நுழை வாயிலில்…

youngdirector_450x4301

சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.

சென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் உணவு இடைவேளை விட்டு விடுவார்கள். அப்போது தான் அவரைப் பார்க்க வேண்டும்
என்று அறிவுறுத்தப் பட்டிருந்தேன். என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற வினாடிக்காக பதட்டமும், பரபரப்பும், சற்று சந்தோசமும், வருத்தமுமாக கலவையான எண்ண ஓட்டங்களோடு காத்திருந்தேன்.

இவ்வளவு அருகில் இருந்து இவ்வளவு நேரம் படப்பிடிப்பை பார்க்கக் கிடைத்தே பாக்கியமாய் உணர்ந்தேன்.

இடையில் கிடைத்த இடைவேளையின் போது எனக்குப் பக்கத்தில் வந்து நின்றார் இயக்குனர். இணை இயக்குனர் ஒருவரும் உடன் இருந்தார். வேடிக்கையாய் அவர்கள் பேசிய ஒரு விசயம் என் காதிலும் விழுந்ததில் அனிச்சையாய் சிரித்துவிட்டேன்.

இயக்குனரும், உதவியாளரும் திரும்பிப் பார்த்தார்கள்.
படப்பிடிப்புக்குத் தொடர்பில்லாத யாரிவன் என்று பார்த்தார்கள். நான் மனசுக்குள் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குத் தெரிந்தவனாகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டேன்.

அப்போது தான் ‘ சார் யாரு?’ என்றார் இயக்குனர் என்னைப் பார்த்து. யாரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னதும் பிரேக்கில பாருங்க என்று சிரித்த படி சொன்னார். எதற்காகவென்று அவர் கேட்கவில்லை. அதற்குள் ‘ரெடி ரெடி’ ஒளிப்பதிவாளர் குரல் கொடுக்க இயக்குனரும் இணை இயக்குனரும் அவசரமாய் கிளம்பினார்கள்.

அது காவல்நிலைய செட். அவ்வளவு இயல்பாய் இருந்தது அது. ஒருமுறை சுவரில் சாயும் போது அது துணி என்பது உரைத்தது. சில இடங்களில் காட் போர்டு சுவர்கள். எது நிசம் எது பொய் என்பதை அறிய முடியாமல் மர்மமாய் இருந்தது.

டிராலி, கிரேன், கிளாப், மைக், நாகரா, லைட்டுகள் என்று ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடிரென்று ‘பிரேக்’ என்று உரத்த சத்தம் கேட்டது. உணவு இடைவேளை
அறிவிக்கப்பட்டாயிற்று கல்லுக்கு உயிர் வந்தது போல பரபரப்பாகிவிட்டேன்.

உடலுக்குள் ரத்தம் வேகமா ஓடத் துவங்கியது. இயக்குனருடன் பேசிய படி கதாநாயகன் செட்டுக்கு வெளியே நடக்கத் துவங்கினார். நானும் ஓடிப் பின் தொடர்ந்தேன்.

செட்டுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. ‘தலைவர் வாழ்க’ கோஷம் முழங்கியது. கதாநாயகன் வந்ததும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஆளூயர மாலைகள் போட்டார்கள். போட்டோ எடுத்தார்கள். நான் யாரென்று தெரியாத அவரை இந்த கூட்டத்தில்
எப்படி சந்திக்கப் போகிறேன் என்று கலங்கினேன். பசியை வெளிக் காட்டாமல் ரசிகர்களிடம் பேசினார். ஒரு வழியாக கை கூப்பி வணங்கி விடை பெற்றார்.

அவரது வெளிநாட்டுக் காரை நோக்கி அவரும் இயக்குனரும் நடந்தார்கள். நான் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பேசிய படியே இருந்ததால் தொந்தரவு செய்து விடக் கூடாது என்று அமைதியாய் பின் நடந்தேன். அதை நடை என்று
சொல்ல முடியாது நடைக்கும் ஓட்டத்திற்கும் இடைப்பட்ட ஒன்று.

