பெயர்க் காரணம்

824aa776135ed6068e3c56519034c870

“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.

நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.

‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.

அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் வீண் தான்.

அன்பும் அறிவும் ரெண்டும் இருந்தால் தான் அவங்க முழுமையான சிறந்த மனுசங்களா இருக்க முடியும். அதுனால தான் உனக்கு அன்பும், அறிவும் சேர்ந்த பெயராய் வைச்சிருக்கோம் ’ என்றேன்.

ரொம்ப கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு விநாடி நேர இடைவெளிக்குள் 7 வயது அன்புமதி கேட்டாள் “ நான் அப்பிடி இருக்கேனாப்பா?”

சொன்னதை முழுமையாய் புரிந்து அதற்குள்ளிருந்து ஒரு அர்த்தமுள்ள மிகப் பெரிய கேள்வியை மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்.

எனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..

சாமாளித்துக் கொண்டு உடனே சொன்னேன் ‘ நீ அப்பிடித் தான் இருக்கே ’

அன்புமதியின் முகத்தில் பெயரைக் காப்பாற்றி விட்ட ஒரு நிறைவு.

என் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது எனபதும். என்ன காரணத்தினால் என் அப்பா அம்மா வைத்தார்கள். என்பதை ஏன் இத்தனை வயது வரை அறிந்து கொள்ளத் தோன்றவில்லை என்ற கேள்வி எனக்குள் வளர்ந்து வீங்கிக் கொண்டிருந்தது.

கறுப்பு வெள்ளை உலகம்

84

அன்புமதி திடிரென அந்தக் கேள்வியைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.

கொஞ்ச நேர சிரிப்புக்குப் பின் தான் பதில் சொல்ல முடிந்தது.

அன்புமதி எனது 6 வயது மகள்.

சிறிய வயதில் இருந்து சில கேள்விகளால் என்னை வியப்பில் ஆழ்த்துவாள்.

செத்துப் போறதுன்னா என்னாப்பா,என்பது போன்ற கேள்விகள்.

நான் விளக்கமாய் உண்மையான பதில்களைச் சொல்லுவேன்.

அவைகளை பதிவுகளாகவும் போட்டிருக்கிறேன்.

இப்போது வளர வளர கேள்விகள் குறைந்து வருகிறதோ? சிந்திக்க நேரமில்லாமல் தொலைக்காட்சியும் , விளையாட்டும் மூளையில் நிறைந்து போனதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்படிக் கேட்டாள்.

கேள்வி இது தான்.

‘ அப்பா கறுப்பு வெள்ளை படங்கள் வந்த போது இந்த உலகம் கறுப்பு வெள்ளையாகவா இருந்தது ?’

இல்லை எல்லா செயல்களுடன் அவள் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்ற மகிழ்வுடன் அன்புமதியின் கேள்விகான பதிலை சொன்னேன்.

ஒரு நண்பன்

6.13 angry man

அலுவலுகத்திற்கு தாமதமாகி விட்டதால் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கும் போது என் பெயரை உரிமையுடன் அழைத்தது ஒரு குரல். குரலின் திசையில் திரும்பும் முன் ஓடி வந்து என் கைகளை பற்றி கொண்டன உறுதியான கரங்கள். பார்த்தால்,முகம் மலர நிற்கிறான் தர்மராஜ்.அவனை பார்த்து எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். மீண்டும் அவனை சந்திப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

கோவை அரசுகலைக்கல்லூரி மாணவர் விடுதியில் முதலாண்டில் நான், தர்மராஜ், சுந்தர மூர்த்தி மூவரும் ஒரே அறையில் தங்கிப் படித்தோம். தர்மராஜ் வாட்ட சாட்டமாக இருப்பான். உடற்பயிற்சியில் உருவேற்றிய உறுதியான உடல்.அதற்கு நேர்மாறான குழந்தை மனசு.அவன் நல்ல குரல் வளமுள்ள பாடகனாக இருந்தான். எப்போது பாடச் சொன்னாலும் சிரித்த முகத்துடன் ரசித்து பாடுவான். அவனது விருப்ப பாடல் சங்கராபரணத்தில் உள்ள ‘சங்கரா’ என்ற பாலசுப்ரமணியத்தின் பாடல். அவன் அந்த பாடலை பாடும் போது கண்மூடி கேட்டால் நிஜபாடலைக் கேட்கிறோமோ என்று சந்தேகம் வரும்.

எனக்கும் சுந்தரமூர்த்திக்கும் எப்போதாவது சண்டை வரும் போது தர்மராஜ் தான் சமாதான படுத்துவான். நானும், தர்மராஜும் திரைப் படம் பார்ப்பது ஒரு நாளும் தவறாது. ஒரு முறை நான் அழைத்து போக வேண்டும் மறுமுறை அவன் அழைத்து போக வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் இருந்தது. கல்லூரி நேரம் தவிர ஒன்றாகவே சுத்துவோம். முதல் ஆண்டு முடிந்து கிளம்பும் போது அடுத்த ஆண்டும் ஒரே அறையில் தங்கி கொள்வதாய் முடிவு செய்தோம். யார் முதலில் வருகிறார்களோ அவர்களே நல்லஅறையாக பிடித்து வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு கிளம்பினோம்.

