பெயர்க் காரணம்

824aa776135ed6068e3c56519034c870

“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.

நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.

‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.

அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் வீண் தான்.

அன்பும் அறிவும் ரெண்டும் இருந்தால் தான் அவங்க முழுமையான சிறந்த மனுசங்களா இருக்க முடியும். அதுனால தான் உனக்கு அன்பும், அறிவும் சேர்ந்த பெயராய் வைச்சிருக்கோம் ’ என்றேன்.

ரொம்ப கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு விநாடி நேர இடைவெளிக்குள் 7 வயது அன்புமதி கேட்டாள் “ நான் அப்பிடி இருக்கேனாப்பா?”

சொன்னதை முழுமையாய் புரிந்து அதற்குள்ளிருந்து ஒரு அர்த்தமுள்ள மிகப் பெரிய கேள்வியை மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்.

எனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..

சாமாளித்துக் கொண்டு உடனே சொன்னேன் ‘ நீ அப்பிடித் தான் இருக்கே ’

அன்புமதியின் முகத்தில் பெயரைக் காப்பாற்றி விட்ட ஒரு நிறைவு.

என் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது எனபதும். என்ன காரணத்தினால் என் அப்பா அம்மா வைத்தார்கள். என்பதை ஏன் இத்தனை வயது வரை அறிந்து கொள்ளத் தோன்றவில்லை என்ற கேள்வி எனக்குள் வளர்ந்து வீங்கிக் கொண்டிருந்தது.

ஒரு நண்பன்

6.13 angry man

அலுவலுகத்திற்கு தாமதமாகி விட்டதால் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கும் போது என் பெயரை உரிமையுடன் அழைத்தது ஒரு குரல். குரலின் திசையில் திரும்பும் முன் ஓடி வந்து என் கைகளை பற்றி கொண்டன உறுதியான கரங்கள். பார்த்தால்,முகம் மலர நிற்கிறான் தர்மராஜ்.அவனை பார்த்து எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். மீண்டும் அவனை சந்திப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

கோவை அரசுகலைக்கல்லூரி மாணவர் விடுதியில் முதலாண்டில் நான், தர்மராஜ், சுந்தர மூர்த்தி மூவரும் ஒரே அறையில் தங்கிப் படித்தோம். தர்மராஜ் வாட்ட சாட்டமாக இருப்பான். உடற்பயிற்சியில் உருவேற்றிய உறுதியான உடல்.அதற்கு நேர்மாறான குழந்தை மனசு.அவன் நல்ல குரல் வளமுள்ள பாடகனாக இருந்தான். எப்போது பாடச் சொன்னாலும் சிரித்த முகத்துடன் ரசித்து பாடுவான். அவனது விருப்ப பாடல் சங்கராபரணத்தில் உள்ள ‘சங்கரா’ என்ற பாலசுப்ரமணியத்தின் பாடல். அவன் அந்த பாடலை பாடும் போது கண்மூடி கேட்டால் நிஜபாடலைக் கேட்கிறோமோ என்று சந்தேகம் வரும்.

எனக்கும் சுந்தரமூர்த்திக்கும் எப்போதாவது சண்டை வரும் போது தர்மராஜ் தான் சமாதான படுத்துவான். நானும், தர்மராஜும் திரைப் படம் பார்ப்பது ஒரு நாளும் தவறாது. ஒரு முறை நான் அழைத்து போக வேண்டும் மறுமுறை அவன் அழைத்து போக வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் இருந்தது. கல்லூரி நேரம் தவிர ஒன்றாகவே சுத்துவோம். முதல் ஆண்டு முடிந்து கிளம்பும் போது அடுத்த ஆண்டும் ஒரே அறையில் தங்கி கொள்வதாய் முடிவு செய்தோம். யார் முதலில் வருகிறார்களோ அவர்களே நல்லஅறையாக பிடித்து வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு கிளம்பினோம்.

இரண்டாம் ஆண்டு துவங்கும் போது நானே முதலில் வந்து நல்ல அறையை பிடித்தேன். கல்லூரி துவங்கி ஒரு மாதமாகியும் தர்மராஜ் வரவில்லை. குழப்பமாய் இருந்தது, அவனது முகவரியோ தொலைபேசி எண்ணோ இல்லை. சேலம் பக்கதில் ஏதோ கிராமம் என்பது மட்டும் நினைவில் இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இரண்டு மாதமும் ஆகி விட்டது அறையில் தனியே தங்கி இருந்தேன்.

சுந்தர மூர்த்திதான் ஒருநாள் பதட்டதுடன் வந்து நம்பமுடியாத அந்த செய்தியை சொன்னான். தர்மராஜ் அவனது அண்ணியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு சிறையில் இருக்கிறான் என்று, அவனது வகுப்பில் யாரோ செய்தித்தாளில் பார்த்து விட்டு சொன்னதாய் கூறினான். ‘வேற யாரையாவது பார்த்துட்டு சொல்ல போறாங்க’ என்றதற்கு, ‘அவந்தான் காலேஜ் பெயரெல்லாம் போட்டு இருந்ததாம், தலை முதல் கால் வரை வெட்டு இல்லாத இடமே இல்லையாம்’ என்றான்.

மிகப்பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அப்படியா கோபம் வரும் மனிதனுக்கு, அப்படி என்ன தான் பிரச்சனையாக இருக்கும் என்று கண்டதை கற்பனை செய்து நிம்மதி இல்லாமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

இராண்டாம் ஆண்டு முடிவதற்கு சில வாரங்களே உள்ள போது, வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்கு கிளம்ப உடை மாற்றிக் கொண்டிருந்தேன் அறையின் கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்து பார்த்தால் தர்மராஜ் நின்று கொண்டிருந்தான். ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டேன், கண் கலங்கினான். என்னடா இப்பிடி பண்ணிட்ட என்றேன் மவுனமாக இருந்தான். ஆள் கொஞ்சம் தளர்ந்து இருந்தான். பெயிலில் வந்திருப்பதாய் சொன்னான். சிறிது நேரத்திற்கு பின், என்னடா நடந்தது என்றேன். தயவு செஞ்சு அத ஞாபகப் பாடுத்தாத என்றான். எல்லாத்தையும் பாக்கணும் போல இருந்துச்சு என்றான் கொஞ்சநேரம் கழித்து.