அவர்கள் காரை நெருங்கி விட்டார்கள். என் முகம் தெரியும் படியாய் அவருக்கு முன்னே சென்று ‘சார்’என்றேன். கடிதத்தோடு நிற்கும் என்னைப் பார்த்து ஒன்றும் புரியாத முகபாவத்தோடு ‘ என்ன’ என்றார். ‘எஸ்டேட் அரவிந் சார் அனுப்புனாரு’ என்றபடி கடிதத்தை கொடுத்தேன்.

‘ம்.. போன் பண்ணிருந்தான்’ என்ற படி கடிதத்தைப் படித்தார். கடிதத்தைப் படித்து முடித்த உடன் ‘என்ன படிச்சிருக்கீங்க’ என்றார். ‘பீகாம்’ என்றேன். பெயரைக் கேட்டார். சொன்னேன். சிறிது
யோசனைக்குப் பின் இயக்குனரை பெயர் சொல்லி கூப்பிட்டார். இயக்குனர் பவ்வியமாய் ‘சார்’ என்றார். ‘இந்தப் பையனை உங்க அஸிஸ்டென்டா வச்சிக்கங்க’ என்றார். கிட்டத் தட்ட உத்தரவு போலத் தான் இருந்தது. ‘சரிங்க சார்’ என்று தலை வணங்கினார் இயக்குனர்.

என் பெயர் சொல்லி கூப்பிட்டார் கதாநாயகன். அடக்கமாய் பார்த்தேன்.’நல்லா ஓர்க் பன்ணுங்க. அடுத்தடுத்து சீக்கிரமா வளரனும். போய் சாப்பிடுங்க மதியானத்தில இருந்து ஓர்க் பண்ணுங்க. பெஸ்ட் ஆப் லக்’ என்று சொல்லி கை குலுக்கினார்.
காரில் ஏறி கிளம்பினார்.

நடந்ததை நம்ப முடியாமல் கார் போவதைப் பார்த்துக்
கொண்டிருந்தேன்.

ஒரு கடிதம். ஒரு வார்த்தை.ஒரு கணம். ஒருவனின் வாழ்வையே தலைகீழாக்கி விட்டது.

‘ டே’ என்று குரல் கேட்டது.

என்னை யார் இங்கு அப்படி கூப்பிடப் போகிறார்கள் என்று நினைத்த படி என் சந்தோசத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

‘ டே உன்னைத்தான்டா’ என்றது குரல் பின்னிருந்து. சந்தேகத்தோடு திரும்பினால் அழைத்து இயக்குனர். அதிர்ச்சியாய் இருந்தது.

‘உன் பேர் என்னடா’ என்றார்.

பதில் சொன்னேன்.

‘கிளாப் எப்பிடி அடிகிறதுன்னு பாத்துக்க நாளைல இருந்து நீ தான் அடிக்கணும் சீக்கிரம் சாப்பிட்டு வாடா’ சொல்லிவிட்டு போனார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சார்ன்னு கூப்பிட்டவர் அத்தனை சீக்கிரமாய் டே க்கு இறங்கி விட்டாரே என்று யோசித்தேன்.

இத்தனைக்கும் இயக்குனரும் இளையவர் தான். ஒரு வேளை உதவி இயக்குனர்களை இயக்குனர்கள் அப்படித் தான் கூப்பிட
வேண்டுமோ என்னமோ? கட்டாயம் அப்படியெல்லாம் இருக்காது. தன்னம்பிக்கை அற்ற சிலர் தன் அதிகாரத்தை நிறுவும் பொருட்டு செய்யும் அல்ப தந்திரம் அது என்பதை விளங்கிக் கொள்ள
அதிக நேரம் ஆகவில்லை.

சினிமாவில் எனக்கான முதல் பாடமாய் இதிலிருந்து துவங்கலாம் என்று தோன்றியது. சில பாடங்கள் பின்பற்றுவதற்காக சில பாடங்கள் பின் பற்றாமல் இருக்க என்பதை நினைத்த படி செட்டுக்குள் நுழைந்தேன்.

