மடங்கு விலையை உயர்த்தி அநியாய விலை சொல்கிறான். வேறு வழியின்றி வாங்குகிறாள் அந்த இளம் பெண். கூடவே போஸ்டர் வாங்கினால் தான் நுழைவுச் சீட்டு என்கிறான் அவன். அதையும் அநியாய விலைக்கு வாங்கிக் கொள்கிறாள்.
நுழைவாயில்களில் இராணுவ வீரர்கள் நின்று முன்புறம், பின்புறம், என்று உடலைத் தடவிப் பார்த்து சோதனை போடுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பின் மனதை திடப்படுத்திக் கொண்டு வரிசையில் போகிறாள். இவள் முறை வந்ததும், சோதனைக்கு முன்பு கூட்டத்தில் கலந்து ஓட ஆரம்பிக்கிறாள். ஆனாலும் பயனின்றி பிடிபடுகிறாள்.
அந்தப் பெண்ணை இராணுவ வீரனொருவன் இன்னொரு வீரனிடம் கொண்டு போய் ஒப்படைக்கின்றான். விளையாட்டு அரங்கின் உள் நுழை வாயில்களின் ஒன்றின் அருகாமையில் இருக்கிறது அந்த இடம். அவள் போகும் போது ஏற்கனவே 3 பெண்கள் இவளைப் போலவே பிடித்து வைக்கப் பட்டிருப்பதைப் பார்க்க்கிறாள். அவர்களும் இவளைப் போல ஆண் உடையில் இருக்கிறார்கள். அதிலொரு இளம் பெண் அழுது கொண்டிருக்கிறாள்.
உள்ளே விளையாட்டு ஆரம்பிக்கும் ஆரவாரம் கேட்கிறது. பெண்கள் கெஞ்சிப் பார்க்கிறார்கள். இராணுவ வீரன் மறுக்கிறான். உயர் அதிகாரி வந்ததும் உங்களை ஒப்படைக்க வேண்டும் அமைதியாய் இருங்கள் என்கிறான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு இராணுவ வீரன் ஒரு இளைஞனோடு வருகிறான். அருகில் வந்து அவன் சொன்ன பிறகு தான் தெரிகிறது அது இளைஞன் அல்ல ஆண் வேடத்தில் வந்த இன்னொரு பெண்.
புதிதாய் வந்தவள் துணிவு மிக்கவளாக இருக்கிறாள். சிகரெட்டை பற்ற வைக்கிறாள். இராணுவ வீரன் தடுத்தும் கேட்க மறுக்கிறாள். அங்கிருக்கும் இராணுவ வீரன் ஒருவன் நுழை வாயிலில் வழியே விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
எல்லோரும் சேர்ந்து அவனை விளையாட்டை வருணனை செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள். வேறு வழியின்றி வருணனை செய்கிறான்.
இதற்கிடையில் ஒரு பெண் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்கிறாள். இங்கு பெண்கள் கழிவறை கிடையாது என்று இராணுவ வீரன் மறுக்கிறான். என்னால் முடியாது இப்படியே இங்கேயே சிறுநீர் கழித்து விடுவேன் என்கிறாள். வேறு வழியின்றி ஆண்கள் கழிப்பிடத்திற்கு ஒரு இராணுவ வீரனோடு அனுப்பி வைக்கப்படுகிறாள். அவள் பெண் என்பது தெரியாமல் இருக்க முதலில் பார்த்த இளம்பெண் கையில் வைத்திருக்கும் விளையாட்டு வீரனின் போஸ்டரை அவள் முகத்தில் கட்டி அழைத்துப் போகிறான்.
ஆண்கள் எல்லோரையும் வெளியேற்றி, உள்ளே நுழைபவர்களை தடுத்து அந்தப் பெண்ணை கழிவறைக்குள் அனுப்புகிறான். ஏன் உள்ளே விட மறுக்கிறாய் என்று கேட்பவரிடம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருக்கிறான்.
கூட்டத்தை அவன் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண் தப்பித்து ஸ்டேடியத்தின் கூட்டத்திற்குள் ஓடிவிடுகிறாள். உடன் வந்த இராணுவ வீரன் தேடிக் கொண்டிருக்கிறான்.