சுந்தர மூர்த்தியையும் கூட்டி வந்தேன் அவன் குழந்தை போல அழுதான். வகுப்புக்கு போகாமல் மூவரும் அறையிலேயே இருந்தோம். உன் பாட்டை கேட்கணும் போல இருக்குடா என்று சொன்னதும் அதற்காகவே காத்திருந்தது போல பாடத் துவங்கினான். அடுத்து அடுத்து என்று அரை மணிநேரம் பாடினான். அவனது பாரங்களையெல்லாம் பாட்டின் வழியே வெளியேற்றி விடும் உத்வேகத்தில் பாடினான். கடைசியாய் அவனுக்கு பிடித்த ‘சங்கரா’ பாடலோடு முடித்தான். ஓரே உணர்ச்சி பிரவாகமாக இருந்தது, மூவரும் கண் கலங்கி இருந்தோம். மாலையில் மனமின்றி கிளம்பினான். இனி எப்போடா பாக்குறதுன்னு கேட்டேன், தெரியாது என்றான். வழி அனுப்ப வர வேண்டாம் என்றான், விழுங்கி விடுவது போல இருவரையும் பார்த்தான்,’வர்றேன்’ என்று சொன்ன வேகத்தில் விடுவிடுவென நடந்து போனான்.

கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இந்த சந்திப்பு. தர்மராஜுவுடன் அவனது நண்பன் ஒருவனும் இருந்தான். அவனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டோம். எனக்கு எல்லாமே கனவில் நிகழ்வது போலவே இருந்தது. என்னைப் பற்றி விசாரித்தான். ஏதோ பிஸ்னஸ் செய்வதாக சொன்னான். என் முகவரியை கேட்டான், அவனது முகவரியை சொன்னான். நேரம் கிடைக்கும் போது வருவதாய் சொல்லி,சமயம் கிடைக்கும் போது நீயும் வா என்றான். முக்கியமான வேலை காரணமாக உடனே கிளம்புவதாகச் சொல்லி அவசர அவசரமாக கை குலுக்கிப் பிரிந்தான். ஒரு ஆட்டோவை மறித்து அவனது நண்பனுடன் ஏறி அமர்ந்து கை காட்டிய படியே சென்றான். நான் ஆட்டோ போவதை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

இது நடந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடி விட்டது என்றாலும் நாலு தெரு தள்ளி இருந்த அவனை காண ஒரு போதும் நான் ஏன் முயற்சிக்கவில்லை, அதே போல்அவன் ஏன் என்னை ஒருமுறை கூட சந்திக்கவில்லை என்ற கேள்வி அவ்வப் போது மனதில் வந்து வந்து செல்லும். இப்போது யோசிக்கும் போது, எல்லாம் மறந்து புதிதாய் வாழ அவன் விரும்பி இருக்கலாம்,என்னை சந்தித்தது அவனது பழைய நினைவுகளை கிளறி துன்புறுத்தி இருக்கலாம். அவனது நண்பர்களுக்கு என் மூலம் அவனைப் பற்றிய உண்மை தெரிந்து விடும் என்று அச்சப்பட்டிருக்கலாம். ஏதோ கோபத்தில் அவன் கொலை செய்திருக்கிறான் அதே கோபம் என் மீதும் எப்போதாவது வந்து விட்டால் என்ற பயம் கூட நான் அவனை பார்ப்பதை தவிர்த்தற்கு மூலமாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

எப்படியோ என் மனதுக்குள் அவனை பற்றிய நினைவுகள் நான் வாழும் வரை வாழும்.

ஹைகூத் தோட்டம் – 56

2408335704_774f56cd53

மரக்கிளையில் காத்திருக்கின்றன

சின்னஞ்சிறு குஞ்சுகள்

கூண்டுக்குள் தாய் .

ஹைகூத் தோட்டம் – 55

3035259896_f9c3699064_b

இன்னும் தொடரும் வாழ்வு

ஆழப் பாய்ந்த கத்தி

அவள் பிரிவு….

நன்றி அறிவித்தல்

angel2

நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும் இன்னும் நினைவில் இருக்கிறது பதட்டமான அந்த இரவுப் பொழுது. நான் ஏறிய பாடாவதிப் பேருந்து ஆமை வேகத்தில் இரவு 11.30 க்கு பொள்ளாச்சி வந்து சேர்வதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பே எனது ஊருக்கான கடைசி வண்டி கிளம்பி இருந்தது. இனி அதிகாலை 5 மணி வரை காத்திருப்பது தவிர வேறு வழி இல்லை. பேருந்து நிலையத்தில் கூட்டம் நிறைய இருந்தது. பெரும்பாலும் என்னைப் போல முழுஆண்டுத் தேர்வு முடிந்து கிளம்புகிற மாணவ மாணவியர்களும், அவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்களின் கூட்டமுமே நிரம்பி இருந்தது .

