நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும் இன்னும் நினைவில் இருக்கிறது பதட்டமான அந்த இரவுப் பொழுது. நான் ஏறிய பாடாவதிப் பேருந்து ஆமை வேகத்தில் இரவு 11.30 க்கு பொள்ளாச்சி வந்து சேர்வதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பே எனது ஊருக்கான கடைசி வண்டி கிளம்பி இருந்தது. இனி அதிகாலை 5 மணி வரை காத்திருப்பது தவிர வேறு வழி இல்லை. பேருந்து நிலையத்தில் கூட்டம் நிறைய இருந்தது. பெரும்பாலும் என்னைப் போல முழுஆண்டுத் தேர்வு முடிந்து கிளம்புகிற மாணவ மாணவியர்களும், அவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்களின் கூட்டமுமே நிரம்பி இருந்தது .
என்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை.இத்தனைக்கும் எனக்கு வயது 11 தான். வத்தலக்குண்டில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தின் பின் பொள்ளாச்சி வந்து சேர்ந்திருந்தேன். இன்னும் நான்கு மணி நேர மலைப் பயணம் பாக்கி இருந்ததது நான் என்னுடைய வீட்டை அடைவதற்கு. முதல் நாள் ஹாஸ்டலில் சேர்க்கும் போது அப்பா வந்ததோடு சரி. இடையில் ஒரு முறை பக்கத்து ஊருக்கு ஏதோ கல்யாணத்திற்கு வந்த போது முகம் காட்டி விட்டு போனார். மற்றபடி எங்களின் தொடர்பு என்பது எனது கண்ணீர்க் கடிதங்களும், பதிலுக்கு வரும் அறிவுரைக் கடிதங்களும், எல்லாம் உன் நன்மைக்குத் தான் என்று அம்மா எழுதும் ஆறுதல் கடிதங்களும் தான்.
காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளின் போது பக்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு போய் விட்டேன். பாட்டியின் ஊருக்கு இரண்டு மணி நேரத்தில் போய் விடலாம். பாட்டி வீட்டிற்கு காலாண்டு விடுமுறைக்குப் போனது தான் யார் துணையும் இல்லாமல் நான் மட்டும் போன முதல் பயணம். அதனைப் பாராட்டி அப்பா அம்மா கடிதமெல்லாம் எழுதி இருந்தார்கள். அந்த தைரியத்தில் தான் தனியே வரச் சொல்லி உத்தரவு.
பஸ்சில் தூங்கிய படியே வந்திருந்ததால் தூக்கம் வரவில்லை. எனது பேக்கை சரி பார்த்துக் கொண்டேன். அங்கங்கு பெரிய பையன்கள் கூட்டம் கூட்டமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் கூட்டம் ஒன்று வட்டமாய் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. சிலபேர் தரையிலேயே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிமென்ட் பெஞ்சில் மூன்றுபேர் உட்கார்ந்த படியே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த சிறிய இடைவெளியில் உட்கார்ந்து கொண்டேன். அந்த இரவிலும் டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு எதேச்சையாக கால் சட்டைப்பையில் கைவிட்டவனுக்கு பகீர் என்றது. அதில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. இருந்த பணத்தையெல்லாம் அதில் தான் வைத்திருந்தேன். ஹாஸ்டலில் சமையல்காரராய் இருந்த எனது தாத்தாவிடம் தான் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பேன். நான் மட்டுமல்ல, அங்கிருக்கும் எல்லா மாணவர்களும் அவரிடம் தான் கொடுத்து வைப்பார்கள். 25 பைசாவுக்கு மேல் அவரிடம் இருந்து காசு வாங்கி விட முடியாது. அதுவும் ஏன் எதற்கென்று நூறு கேள்விகளுக்குப் பிறகே கைக்கு வரும். ஊருக்கு கிளம்புவது மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நோட்டாக வாங்க முடியும். கிளம்பும் போது இருபதும் பத்துமாய் முப்பது ரூபாயை கைகளில்கொடுத்து பத்திரமா வச்சுக்கோன்னு சொல்லிக் கொடுத்தார்.
