முள்ளி மந்தின் பாரம்பரிய தோடர் குடில்களைப் பார்க்க வாய்த்தது. பிரம்பு, கம்புகள், பலகைகள் மற்றும் மண்ணால் எழுப்பப் பட்ட குடிசைகள். அவர்களுக்கே ஆன தொழிற் நுட்பமும் தனித்துவ அழகியலையும் கொண்டிருந்தது அது. நமது கிராமத்து குடிசைகள் போலில்லாது வானவில்லின் அரை வட்டதிலான கூரை அமைப்பு.
இதைக் கட்டி 80 வருடங்கள் கடந்து விட்டது என்று சொன்னார்கள். ஒன்றரை அடிலிருந்து இரண்டு அடிக்குள் தான் இருக்கும் நுழைவாயில். பெரும் பணிவு வாய்த்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். இயல்பாக அவர்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். முடியுமா என்று கேள்வி இருந்தாலும் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலில் கிட்டத் தட்ட படுக்கை நிலையில் உள்ளே நுழைந்தேன்.
இடது வசத்தில் கல்லிலும் மண்ணிலும் எழுப்பப் பட்ட ஒரு மேடு அது தான் அவர்களது கட்டில் மற்றும் படுக்கும் இடம். மிச்சமிருந்த மிகச் சிறிய இடத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி பாத்திரங்கள் மற்றும் பொருட்களை அடுக்கி வைத்திருந்தார்கள். கீழே இருவர் படுக்கலாம். நான்கு பேர் அமரலாம். பழங்குடி வாழ்வின் எளிய வாழ்வின் காட்சியாக இருந்தது அந்தக் குடில்.
அந்த வீட்டில் இருந்த பெண் கைகுழந்தையுடன் இருந்தார். எழாவது படிக்கிற மகள் அவருடன் இருந்தாள். இன்னொரு மகளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள். கல்யாணமான பெண்ணின் புகைப்படம் மட்டுமே அங்கிருந்த நாகரீகப் பொருள்.
மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள் ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த இரண்டு குடில்கள் தவிர மற்றவை சிமெண்ட் கட்டிடங்கள். அவைகளும் ஒரு அறை இரண்டு அறைகள் கொண்டவை தான். ஒரேஒரு வீடு மட்டும் கட்டில் டைனிங் டேபிளுடன் இருந்தது.
இதே பாரம்பரிய குடிலில் அமைப்பில் எருமை உருவம் வரையப் பெற்ற மற்றோரு புகைப்படம் இருக்கிறதே, அது தான் அவர்களின் கோவில். என்ன கடவுளை வணங்குகிறார்கள் என்று கேட்டால் பஞ்ச பாண்டவர்கள் என்கிறார்கள்.
அங்கிருக்கும் குழந்தைகள் அனைவரும் படிக்கிறார்கள் வேறு ஊர்களில் இருக்கும் பள்ளிகளில்.
மூத்தவர்கள் இறக்கும் போது கேட்டுக் கொண்டால் அவர் இறப்பை எருமை பலிகொடுத்து கொண்டாடுவார்கள் என்று சொன்னார்கள்.
அவர்களின் கலாச்சார உடையில் உள்ள போர்வையின் வடிவங்களை அவர்களே செய்கிறார்கள் ( எம்பிராய்டரி )
அந்தப் புகைப்படத்தில் நான் கையில் வைத்திருப்பது அவர்களது மோர் கடையும் சாதனம். மூங்கிலில் செய்யப் பட்டது அது.
தாயின் கர்ப்ப வயிற்றுக்குள் மீண்டும் போய் திரும்பிய அனுபவமாக இதை சொல்லலாம். இங்கிருந்து தானே அனைவரும் துவங்கினோம்.
எல்லா வசதிகளையும் தூய்த்து களித்து உலகை குப்பை மேடாக்கி விட்டு உலகம் மக்கள் மொத்தமும் பழங்குடியினரின் எளிமை நோக்கி திரும்கிற காலம் ஒன்று வரும் என்று தோன்றுகிறது.