என்னை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை.இத்தனைக்கும் எனக்கு வயது 11 தான். வத்தலக்குண்டில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தின் பின் பொள்ளாச்சி வந்து சேர்ந்திருந்தேன். இன்னும் நான்கு மணி நேர மலைப் பயணம் பாக்கி இருந்ததது நான் என்னுடைய வீட்டை அடைவதற்கு. முதல் நாள் ஹாஸ்டலில் சேர்க்கும் போது அப்பா வந்ததோடு சரி. இடையில் ஒரு முறை பக்கத்து ஊருக்கு ஏதோ கல்யாணத்திற்கு வந்த போது முகம் காட்டி விட்டு போனார். மற்றபடி எங்களின் தொடர்பு என்பது எனது கண்ணீர்க் கடிதங்களும், பதிலுக்கு வரும் அறிவுரைக் கடிதங்களும், எல்லாம் உன் நன்மைக்குத் தான் என்று அம்மா எழுதும் ஆறுதல் கடிதங்களும் தான்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளின் போது பக்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு போய் விட்டேன். பாட்டியின் ஊருக்கு இரண்டு மணி நேரத்தில் போய் விடலாம். பாட்டி வீட்டிற்கு காலாண்டு விடுமுறைக்குப் போனது தான் யார் துணையும் இல்லாமல் நான் மட்டும் போன முதல் பயணம். அதனைப் பாராட்டி அப்பா அம்மா கடிதமெல்லாம் எழுதி இருந்தார்கள். அந்த தைரியத்தில் தான் தனியே வரச் சொல்லி உத்தரவு.

பஸ்சில் தூங்கிய படியே வந்திருந்ததால் தூக்கம் வரவில்லை. எனது பேக்கை சரி பார்த்துக் கொண்டேன். அங்கங்கு பெரிய பையன்கள் கூட்டம் கூட்டமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் கூட்டம் ஒன்று வட்டமாய் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தது. சிலபேர் தரையிலேயே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிமென்ட் பெஞ்சில் மூன்றுபேர் உட்கார்ந்த படியே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த சிறிய இடைவெளியில் உட்கார்ந்து கொண்டேன். அந்த இரவிலும் டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு எதேச்சையாக கால் சட்டைப்பையில் கைவிட்டவனுக்கு பகீர் என்றது. அதில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. இருந்த பணத்தையெல்லாம் அதில் தான் வைத்திருந்தேன். ஹாஸ்டலில் சமையல்காரராய் இருந்த எனது தாத்தாவிடம் தான் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பேன். நான் மட்டுமல்ல, அங்கிருக்கும் எல்லா மாணவர்களும் அவரிடம் தான் கொடுத்து வைப்பார்கள். 25 பைசாவுக்கு மேல் அவரிடம் இருந்து காசு வாங்கி விட முடியாது. அதுவும் ஏன் எதற்கென்று நூறு கேள்விகளுக்குப் பிறகே கைக்கு வரும். ஊருக்கு கிளம்புவது மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நோட்டாக வாங்க முடியும். கிளம்பும் போது இருபதும் பத்துமாய் முப்பது ரூபாயை கைகளில்கொடுத்து பத்திரமா வச்சுக்கோன்னு சொல்லிக் கொடுத்தார்.

பஸ்சில் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியது போக மீதிச் சில்லறையையும், இருபது ரூபாயையும் கால்சட்டைப் பையில் தான் வைத்தேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது பார்த்தால் காணவில்லை. தூங்கிக் கொண்டு வந்ததில் சீட்டில் ஏதாவது விழுந்துவிட்டதா? பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனின் முழியே சரியில்லை,திருட்டு முகத்தோடு ஒரு ஆள். அவன் எடுத்திருப்பானோ? அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. எப்படி ஊருக்குப் போவது? பொள்ளாச்சியில் யாரையும் தெரியாது. ஒன்றும் தோன்றவில்லை அழுகையாய் வந்தது. கொஞ்ச நஞ்சமிருந்த தூக்கமும் ஓடிப் போய்விட்டது. எனது துன்பத்தை சொல்லி கொள்ள கூட யாரும் இல்லை. இனி என் கதி என்ன? நான் என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் எதுவும் புரியாமல் பயமாய் இருந்தது. எட்டு ரூபாய் இருந்தால் கூட போதும் ஊர் போய் சேர்ந்து விட முடியும்.

மனதில் தாறுமாறாக கற்பனைகள் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருந்தது. அந்த குளிர் இரவிலும் வியர்த்துக் கொட்டியது. அப்பா அம்மா மீது கோபம் கோபமாய் வந்தது. அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார்கள் , ஆனால் நானோ நடு இரவில் மாபெரும் ஆபத்தின் நடுவில் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறேன்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல குழம்பிய நீரின் தெளிதலைப் போல ஒரு யோசனை தோன்றியது. அதன் விளைவுகளைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தாலும் உடனே செயல்படுத்திப் பார்க்கும் முடிவோடு உடனே எழுந்து கொண்டேன். அங்கு இருப்பவர்களை சுற்றிப் பார்த்தேன். என்னை விடவும் சிறியவனாய்த் தோன்றிய ஒருவன் அவனது தந்தையுடன் நின்று கொண்டிருந்தான். அவரிடம் போய் நின்றேன், என்ன என்பது போல் பார்த்தார். ‘ஆறாம் வகுப்பு பழைய புத்தகம் இருக்கு, வேணுங்களா?’ கேட்ட வேகத்தில் ‘ வேணாம்பா’ என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி விட்டு திரும்பிக் கொண்டார். எனக்கு கண் நிறைந்தது.

ஒன்றும் செய்யத் தோன்றாமல் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன். சிறிதும் பெரிதுமாக மாணவிகள் சில பேர் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. யோசிக்காமல் உடனே அங்கே போனேன் அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டு என்னையே பார்த்தார்கள். சிறியவளாய் தெரிந்தவளிடம் ‘ஆறாவது பழைய புத்தகம் ஏங்கிட்ட இருக்கு வேணும்னா வாங்கிக்குங்க’ என்றதும் அனைவரும் சேர்ந்து சிரித்தார்கள். ‘குள்ளமா இருக்குறதுனால அவள ஆறாவதுன்னு நினச்சுட்டியா? அவதான் இங்க இருக்குறதில்லயே பெரியவ’ சிரித்து சிரித்துச் சொன்னாள் ஒருத்தி. அனைவரும் சேர்ந்து பெரிதாகச் சிரிதார்கள். என்ன பிரச்சனை என்று கூட யாரும் கேட்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. அந்த கூட்டத்தை விட்டு விலகி கொஞ்சம் தள்ளிச் சென்று நின்று கொண்டேன்.