பஸ்சில் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியது போக மீதிச் சில்லறையையும், இருபது ரூபாயையும் கால்சட்டைப் பையில் தான் வைத்தேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது பார்த்தால் காணவில்லை. தூங்கிக் கொண்டு வந்ததில் சீட்டில் ஏதாவது விழுந்துவிட்டதா? பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனின் முழியே சரியில்லை,திருட்டு முகத்தோடு ஒரு ஆள். அவன் எடுத்திருப்பானோ? அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. எப்படி ஊருக்குப் போவது? பொள்ளாச்சியில் யாரையும் தெரியாது. ஒன்றும் தோன்றவில்லை அழுகையாய் வந்தது. கொஞ்ச நஞ்சமிருந்த தூக்கமும் ஓடிப் போய்விட்டது. எனது துன்பத்தை சொல்லி கொள்ள கூட யாரும் இல்லை. இனி என் கதி என்ன? நான் என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் எதுவும் புரியாமல் பயமாய் இருந்தது. எட்டு ரூபாய் இருந்தால் கூட போதும் ஊர் போய் சேர்ந்து விட முடியும்.
மனதில் தாறுமாறாக கற்பனைகள் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருந்தது. அந்த குளிர் இரவிலும் வியர்த்துக் கொட்டியது. அப்பா அம்மா மீது கோபம் கோபமாய் வந்தது. அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார்கள் , ஆனால் நானோ நடு இரவில் மாபெரும் ஆபத்தின் நடுவில் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறேன்.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல குழம்பிய நீரின் தெளிதலைப் போல ஒரு யோசனை தோன்றியது. அதன் விளைவுகளைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தாலும் உடனே செயல்படுத்திப் பார்க்கும் முடிவோடு உடனே எழுந்து கொண்டேன். அங்கு இருப்பவர்களை சுற்றிப் பார்த்தேன். என்னை விடவும் சிறியவனாய்த் தோன்றிய ஒருவன் அவனது தந்தையுடன் நின்று கொண்டிருந்தான். அவரிடம் போய் நின்றேன், என்ன என்பது போல் பார்த்தார். ‘ஆறாம் வகுப்பு பழைய புத்தகம் இருக்கு, வேணுங்களா?’ கேட்ட வேகத்தில் ‘ வேணாம்பா’ என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி விட்டு திரும்பிக் கொண்டார். எனக்கு கண் நிறைந்தது.
ஒன்றும் செய்யத் தோன்றாமல் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன். சிறிதும் பெரிதுமாக மாணவிகள் சில பேர் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. யோசிக்காமல் உடனே அங்கே போனேன் அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டு என்னையே பார்த்தார்கள். சிறியவளாய் தெரிந்தவளிடம் ‘ஆறாவது பழைய புத்தகம் ஏங்கிட்ட இருக்கு வேணும்னா வாங்கிக்குங்க’ என்றதும் அனைவரும் சேர்ந்து சிரித்தார்கள். ‘குள்ளமா இருக்குறதுனால அவள ஆறாவதுன்னு நினச்சுட்டியா? அவதான் இங்க இருக்குறதில்லயே பெரியவ’ சிரித்து சிரித்துச் சொன்னாள் ஒருத்தி. அனைவரும் சேர்ந்து பெரிதாகச் சிரிதார்கள். என்ன பிரச்சனை என்று கூட யாரும் கேட்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. அந்த கூட்டத்தை விட்டு விலகி கொஞ்சம் தள்ளிச் சென்று நின்று கொண்டேன்.
தெரிந்தவர்கள் யாரவது வந்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு அங்கிருக்கும் எல்லாரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். யாரும் இருப்பது போல தெரியவில்லை. வீட்டுக்கு எப்படித் தகவலை தெரிவிப்பது? நாளைக்கும் இங்கேயே இருக்க நேர்ந்து விட்டால் எங்கே குளிப்பது? எங்கு சாப்பிடுவது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் வந்து வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. விட்டால் சத்தமிட்டு அழுதுவிடுவேன் போலிருந்ததது. அப்போது தான் ‘தம்பி’ என்று கூப்பிட்ட படி ஒரு அண்ணன் என் கைகளைப் பிடித்தார். கலங்கிய கண்களுடன் பார்த்தேன். பனிரெண்டாம் வகுப்பு அல்லது கல்லூரி முதலாண்டு படிக்கக் கூடிய வயது இருக்கும். நல்ல சிகப்பான முகம், வளரத் துடிக்கும் மீசை.’ என்னப்பா எதாவது பிரச்சனையா? அப்ப இருந்து ஒனனப் பாத்துட்டு தான் இருக்கேன். என்ன சொல்லு’ என்ற படி என் முகத்தை அவரது விரல்கள் நிமிர்தியது. அதுவரை கட்டி வைத்திருந்த அழுகை கண்களைத் தாண்டி சூடாய் இறங்கத் துவங்கியது. விம்மலோடு எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல பொறுமையாக கேட்டு ‘மொதல்ல கண்ணத் தொட, இதுக்குப் போய் எதுக்கு அழுகுற? இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு கடைசி பஸ் வரும், என்னோட வா, காலைல உன்னை அனுப்பி வெக்கிறேன். எங்க ஊர்ல இருந்து ஒரு மணி நேரம் தான் உங்க வீட்டுக்கு.’ எனச் சொல்லிய படி என் கண்களைத் துடைத்து விட்டு ‘எங்க சிரி’ என்றதும் மெல்லச் சிரித்தேன்.