ஹைகூத் தோட்டம் – 16

green-yard

செழித்த பசுமையில்

அலங்காரப் புல்வெளி

சுவரொட்டி மேயும் பசு

மரணத்தின் அறிமுகம்

நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.

நானென்ன புத்தனின் தந்தையா? கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வயதான மனிதரின் சவம். மாலை அலங்காரத்துடன் பாடையில் பயணித்துக் கொண்டிருந்தது.

கூட்டம் கடந்ததும் வண்டியைக் கிளம்பினேன். முன்னால் அமர்ந்திருந்த அன்புமதி திரும்பிப் பார்த்து
‘ஏம்பா அந்த தாத்தாவை அப்படி தூக்கீட்டு போறாங்க?’ என்றாள்.

‘அவரு இறந்து போயிட்டாரு’ என்றேன்.

‘இறந்து போறதுன்னா’ உடனே அடுத்த வினா. எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.

‘ இறந்து போயிட்டாங்கன்னா அவங்களால மூச்சு விட முடியாது. பேச முடியாது, நடக்க முடியாது, ஒன்னுமே பண்ண முடியாது. தக்காளிப் பழம் கெட்டுப் போற மாதிரி அதற்கப்புறம் தூக்கிப் போட வேண்டியது தான். ரெம்ப வயசானாலோ இல்ல ரெம்ப உடம்பு சரியில்லன்னாலோ இறந்திருவாங்க.’

இதற்கு மேல் பெரிய விளக்கங்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் நிறுத்தினேன்.

புரிந்ததா இல்லையா தெரியவில்லை அடுத்த கேள்விக்குத் தாவினாள்.

‘ இப்ப அவங்கள எங்க எடுத்திட்டு போறாங்கப்பா? ‘

‘ சுடுகாட்டுக்கு ‘

‘ அங்க போயி என்னப்பா பண்ணுவாங்க?’

‘ மண்ணு தோண்டி புதைப்பாங்க, இல்லன்னா எரிப்பாங்க’

‘ அய்யோ.. அப்ப அவங்களுக்கு வலிக்காதாப்பா ?’

‘ அதுதான் இறந்துட்டா ஒன்னுமே தெரியாதே. கடைல சிக்கன் வாங்கீட்டு வந்து வீட்டுல சமையல் பண்ணுறோம்ல கோழி கத்துதா, அதுக்கு வலிக்குதா, ஏன்னா அது ஏற்கனவே செத்துப் போச்சி. அது மாதிரி தான் .’

புரிந்திருக்கும் போல அமைதியாய் கொஞ்ச நேரம் இருந்தாள் அன்புமதி.

என்ன சிந்திப்பாளென்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

‘ அப்பா நீங்களும் செத்திருவீங்களாப்பா?’ என்றாள் வேகமாக.

‘ ஆமா பாப்பா, எல்லாரும் ஒரு நாள் செத்துத் தான் ஆகணும்.’ நானும் சாவேன் என்றதும் அன்புமதியின் முகம் சிறிது வாடியது.

‘ நீங்க செத்துட்டா அப்பாவுக்கு நான் என்ன பண்ணுறது.’ என்றாள் வருத்தமாக. அடுத்த என்னுடைய பதிலுக்காக காத்திருந்தாள் முகத்தைப் பார்தத படி.

‘ அன்புமதி பெருசானதுகப்புறம் , அப்பாவுக்கு நல்லா வயசானதுகப்புறம் தான் சாவேன் குட்டி’ என்றேன்.

ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் சட்டென்று ‘அப்பயும் வயசானாலும் நீங்க சாகக் கூடாது சரியாப்பா’ என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருந்தாள்.

நான் ஒன்றும் சொல்லாமல் நெகிழ்ந்த ஒரு முத்தத்தை அன்புமதியின் பிஞ்சுக் கன்னத்தில் கொடுத்துவிட்டு அமைதியாய் வண்டியை ஓட்டத் துவங்கினேன்.

மனசு நிறைந்திருந்தது.

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்