பிப்ரவரி14- 98, கோவை, காதலும் வெடிகுண்டும்…

எனது காதல் கவிதைத் தொகுப்பான ‘கவிதை அல்ல காதல் ‘ நூல் வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ல் 98ம் வருடம் கோவையில் நடந்தது.

அண்ணன் அறிவுமதியும், அண்ணன் பழநி பாரதியும் சிறப்பு விருந்தினர்கள்.மாலை 3 மணிக்கு விழா.

இடம் ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் திவ்வோதயா அரங்கம்.
‘விழா நேரத்திற்கு முன்பே கூட்டம் வரத் துவங்கி விட்டது. விரைவாகவே அரங்கம் நிறைந்து விட்டது.

அண்ணன் பழநிபாரதி சாய்பாபா காலனியின் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

கூட்டம் அதிகமாகி விட்டதால் அவர்களைக் காக்க வைப்பது முறையல்ல எனவே விழாவைத் துவங்கி
விடலாம் அண்ணன் வந்து இணைந்து கொள்வார் என்று முடிவெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்கள்
மேடையில் அமர வைக்கப் பட்டார்கள்.

நண்பன் மாகலிங்கத்தோடு பாடலோடு விழா துவங்கியது.

பாதிப் பாடல் பாடிக் கொண்டிருகும் போது மாபெரும் வெடிச் சத்தம், அரங்கமே கொஞ்ச நேரம்
அதிர்ந்து அடங்கியது. கூட்டம் முழுவதும் வெளியில் ஓடி வந்தது.

என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. விரும்பத் தகாத ஏதோ நடந்து விட்டது என்பதை மட்டும் அனைவருக்கும் புரிந்தது.

எனக்கு விழா அவ்வளவு தான் என்று தோன்றியது.

உதவி இயக்குனரான நான் என் சக்திக்கு மீறி உறவினர்கள், நண்பர்களிடம் பிய்த்துப் பிடிங்கி பணம்
தயார் செய்து செலவழித்திருந்தேன்.விழா நின்று போய்விட்டால் இன்னொரு முறை நடத்துவதென்பது சத்தியமாய் சாத்தியமில்லை.

குழுக்கள் குழுக்களாக கூடி நின்று அனைவரும் பேசி சலசலத்த படி இருந்தார்கள்.

அண்ணன் ஓசைக் காளிதாசனும்,அண்ணன் கவிஞர் அவை நாயகனும் குழப்பத்தில் நின்று
கொண்டிருந்தவனை உலுக்கி உலகிற்கு கொண்டு வந்தார்கள்.

‘போய் மேடைல உட்காருங்க ஆனது ஆகட்டும் நிகழ்சியை நடத்துவோம்’ என்றார்கள்.

மீண்டும் அண்ணன் அறிவுமதி மேடையில் வந்து அமர்ந்தார் விழாத் துவங்கியது.

கொஞ்ச நேரத்திற்கொரு முறை பெரும் வேட்டுச் சப்தங்கள் கேட்ட படி தான் இருந்தது.

பழநி பாரதி அண்ணன் வரவில்லை. எங்கு இருக்கிறார் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை.

கொஞ்சம் பேர் பீதியில் கிளம்பி விட்டாலும் அரங்கம் நிறைந்திருக்க விழா நடந்தது.

பாதியில் பழநி பாரதி வந்து விட்டார்.

அவர் வந்த பிறகு தான் வெளியே வெடித்துக் கொண்டிருப்பவைகள் குண்டுகள் என்பதை அறிந்தோம்.

மேடையிலேயே வெளியில் குண்டு வெடிப்பதைப் பற்றி அறிவித்தும் அனைவரும் விழாவில் பங்கு
கொண்டது ஆச்சரியமாய் தான் இருக்கிறது இன்றும்.

பழநி பாரதி பேசும் போது ‘ காதலைப் பற்றிப் பேசுவது மதத்திற்கு எதிராகப் பேசுவது, சாதிகளுக்கு
எதிராகப் பேசுவது, அதற்கு உதாரணமாகத் தான் வெளியே யாரோ யாரையோ அழிக்க ஆயுதங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொன் சுதா நாம் பேசுவதற்காக பூக்களை வழங்கி கொண்டிருக்கிறார்’ என்று பேசினார்.’

விழா சிறப்பாய் பயத்தோடும் பதட்டத்தோடும் நிறைவடைந்தது.

விழா முடிந்ததும் தான் தெரிய வந்தது எங்கேயும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை என்பது.

இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொருவராய் சென்று நண்பர்கள் விட்டு வந்தார்கள்.

பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த நண்பர் காந்தி, லதா அக்கா, நண்பன் மீன்ஸ், அம்சப்ரியா, மற்றும்

இன்னும் சிலர், சென்னயிலிருந்து, திருப்பூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அனைவரும் அரங்கிலேயே
தங்க வைக்கப் பட்டார்கள். விழா முடிந்தும் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்படியாக அந்த விழா அதில் பங்கு கொண்ட யாவருக்கும் மறக்க முடியாத திகிலான நாளாக அமைந்து விட்டது.

திகில் நிமிடங்கள்:

1. விழாவிற்கு முந்தைய நாள் இரவிலும், அதற்கு முந்திய நாள் இரவிலும் கோவை முழுக்க நானும்
நண்பன் மீனாட்சி சுந்தரமும், திலகேஸ்வரனும் போஸ்டர் ஓட்டினோம் அப்போது தானே அவர்கள்
குண்டுகள் வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

2. சிறப்பு விருந்தினர்களுக்கு ரோஜாக்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆர் எஸ் புரத்திற்கு
நானும் என் தம்பி பிரசாத்தும் அத்வானி பங்கு கொள்ளும் விழாவின் மேடயைக் கடந்து போய் அதன்
வழியாகவே திரும்பினோம். அதன் பிறகு அரை மணி நேரத்தில் முதல் குண்டு அங்கு வெடித்தது.

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்