அவரோடு அந்த பஸ்சில் அவரது வீட்டுக்குப் போனேன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு அது. அந்த அண்ணின் அப்பா அம்மா என்னோடு அன்பாய் பேசினார்கள். குளிருக்கு இதமாய் ஹீட்டர் போட்டு விட்டு போர்த்திக் கொள்ள ஒரு அருமையான கம்பளி கொடுத்தார்கள்.
காலையில் நானாய் எழுந்திருக்கும் வரை எழுப்பவில்லை. எழுந்தததும் ஆவி பரக்க காபி, சூடுநீர்க் குளியல், சுவையான காலை உணவிற்குப் பின் கிளம்பினேன். ‘ எப்போது வந்தாலும் இங்க வரணும்’ என்று சொல்லி அண்ணனின் அப்பா, அம்மா வழி அனுப்பினார்கள்.
அந்த அண்ணன் கண்டக்டரிடம் டிக்கெட் எடுத்து என்கையில் கொடுத்து கூடவே 5 ரூபாயை நான் மறுத்தும் சட்டைப்பையில் வைத்தார்கள். கண்டக்டரிடம் ‘பார்த்து இறக்கி விடுங்கள்’னு சொல்லி விட்டு பஸ் கிளம்பும் வரை இருந்து கை அசைத்தார்கள். நானும் கண் கலங்க கை அசைத்தேன்.
வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் சொன்னேன். கதை போல திரும்பத் திரும்ப கேட்டார்கள். ‘யாரோ மகராசன், நல்லா இருக்கணும்’ என்று அம்மா சொன்னார்கள். விடுமுறை முடிந்து திரும்பும் போது மீண்டும் தனியாகவே 8 மணி நேரம் பயணித்து விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.
அதற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை அந்த மனிதர்களைச் சந்திக்கவே இல்லை. உடன் பயணிக்கும் போது அந்த அண்ணனின் பெயரைக் கேட்டேன். இப்போது அது ஞாபகம் இல்லை. அந்த அண்ணனின் முகம், அவரின் அப்பா அம்மாவின் முகங்கள் எதுவும் ஞாபகமில்லை. நன்றி அல்லது தேங்ஸ் என்று ஏதாவது ஒன்றை அந்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் சொன்னேனா என்பது கூட நினைவில் இல்லை. அவர்கள் இப்போது எங்கு வசிக்கிறார்களோ? அவர்களுக்கு அந்த சம்பவம் இன்னும் நினைவில் இருக்குமா? ஒரே ஒரு முறை பார்த்த இந்த முகம் ஞாபகத்தில் இருக்குமா? யாராவது எங்காவது அந்த அண்ணன் நான் தான் என்று சொல்லமாட்டார்களா? மீண்டும் ஒரு முறை மறக்க முடியாத படி அந்த முகத்தை கண்களுக்குள் பத்திரப் படுத்திக் கொள்ள மாட்டேனா? என்று ஏக்கமாய் இருக்கும் அடிக்கடி.
இப்படி ஏதோ ஒரு கட்டத்தில் யாரோ ஒருவர் வந்து நம்மை துயரங்களில் இருந்து, துன்பங்களில் இருந்து, ஆபத்தில் இருந்து கரையேற்றி விட்டு நாம் நமது நன்றியைத் தெரிவிக்கும் முன்பே ஒரு ஆசிர்வாதமான புன்னகைகளோடு விலகிப் போய் கொண்டே இருக்கிறார்கள். நன்றிகளையோ செய்த உதவிகான பிரதி பலன்களையோ எதிர்பார்க்காமல் மிக இயல்பாக தனது செயல்களின் மகத்துவத்தை அறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சிலரால் தான் உலகம் தனது புன்னகைகளை, சந்தோசத்தை, நிம்மதியை இன்னும் தொலைக்காமல் இருக்கிறது.
ஏப்ரல் 29, 2009
பிரிவுகள்: கதை, கதைகள் . குறிச்சொற்கள்:இலக்கியம், கதை, கதைகள், சிறுகதைகள், தமிழ், பொன்.சுதா . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: 1 பின்னூட்டம்