தெரிந்தவர்கள் யாரவது வந்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு அங்கிருக்கும் எல்லாரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். யாரும் இருப்பது போல தெரியவில்லை. வீட்டுக்கு எப்படித் தகவலை தெரிவிப்பது? நாளைக்கும் இங்கேயே இருக்க நேர்ந்து விட்டால் எங்கே குளிப்பது? எங்கு சாப்பிடுவது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் வந்து வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. விட்டால் சத்தமிட்டு அழுதுவிடுவேன் போலிருந்ததது. அப்போது தான் ‘தம்பி’ என்று கூப்பிட்ட படி ஒரு அண்ணன் என் கைகளைப் பிடித்தார். கலங்கிய கண்களுடன் பார்த்தேன். பனிரெண்டாம் வகுப்பு அல்லது கல்லூரி முதலாண்டு படிக்கக் கூடிய வயது இருக்கும். நல்ல சிகப்பான முகம், வளரத் துடிக்கும் மீசை.’ என்னப்பா எதாவது பிரச்சனையா? அப்ப இருந்து ஒனனப் பாத்துட்டு தான் இருக்கேன். என்ன சொல்லு’ என்ற படி என் முகத்தை அவரது விரல்கள் நிமிர்தியது. அதுவரை கட்டி வைத்திருந்த அழுகை கண்களைத் தாண்டி சூடாய் இறங்கத் துவங்கியது. விம்மலோடு எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல பொறுமையாக கேட்டு ‘மொதல்ல கண்ணத் தொட, இதுக்குப் போய் எதுக்கு அழுகுற? இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு கடைசி பஸ் வரும், என்னோட வா, காலைல உன்னை அனுப்பி வெக்கிறேன். எங்க ஊர்ல இருந்து ஒரு மணி நேரம் தான் உங்க வீட்டுக்கு.’ எனச் சொல்லிய படி என் கண்களைத் துடைத்து விட்டு ‘எங்க சிரி’ என்றதும் மெல்லச் சிரித்தேன்.

அவரோடு அந்த பஸ்சில் அவரது வீட்டுக்குப் போனேன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு அது. அந்த அண்ணின் அப்பா அம்மா என்னோடு அன்பாய் பேசினார்கள். குளிருக்கு இதமாய் ஹீட்டர் போட்டு விட்டு போர்த்திக் கொள்ள ஒரு அருமையான கம்பளி கொடுத்தார்கள்.

காலையில் நானாய் எழுந்திருக்கும் வரை எழுப்பவில்லை. எழுந்தததும் ஆவி பரக்க காபி, சூடுநீர்க் குளியல், சுவையான காலை உணவிற்குப் பின் கிளம்பினேன். ‘ எப்போது வந்தாலும் இங்க வரணும்’ என்று சொல்லி அண்ணனின் அப்பா, அம்மா வழி அனுப்பினார்கள்.

அந்த அண்ணன் கண்டக்டரிடம் டிக்கெட் எடுத்து என்கையில் கொடுத்து கூடவே 5 ரூபாயை நான் மறுத்தும் சட்டைப்பையில் வைத்தார்கள். கண்டக்டரிடம் ‘பார்த்து இறக்கி விடுங்கள்’னு சொல்லி விட்டு பஸ் கிளம்பும் வரை இருந்து கை அசைத்தார்கள். நானும் கண் கலங்க கை அசைத்தேன்.

வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் சொன்னேன். கதை போல திரும்பத் திரும்ப கேட்டார்கள். ‘யாரோ மகராசன், நல்லா இருக்கணும்’ என்று அம்மா சொன்னார்கள். விடுமுறை முடிந்து திரும்பும் போது மீண்டும் தனியாகவே 8 மணி நேரம் பயணித்து விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.

அதற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை அந்த மனிதர்களைச் சந்திக்கவே இல்லை. உடன் பயணிக்கும் போது அந்த அண்ணனின் பெயரைக் கேட்டேன். இப்போது அது ஞாபகம் இல்லை. அந்த அண்ணனின் முகம், அவரின் அப்பா அம்மாவின் முகங்கள் எதுவும் ஞாபகமில்லை. நன்றி அல்லது தேங்ஸ் என்று ஏதாவது ஒன்றை அந்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் சொன்னேனா என்பது கூட நினைவில் இல்லை. அவர்கள் இப்போது எங்கு வசிக்கிறார்களோ? அவர்களுக்கு அந்த சம்பவம் இன்னும் நினைவில் இருக்குமா? ஒரே ஒரு முறை பார்த்த இந்த முகம் ஞாபகத்தில் இருக்குமா? யாராவது எங்காவது அந்த அண்ணன் நான் தான் என்று சொல்லமாட்டார்களா? மீண்டும் ஒரு முறை மறக்க முடியாத படி அந்த முகத்தை கண்களுக்குள் பத்திரப் படுத்திக் கொள்ள மாட்டேனா? என்று ஏக்கமாய் இருக்கும் அடிக்கடி.

இப்படி ஏதோ ஒரு கட்டத்தில் யாரோ ஒருவர் வந்து நம்மை துயரங்களில் இருந்து, துன்பங்களில் இருந்து, ஆபத்தில் இருந்து கரையேற்றி விட்டு நாம் நமது நன்றியைத் தெரிவிக்கும் முன்பே ஒரு ஆசிர்வாதமான புன்னகைகளோடு விலகிப் போய் கொண்டே இருக்கிறார்கள். நன்றிகளையோ செய்த உதவிகான பிரதி பலன்களையோ எதிர்பார்க்காமல் மிக இயல்பாக தனது செயல்களின் மகத்துவத்தை அறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சிலரால் தான் உலகம் தனது புன்னகைகளை, சந்தோசத்தை, நிம்மதியை இன்னும் தொலைக்காமல் இருக்கிறது.

