அங்காடித் தெரு தமிழ் திரையில் ஒரு அரிய சாதனை.
சவாலான ஒரு கதைக் களனை மிகுந்த அக்கறையோடும், கலை உணர்வோடும், அனைவரும் உணரும் வண்ணமும் சாதனையாக்கி இருக்கிறது அங்காடித் தெரு.
நாம் பலமுறை பார்த்த வாழ்வின் நம் பார்வை படாத இருள் பகுதிகளில் ஒளி பாய்ச்சி உண்மை உணர்த்துகிற படம்.
ரெங்கநாதன் தெருவில் பலமுறை நாம் பல்வேறு முகங்களை மட்டும் பார்த்துத் திரும்பி இருக்கிறோம். அவர்களுக்குள் இருக்கும் இதயத்தையும் பார்க்க வைத்திருக்கிறது இப்படம்.
கணக்கற்ற தடவைகள் அங்காடி தெரு என்று அழைக்கப்படும் ரெங்கநாதன் தெருவுக்குள்ளும், அதன் பிரமாண்ட கட்டிடங்களுக்குள் ஏறி, இறங்கி இருந்தாலும் எத்தனை பேர் உணர்ந்திருக்க முடியும் அந்த நுட்பமான உலகத்தை. அந்த தெருவின் வாழ்வை, வலியை, நம்பிக்கையை, காதலை, நட்பை, துரோகத்தை, அவை அனைத்தையும் நமக்கு காட்சிகளாக உணரத் தருகிறது ‘ அங்காடித் தெரு’.
இப்படத்தை பார்த்த பிறகு ரெங்க நாதன் தெருவுக்குள் நுழையும் மனிதன் முழுக்க முழுக்க தனது முந்தைய மனநிலையில் இருந்து முற்றிலும் மாறான மாறுதலோடே நடந்து கொள்ள முடியும்.
ரெங்க நாதன் தெருவில் லிங்குவையும், கனியையும் மட்டுமே இனி பார்க்க முடியும் நம்மால். சம்பளத்தின் நிமித்தம் நம்மிடம் பூக்கும் புன்னகைகளின் பின்னால் உள்ள வலிகளைகளையும், எத்தனை மணிநேரம் இப்படி நிற்கிறார்களோ என்ற உணர்தலையும் நம்மிடம் இன்னும் ஆழமாய் விதைத்திருக்கிறது படம்.
அந்த வியாபார உலகின் சிறு சிறு அங்கங்களைக் கூட போகிற போக்கில் ஹைகூவைப் போல, ஒரு சிறுகதை போல சொல்லிச் செல்கிறது அங்காடித் தெரு.
படம் பார்த்து திரும்பும் போது ஒரு நல்ல நாவலை படித்த திருப்தியுடன் திரும்ப முடிகின்றது.
இயல்பான நடிப்பு, உணர்ச்சிகரமான கதைக் களன், தொழிழ் நுட்ப நேர்த்தி, நல்ல படம் பண்ண வேண்டும் என்கிற அக்கறை, ரசிகர்கள் மேல் உள்ள நம்பிக்கை என்று தமிழ் திரையுலகம் தழுவி முத்தமிட்டு வரவேற்க வேண்டிய படம்.
இதன் வெற்றி தமிழ் திரையுலகம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிப்பது.
வசந்த பாலனின் அர்ப்பணிப்பிற்கும் , அவரோடு இணைந்து இயங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களை ரசிகர்கள் இப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அங்காடித் தெருவுக்கு வாழ்த்துக்கள்.