இதற்கிடையில் பெண்களுக்கு பாதுகாப்பாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் இராணுவ வீரனைப் பார்க்க இரண்டு இராணுவ வீரர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் அவனுக்குத் தெரிந்தவன். இன்னொருவனைப் பார்த்து இவன் யார் என்று கேட்கும் போது தான் தெரிகிறது இராணுவ உடையில் இருப்பது பெண் என்று.
காத்திருக்கும் பெண்கள் அவளைப் பாராட்டுகிறார்கள். சாதரண வீரனின் உடையைப் போட்டுக் கொண்டு அதிகாரிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்ததால் தான் பிடிபட்டேன் என்கிறாள் அவள். ஆட்டத்தின் முதல் பகுதியைப் பார்த்து முடித்தது பெருமையாய் இருக்கிறது அவளுக்கு. அவளின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டு இருக்கிறது.
கூட்டத்தில் ஓடிப் போன பெண்ணைப் பிடிக்க முடியாமல் தேடி நேரம் கழித்து இராணுவ வீரன் திரும்புகிறான்.
உயர் அதிகாரி வருவதற்குள் எப்படி அவளைப் பிடிப்பது, இல்லை என்றால் தண்டனை நிச்சயம் என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறிது நேரத்திற்குப் பின் அந்தப் ஓடிப் போன பெண்ணே திரும்பி வருகிறாள். என்னால் உங்களுக்கு தண்டணை கிடைக்கக் கூடாது என்று தான் வந்தேன் என்கிறாள்.
மகளைத் தேடிக் கொண்டிருந்த தந்தை இராணுவ வீரர்களின் பிடியில் இருக்கும் மகளைப் பார்க்கிறார். கோபப் பட்டு அடிக்கப் போகிறார். இராணுவ வீரன் தடுக்கிறான்.
சிறிது நேரத்திற்கு பிறகு அப்பா இராணுவ வீரனிடம் மகளை கூட்டிச் செல்லலாமா? என்று கேட்கிறார். இராணுவ தலைமை அதிகாரி வந்த பின் தலைமை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டு பிறகு தான் அனுப்ப முடியும் என்கிறான். வேறு வழியின்றி அப்பா கிளம்புகிறார்.
ஆட்டம் முடியும் முன் தலைமை அதிகாரி வருகிறான். அனைவரையும் வேனில் ஏறச் சொல்கிறான்.
நடந்து போகும் நுழைவாயிலின் இடைவெளியில் மைதானம் தெரிகிறது. அப்போதும் தலைமை அதிகாரி தலையை குனிந்த படி வாங்க என்று சொல்கிறான். அதை கண்டு கொள்ளாமல் நடக்கும் போதே சில விநாடிகள் உள்ளே பார்க்கிறார்கள்.
வேனில் 6 பெண்களோடு பட்டாசு வைத்திருந்ததால் சந்தேகத்தால் பிடிக்கப் பட்ட சிறுவன் ஒருவனும் வருகிறான்.
விளையாட்டு முடிய இன்னுக் கொஞ்ச நேரமே இருக்கிறது. வானொலியின் நேரலை கேட்க வேண்டும் என்கிறார்கள் பெண்கள். அதன் ஆண்டெனா சரியில்லாததால் கேட்க முடியவில்லை. இராணுவீரன் வெளியே கை நீட்டி அதை ஆடாமல் பிடித்துக் கொள்ள விளையாட்டின் வருணனையைக் கேட்கிறார்கள். ஈரான் வெல்கிறது.
வழியெங்கும் சந்தோச கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.. வேனில் உள்ள சிறுவன் உள்ளேயே பட்டாசு வெடிக்கிறான். பெண்களும் உடன் வெடிக்கிறார்கள். முதன் முதலில் பார்த்த இளம்பெண் மட்டும் அழுகிறாள். மற்ற பெண்கள் விசாரிக்கிறார்கள்.