ஹைகூத் தோட்டம் – 54

jewellery_pic

உள்ளே வெளியே விளையாட்டு

சலிக்காமல் விளையாடுகிறது

என் வீட்டு நகைகள்…

ஹைகூத் தோட்டம் – 53

parrots20dec06007-778961

பறக்கும் கிளிக் கூட்டம்

இடம் மாறும் கிளிகள்

திருத்தி வரைதலா

காதல் கொண்ட பெண்மை

8767247-lg

குரல் காதில் விழுவதற்கு முதல் நொடியில் கூட பேசுவது
அமுதாவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஹலோ’
என்ற ஒரே வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டேன். சென்னைக்கு
வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நான் கல்யாணத்திற்கு வரவில்லை என்ற கோபத்தில் தொலைபேசி எண், முகவரி எல்லாம் இருந்தும் வைராக்கியமாய் அவள் தொடர்பு கொள்ளவே இல்லை.

தினந்தோறும் எதிர்ப்படும் முகங்களில் அவள் இருந்து விடமாட்டாளா எங்காவது துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருக்கும் போதோ, மார்கெட்டில் இருந்து காய்கறி பையை சுமந்தபடி வந்து கொண்டிருக்கும் போதோ அவளைப் பார்த்து விடமாட்டேனா என்று அவ்வப்போது தோன்றும்.

நானிருக்கும் சைதாப்பேட்டையில் இருந்து வண்டியில் போனால்
பத்து நிமிடம் கூடப் பிடிகாத தி நகரில் கோபால் தெருவில் இரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறாள்.ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னாள்.

உடனேயே அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அலுவலகத்தில் வேலை ஏதும் செய்யத் தோன்றாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தேன்.

நான் நினைத்திருந்தால் அமுதாவின் கல்யாணத்திற்கு போயிருக்க முடியும். ஆனால் போகப் பிடிக்கவில்லை.

ஆறு வருடங்களுக்கு முன்னால் சிபியோடு கோவை காந்திபுரதில் உள்ள அவனது அலுவலகத்திற்குப் போன போது தான் அமுதாவை முதன் முதலில் பார்த்தேன். பார்த்தவுடன் பிடித்துப் போவது மாதிரியான முகம். நிறம் குறைந்திருந்தாலும் ஏதோ ஒரு அம்சம் அந்த முகத்தின் அழகுக்கு முழுப் பொறுப்பு ஏற்று பொலிவுற வைத்திருந்ததது. அலங்காரங்களின் இரவல் இல்லாத நிஜ அழகு. கவனமான ஆனால் கண்களை உறுத்தாத ஆடைகளின் தேர்வு. மனதிலிருந்து வரும் சிரிப்பு,உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள். டர்ந்த வனத்திற்குள் இதுவரை பார்த்திராததும், பெயரறியாததும், மிக அழகானதும் வாசம் நிரம்பியமானதொரு பூவைப் பார்த்தது போல இருந்தது. அந்த சந்திப்பு எனக்கு.

சிபி எனக்கு பால்ய நண்பன். சோலையாரில் மின் வாரியக் குடியிருப்பில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு சிபியுடையது. எனது முதல் நண்பன் சிபி தான். உறங்கும் நேரம் தவிர ஒன்றாகவே சுற்றுவோம். பத்தாவது படிக்கும் போது அவனின் அப்பாவிற்கு டிரான்ஸர்வந்துவிட்டது.

அதன் பின் வாரத்திற்கு ஒரு கடிதமாவது எழுதிக் கொள்வோம். பின் மாதத்திற்கு ஒரு கடிதம், வருடத்திற்கு ஒரு கடிதம் என்றாகி பின் கடிதங்களே இல்லாத சில வருடங்கள் ஓடிப் போனது.

நண்பனொருவனின் அறையில் தங்கி வேலை தேடும் முடிவோடு கோவைக்கு வந்து ஒரு மாதமாகி இருந்தது. ஒரு நாள் இரவுக் காட்சிக்கு ராகம் தியேட்டரில் டிக்கெட் வாங்க நின்றிருக்கும் போது தான் தற்செயலாய் மீண்டும் சிபியை பார்த்தேன். அவன் தான் முதலில் என்னை கண்டுபிடித்தான்.மீசையும் தாடியும் வந்திருந்தாலும் பெரிய மாறுதல்கள் இல்லாமல் இருந்தது அவன் முகம். கம்பியூட்டர் சயின்ஸ் படித்து முடித்து லோன் வாங்கி, சொந்தமாக விளம்பர டிசைன்கள் செய்து தரும் நிறுவனத்தை சில ஆண்டுகளாக நடத்தி வருவதாய் சொன்னான். மறுநாள் அவனே என்னுடைய ரூமூக்கு வந்து அலுவலகத்திற்குக் கூட்டி வந்தான்.

அதன் பிறகு சிபியின் அலுவலகமே என் முகவரி ஆனது. எப்போதும் அங்கேயே இருப்பேன். தப்பித் தவறி ஒருநாள் போக முடியவில்லை என்றாலும் சிபி தேடி வந்துவிடுவான். அங்குதான் முதன் முதலாய் கம்பியூட்டரைத் தொட்டுப் பார்த்தது.
இன்டர்நெட் என்றால் என்ன, இ மெயில் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது. அமுதா தான் சொல்லிக் கொடுத்தாள். அவனது நிறுவனத்தில் நான்கு வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தாள் அமுதா. சிபி, அமுதா இன்னும் செந்தில் என்று
மூன்று பேரைக் கொண்ட குட்டி நிறுவனம் அது. செந்தில் மார்கெட்டிங் பார்ப்பதால் எப்போதாவது தான் ஆபிஸில் பார்க்க முடியும். சிபியும் அமுதாவும் டிசைன் செய்வார்கள். முக்கியமான சந்திப்புக்கள், பேங்க் செல்வது , என அடிக்கடி வெளியில் போய் விட்டு இரவில் ழித்து வேலை பார்பான் சிபி.

மதியம் அங்கிருந்தால் எனக்கும், சிபிக்கும் பக்கத்தில் இருக்கும் செட்டிநாடு மெஸ்சில் இருந்து பார்சல் வந்துவிடும். அமுதாவுடன் சேர்ந்து மூன்று பேரும் சாப்பிடுவோம். விதவிதமான உணவு வகைகளோடு வரும் டிபன் பாக்ஸை எங்களுக்கு கொடுத்து
விட்டு பார்சல் சாப்பாட்டுத் தண்டனையை ஏற்றுக் கொள்வாள்.

பெரும்பாலான நேரங்களில் நானும் அமுதாவும் மட்டும் அலுவலகத்தில் இருப்போம். ஒரு சில நாட்களிலேயே நானும் அமுதாவும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். உரையாடல்களின் போது அவள் வாயை விட காதை அதிகம் பயன் படுத்துபவளாக
இருந்தாள். நான் என்னுடைய நேற்றைய நிகழ்வுகளையும், நாளைய கனவுகளையும் கொட்டித் தீர்ப்பேன்.எதைச் சொன்னாலும்
அக்கறையோடு கேட்பாள். சிபியின் சின்ன வயது சம்பவங்களை
ஆர்வத்துடன் கேட்பாள். பால்ய காலத்தில் அவன் குறும்பு
செய்வானா, நன்றாகப் படிப்பானா அவன் யாரையாவது
காதலித்தானா? என்று அவனது வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதப்
போவதுபோலக் கேட்பாள். சிபியைப் பற்றி பேசத் துவங்கினால்
அவளுக்கு வேலை கூட இராண்டாம் பட்சம் தான். அவனைப் பற்றிய பேச்சு அவளைக் கனவில் ஆழ்த்தி விடும், கண்கள் நிலை குத்தி நிற்கும். சொல்வதையெல்லாம் இறந்த காலத்திற்குள் இறங்கிச் சென்று பார்த்துக் கொண்டு இருக்கிறாளோ என சந்தேகம் வரும்.

எனக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் அவனது பேரை உச்சரிப்பதில் அவளுக்கு கிடைத்ததைக் கவனித்தேன். அவன் பார்க்காத போது அவனை அள்ளி விழுங்குவது போல பார்ப்பதும், சிறப்பாய் படிக்கும் ஒரு மாணவி ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனமாய் கேட்பது போல அவன் பேசும் வார்த்தைகளை மனப் பாடம் செய்வதும், எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது. ஒரு முறை சிபிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி பரிசொன்றை கொடுத்தாள். அதன் பிறகு தான் அன்றைக்கு பிறந்தநாள் என்பதே அவனுக்கு நினைவில் வந்தது. அவன் ஆச்சரியத்தோடு ‘எப்பிடி’ என்று கேட்க ‘தெரியும்’ என்பது மட்டும் அவளது பதிலாக இருந்தது. கேக் வாங்கக் கிளம்பிய போது ‘அமுதாவிற்கு நல்ல ஞாபக சக்தி ‘என்றான். நாம் விரும்பி நேசிக்கிற அக்கறை உள்ள சில விசயங்கள்எப்போதும் மறக்காது என்று அவனுக்குசொல்ல நினைத்தேன்.

எல்லாம் கவனித்து ஒருமுறை தனித்து இருக்கும் போது
அமுதாவிடம் ‘ நீங்க சிபியை விரும்புறீங்களா அமுதான்னு’
கேட்டேன். அவள் அதிர்ந்து போனாள்.சிறிது நேரம் மெளனமாய் இருந்து விட்டு, ‘ஆமா லவ் பண்ணுரேன்’னு சொன்னாள். அவனுக்குத் தெரியுமா என்று கேட்க பதட்டப்பட்டவளாக ‘ சொல்லல பயமா இருக்கு, ஒரு வேளை வேணான்னு சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியும்னு தோணல, ஆனா சிபி எனக்குத் தான். என்னோட முருகன் என்ன கைவிட மாட்டான் ‘ என்றாள். அவனிடம் வாய்ப்பு இருக்கும் போது பேசி அவன் மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும் என்று நினைத்துக் கொண்டேன். என் மனசைப் படித்தவளைப் போல தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுறேன்னு நீங்க சொல்லிராதீங்க ப்ளீஸ். எனக்கு தைரியம் வரும் போது நானே சொல்லிக்குறேன்.’ என்றாள்.

ஒரு பெண்ணின் காதல் எத்தனை உணர்வுப் பூர்வமானது என்பதை அமுதாவிடம் தான் தெரிந்து கொண்டேன். சிபியின் அசைவுகளை வைத்தே அவனது மனநிலையை துல்லியமாய் கணிக்க அவளால் முடிந்தது. அவனது சட்டையை இதற்கு முன்னால் எப்போது அணிந்தான் என்பதை சரியாகச் சொன்னாள். யாருக்கும் தெரியாமல் அவனது இருக்கையை துடைத்து வைப்பதை ஒருநாள் கண்டு பிடித்தேன். அவனுக்கு பிடித்த உணவு, நிறம், நடிகர், நடிகை, எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தாள். அவளது சிந்தை செயல் எல்லாமே சிபி தான்.

சிபி அமுதாவிடம் நன்றாகப் பழகுகிறான், அவள் மீது மதிப்பு
வைத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியும் ஆனால் அவனுக்கு
காதல் இருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு முறை வீட்டில் இருந்து அவசரமாக அழைப்பு வந்ததும் ஊருக்கு கிளம்பினான். ஊரில் இருந்து பெண் பார்க்கப் போவதாக போன் செய்தான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் வந்ததும் அவனுக்கு அமுதாவின் காதலைத் தெரியப்படுத்தி விடுவதென்று தீர்மானித்தேன். ஆனால் சிபி வரும் போதே நிச்சயதார்த்தம் முடித்து கல்யாண நாளைக் குறித்து முடித்து விட்டு வந்திருந்தான்.