சென்றமுறை ஜப்பானுக்கும், ஈரானுக்கும் நடைபெற்ற போட்டியின் போது 6 பேர் இறந்து போனார்கள். அதில் ஒருவன் எனது நண்பன். அவன் இருந்திருந்தால் கட்டாயம் இன்று போட்டியைப் பார்த்திருப்பான். அவனுக்காகத் தான் போட்டியை பார்க்க ஆசைப்பட்டேன் என்று அழுகிறாள். இப்போது ஈரான் வெற்றி அடைந்து விட்டது. உன் நண்பன் இருந்தால் மகிழ்ச்சி அடைவான். நீயும் சந்தோசமாய் இரு என்று அவளை ஆறுதல் படுத்தி அவளையும் சிரிக்க வைக்கிறார்கள்.
வழியில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வேன் நிறுத்தப்படுகிறது. உணவுப் பண்டங்களோடு ஒருவன் உள்ளே ஏறி அனைவருக்கும் கொடுக்கிறான். கொண்டாடிக் கொண்டிருக்கும் மக்களில் ஒருவன் இராணுவீரனை அழைக்கிறான். கூடவே பெண்கள் அனைவரும் இறங்கி அவர்களது உற்சாகத்தில் பங்கேற்கிறார்கள்.
அத்தோடு முடிகிறது திரைப்படம்.
எந்த கோஷமும், கோபப்படுத்தலும் இல்லாமல் ஒரு விமர்சனப்படம்.
இடையில் நாங்கள் ஏன் ஸ்டேடியத்திற்குள் போகக் கூடாது என்று கேட்கும் பெண்களிடம். உள்ளே ஆண்கள் இருக்கிறார்கள். அதனால் பெண்கள் போகக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு பெண், திரையரங்கில் மட்டும் ஏன் ஆண்களோடு பெண்களையும் அனுமதிக்கிறீர்கள். அதுவும் இருட்டுக்குள் என்று கேட்கிறாள். போகிற போக்கில் இப்படி சொல்லப்படுகிற அத்தனை வார்த்தைகளும், செயல்களும் அர்த்தம் பொதிந்ததாய் இருக்கின்றது இத்திரைப்படத்தில்.
லட்சம் பேர் கூடி இருக்கின்ற ஸ்டேடியத்தில் அந்தப் பெண்களோடு நாமும் வெறு சப்தமாகவே விளையாட்டைக் காண்கிறோம் படம் முழுவதும்.
பெர்லின் உலகப் படவிழாவில் பெற்ற வெள்ளிக்கரடி விருது பெற்றது இப்படம். மேலும் பல படவிழாக்களிலும் விருதுகள் பெற்றுள்ளது.
படைப்பு என்பது வெறு பொழுது போக்கு மட்டுமல்ல என்பதை அறிந்த ஜாபர் பனாஹி என்ற முதுகெலும்புள்ள இயக்குநரின் திரைப்படம் இது.
இதன் பிறகு 2010 ல் ஈரானிய அரசால் அரசியல் காரணங்களுக்காக பனாஹி கைது செய்யப்பட்டார். 6 வருடம் சிறை தண்டனை. 20 வருடங்களுக்கு திரைப்படம் எடுக்க, கதைகள் எழுத தடை. அதோடு நாட்டை விட்டு வெளியே செல்லத் தடை, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கத் தடை என்று தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது உலகம் முழுவது உள்ள திரைப் படைப்பாளிகள், பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், என்று அனைத்து தரப்பும் பொங்கி எழுந்து கண்டனம் தெரிவித்தார்கள். அதன் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 2011 ல் நடக்க இருக்கும் பெர்லின் திரைபட விழாவின் நடுவர்களில் ஒருவராக பனாஹிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் வராவிட்டாலும் அவருக்கான இடம் அப்படியே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 5 படங்களும் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன.
இத்தனை கட்டுப்பாடுகள் மற்றும் போராட்டங்களோடு தான் உலகின் சிறந்த இயக்குநர்கள் தங்களின் அழிவற்ற படைப்புகளை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பின்னூட்டமொன்றை இடுக
இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
மறுமொழியொன்றை இடுங்கள்