அமுதா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பது எனக்கு
கவலையாக இருந்தது. நான் தான் தயங்கிய படி விசயத்தைச்
சொன்னேன். நம்பாமல் சிரித்தாள் பிறகு என் குரலில் இருந்த
வருத்தத்தையும் உண்மையையும் உடனே புரிந்து கொண்டாள்.
மரண சேதியை கேட்டது போல அதிர்ந்து போனாள். வெடித்து
அழுதாள். அப்படி ஒரு அழுகை. வாழ்வில் எல்லாற்றையும்
இழந்துபோய் நிற்கும் ஒரு ஜீவனை போல இருந்தது
அவளின் நிலை.

எதிர்பாராத அதிர்ச்சி அவளை நிலை குலைய வைத்து விட்டது.
மணிக் கணக்கில் அழுதாள். ஒரு வேளை அமுதா தன் காதலை
சிபியிடம் சொல்லி இருந்தால் இப்படி நடக்காமல் இருந்திருக்கலாம். நாளையின் மீதுள்ள நம்பிக்கையில் இன்றைய கணங்களை அலட்சியப் படுத்தி விடுகிறோம். உலகின் அத்தனை கதைகளையும் விட திருப்பங்கள் நிறைந்தது வாழ்வென்பதை பல முறை மறந்தே போகிறோம். அழுது முடித்து எழுந்து போய் முகம் கழுவி வந்தவள உடனே வீட்டிற்கு கிளம்பினாள். என்ன நினைத்தாளோ ‘ இப்பிடி ஒருவிசயம் இருந்ததுங்கறதே சிபிக்கு என்னைக்கும் தெரிஞ்சிரக் கூடாது. என்னைக்குமே சொல்லிறாதீங்க ‘ என்று சொல்லி என்னையே பார்த்தாள். கலங்கிய கண்களொடு சம்மதமாய் தலை அசைத்தேன். மீண்டும் துவங்கிய அழுகையோடு கிளம்பினாள்.

சில நாள் விடுமுறைக்குப் பின் வந்தாள். எப்போதும் போலவே
இருந்தாள். சிபியின் கல்யாணத்தில் ஈடுபாட்டோடு வேலை
பார்த்தாள். அவனது மனைவியிடம் அதற்குள் பேசிப் பழகி அவள்
எதற்கெடுத்தாலும் அமுதா அமுதாவென்று அழைக்கும் படியாய்
தோழியாகிப் போனாள். எனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது.
அதே வேளையில் சந்தோசமாகவும் இருந்தது.

அதன் பிறகு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். நல்ல நல்ல
இடங்களில் இருந்து எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்தும்
வீம்பாய் மறுத்து விட்டாள். யார் யாரோ என்னென்னவோ
சொல்லிப் பார்த்தும் முடியவில்லை. என்னிடம் போனில் பேசும்
போது சிபியை மறக்க முடியவில்லை என்றாள். நான் ஏதோ
சொல்லத் துவங்கும் முன் அட்வைஸ் பண்ணுனா பேசவே
மாட்டேன் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ என்றாள். சிபியிடம் நீ
சொன்னா கேப்பா என்று நான் சொல்ல அவனும் சொல்லிப்
பார்த்திருக்கிறான்.

மூன்று வருடங்கள் பிடிவாதமாய் இருந்தவள் நேரில் கூட
பார்க்காமல் புகைப்படத்தைப் பார்த்து கல்யாணத்திற்கு சம்மதித்ததில் அனைவருக்கும் ஆச்சரியம். இத்தனைக்கும் மாப்பிள்ளைக்கு பெரிய படிப்பு இல்லை. ஏதோ தனியார் நிறுவனதில் கிளர்க் வேலை, சொல்லிக் கொள்ளும் படியான சம்பளமில்லை. அமுதா தான் இந்த கல்யாணத்தில் உறுதியாய் இருந்திருக்கிறாள். பின் சென்னை வந்து இரண்டு வருடங்கள் கடந்து இப்போது நினைவு வந்திருக்கிறது.

எனக்கு அவளை, அவள் வாழும் வாழ்வைப் பார்க்க ஆவலாய்
இருந்தது. அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாய் கிளம்பிவிட்டேன்.
என் மனைவியை அழைத்துப் போய் சரவணாவில் குழந்தைக்கு
துணியும் , சில விளையாட்டுப் பொருள்களும் வாங்கிக்
கொண்டேன். தியேட்டரில் படம் போட இன்னும் நிமிடங்களே
இருக்கிறதென்று பரபரப்போடு வண்டி ஓட்டும் ஒருவனின்
மனநிலையில் இருந்தேன். என் மனைவியிடம் பல முறை
அமுதாவைப் பற்றி சொல்லிருந்ததால் அவளும் ஆர்வமுடன்
இருந்தாள்.

கோபால் தெருவில் அவள் சொன்ன வீட்டின் முன்னால்
நிற்கும் போது வாரத்திற்கு இரண்டு தடவையாவது இந்த
தெரு வழியே போவேன் எப்படி கண்ணில் படாமல் போனாள்
என்று ஆச்சரியமாக இருந்தது. வாழ்வதற்காக இல்லாமல்
வாடகைக்காக கட்டப் படும் வீடுகளில் ஒன்றாக இருந்தது
அது. கீழே மூன்றும் மேலே மூன்றுமாக தீப்பெட்டி போன்ற
அறைகள். மாடியில் மூன்றாவது வீடு அவளுடையது. காலடி
சத்தத்தை கேட்டதும் வெளியே வந்தாள். அமுதாவிற்கு
கல்யாணமானவர்களுக்கே உண்டான சதைப் பிடிப்பான முகமும்
உடலும் வந்து விட்டிருந்தது. முகம் மலர்ந்து போனது எங்களைப்
பார்த்தும். என் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். வா என்றாள் என்னை உரிமையோடு.

முன் அறையில் அமர வைத்து விட்டு உள்ளே சென்று
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். உள்ளே சமையல் அறை. முன்புறம் வரவேற்பறை, உறங்கும் அறை, உண்ணும் அறை, என எல்லாமாகிய ஒரு அறை. அறை சிறியது என்றாலும் அதை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருந்தாள் அமுதா. சப்தம் கேட்டு குழந்தை சிணுங்கியது. தொட்டிலில் இருந்து குழந்தையை
தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். அதனை வாகாக ஏந்தி கொண்டேன். ‘பரவாயில்ல குழந்தைய நல்லா தூக்கறீயே’ என்றாள் சிரித்த படி. குழந்தை அழகாக இருந்ததது. ரெம்பப் பழகியது போல சிரித்தது.

சமையல்அறைக்குப் போய் டீ போட்டு கூடவே தின் பண்டங்களுமாக வந்து கொடுத்து விட்டு கீழே உட்கார்ந்து கொண்டாள். எனது வீடு, வேலை பற்றி எல்லாம் விசாரித்தாள். பார்த்து பல வருடங்கள் ஆனதால் பேச விசயங்கள் நிறைய மிச்சம் இருந்தது. நிறைய பேசினோம். என் மனைவி குழந்தையை கொஞ்சிக் கொண்டு அவ்வப் போது அரட்டையில் கலந்து கொண்டாள். இத்தனைக்கும் நடுவில் நான் அமுதாவின் முகத்தையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தேன். முகத்தில் கசியும் அவளின் மனசை துழவிக் கொண்டிருந்தேன். அவள் சந்தோசமாக இருப்பதாகவே பட்டது.

அமுதாவைப் பெண் பார்க்க அரசாங்க வேலையில் இருப்பவர்கள், இன்ஜினியர்,டாக்டர் என்று எவ்வளோ மாப்பிள்ளைகள் வந்தார்கள். அமுதா நினைத்திருந்தால் இன்னும் வசதி உள்ள வாழ்க்கை அமைந்திருக்கும். ஆனால் இது போதும் என்ற நிறைவோடு இவள் வாழ என்ன காரணம் என்பதற்கான பதில் மட்டும் கிடைக்கவில்லை.

பக்கத்து வீட்டில் சன் செய்தி முடியும் சப்தம் கேட்டது. அமுதாவின் கணவரை பார்க்க ஆவலோடு இருந்தேன். எப்பவும் வந்திருவார், நீங்க வருவீங்கன்னு தெரியும், சொல்லிட்டு சீக்கிரம் வரேன்னார் இன்னும் காணமேன்னு அமுதா சொல்லிக் கொண்டே இருந்தாள்.

‘அக்கா உங்களுக்கு போன்’ என்ற படி பக்கத்து வீட்டு சிறுவன் வந்து செல்போனை அமுதாவிடம் கொடுத்தான். அவளின் கணவன் தான் பேசுகிறார் என்று தெரிந்தது. அலுவலகத்தில் அவசரவேலை காரணமாக வர முடியவில்லை தாமதமாகும் என்பதை தான் சொல்கிறார் என்பதை அவள் பேசுவதை வைத்தே புரிந்து கொள்ள முடிந்ததது. அமுதாவிற்கு கண்கள் கலங்கி விட்டது. ஏதோ கோபமாக சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

‘ரெம்ப முக்கியமான வேலையாம் ஒனர் கூட ஒரு எடத்துக்கு போகனுமாம். வர லேட்டாகுமாம். ரெம்ப வருத்தப் பட்டாரு.’ சொல்லும் போதே கண்கள் கலங்கியது அமுதாவிற்கு.’பரவாயில்ல அவருக்கு என்ன அவசரமோ ப்ரைவேட் கம்பெனினா அப்பிடித் தான்.’ என்றேன். ‘சன் டே லீவ் தான அவரையும் கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வாங்க’ என்றாள் என் மனைவி. சரி என்று தலை அசைத்தாள்.

ஏதோ நினைவுக்கு வந்தவளாக’அட மறந்துட்டேன்’ என்ற படி பீரோவைத் திறந்தாள் அமுதா. என்ன என்று நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அது கல்யாண ஆல்பம் . நானும் கேக்கணும்னு நெனச்சேன் பேசிக்கிட்டே
மறந்தாச்சு என்றேன். பெரியதாய் இருந்தது ஆல்பம். ‘ இதிலயாவது அமுதாவோட வீட்டுக்காரர பாக்கலாம்’ என்றாள் என் மனைவி.

ஆல்பத்தின் முதல் பக்கத்தில் அமுதா மாலை அணிந்து
நின்றிருந்தாள். அவளருகே மாப்பிள்ளை கோலத்தில் நிற்பவரை பார்த்ததும் அதிர்ந்து போனேன். இன்னும் ஒரு முறை உற்றுப் பார்த்தேன். நம்ப முடியவில்லை. அப்படியே அச்சு அசல் சிபி மாதிரியே ஒருவர். சிபியோ என்று கூட ஒரு கணம் தோன்றியது. திரைப் படத்தில் இரட்டை வேட காட்சியில் மட்டுமே சாத்தியமாக் கூடிய விஷயம். மிக நுட்பமான வித்தியாசங்கள் இருந்தது என்றாலும் சிபியை தெரிந்தவர்களுக்கு அவனே தான் என்று தோன்றும்.

அமுதாவை பார்த்தேன். என் பார்வையை பரிபூரணமாய் புரிந்து கொண்டு அர்த்தம் நிரம்பிய ஒரு புன்னகை செய்தாள். அது சாதனை புரிந்தவர்கள் செய்யும் வெற்றிப் புன்னகையைப் போல இருந்ததது. அதுவரையான அவளைப் பற்றிய விடை தெரியாத கேள்விகளின் மீது புதிய வெளிச்சமாய் பெருகியது அந்தப் புன்னகை.

ஹைகூத் தோட்டம் – 52

1284523553_3273cf3bc9

லஞ்சம் கொடுத்தேன்
கிடைத்தது பதவி
மனைவி

ஹைகூத் தோட்டம் – 51

three_goats

ஆடுகள் கூடி தேர்ந்தெடுக்கின்றன

நல்ல பலி பீடத்தை

தேர்தல் நாள்

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்