இரண்டாம் ஆண்டு துவங்கும் போது நானே முதலில் வந்து நல்ல அறையை பிடித்தேன். கல்லூரி துவங்கி ஒரு மாதமாகியும் தர்மராஜ் வரவில்லை. குழப்பமாய் இருந்தது, அவனது முகவரியோ தொலைபேசி எண்ணோ இல்லை. சேலம் பக்கதில் ஏதோ கிராமம் என்பது மட்டும் நினைவில் இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இரண்டு மாதமும் ஆகி விட்டது அறையில் தனியே தங்கி இருந்தேன்.

சுந்தர மூர்த்திதான் ஒருநாள் பதட்டதுடன் வந்து நம்பமுடியாத அந்த செய்தியை சொன்னான். தர்மராஜ் அவனது அண்ணியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு சிறையில் இருக்கிறான் என்று, அவனது வகுப்பில் யாரோ செய்தித்தாளில் பார்த்து விட்டு சொன்னதாய் கூறினான். ‘வேற யாரையாவது பார்த்துட்டு சொல்ல போறாங்க’ என்றதற்கு, ‘அவந்தான் காலேஜ் பெயரெல்லாம் போட்டு இருந்ததாம், தலை முதல் கால் வரை வெட்டு இல்லாத இடமே இல்லையாம்’ என்றான்.

மிகப்பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. அப்படியா கோபம் வரும் மனிதனுக்கு, அப்படி என்ன தான் பிரச்சனையாக இருக்கும் என்று கண்டதை கற்பனை செய்து நிம்மதி இல்லாமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

இராண்டாம் ஆண்டு முடிவதற்கு சில வாரங்களே உள்ள போது, வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்கு கிளம்ப உடை மாற்றிக் கொண்டிருந்தேன் அறையின் கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்து பார்த்தால் தர்மராஜ் நின்று கொண்டிருந்தான். ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டேன், கண் கலங்கினான். என்னடா இப்பிடி பண்ணிட்ட என்றேன் மவுனமாக இருந்தான். ஆள் கொஞ்சம் தளர்ந்து இருந்தான். பெயிலில் வந்திருப்பதாய் சொன்னான். சிறிது நேரத்திற்கு பின், என்னடா நடந்தது என்றேன். தயவு செஞ்சு அத ஞாபகப் பாடுத்தாத என்றான். எல்லாத்தையும் பாக்கணும் போல இருந்துச்சு என்றான் கொஞ்சநேரம் கழித்து.

சுந்தர மூர்த்தியையும் கூட்டி வந்தேன் அவன் குழந்தை போல அழுதான். வகுப்புக்கு போகாமல் மூவரும் அறையிலேயே இருந்தோம். உன் பாட்டை கேட்கணும் போல இருக்குடா என்று சொன்னதும் அதற்காகவே காத்திருந்தது போல பாடத் துவங்கினான். அடுத்து அடுத்து என்று அரை மணிநேரம் பாடினான். அவனது பாரங்களையெல்லாம் பாட்டின் வழியே வெளியேற்றி விடும் உத்வேகத்தில் பாடினான். கடைசியாய் அவனுக்கு பிடித்த ‘சங்கரா’ பாடலோடு முடித்தான். ஓரே உணர்ச்சி பிரவாகமாக இருந்தது, மூவரும் கண் கலங்கி இருந்தோம். மாலையில் மனமின்றி கிளம்பினான். இனி எப்போடா பாக்குறதுன்னு கேட்டேன், தெரியாது என்றான். வழி அனுப்ப வர வேண்டாம் என்றான், விழுங்கி விடுவது போல இருவரையும் பார்த்தான்,’வர்றேன்’ என்று சொன்ன வேகத்தில் விடுவிடுவென நடந்து போனான்.

கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இந்த சந்திப்பு. தர்மராஜுவுடன் அவனது நண்பன் ஒருவனும் இருந்தான். அவனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டோம். எனக்கு எல்லாமே கனவில் நிகழ்வது போலவே இருந்தது. என்னைப் பற்றி விசாரித்தான். ஏதோ பிஸ்னஸ் செய்வதாக சொன்னான். என் முகவரியை கேட்டான், அவனது முகவரியை சொன்னான். நேரம் கிடைக்கும் போது வருவதாய் சொல்லி,சமயம் கிடைக்கும் போது நீயும் வா என்றான். முக்கியமான வேலை காரணமாக உடனே கிளம்புவதாகச் சொல்லி அவசர அவசரமாக கை குலுக்கிப் பிரிந்தான். ஒரு ஆட்டோவை மறித்து அவனது நண்பனுடன் ஏறி அமர்ந்து கை காட்டிய படியே சென்றான். நான் ஆட்டோ போவதை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

இது நடந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடி விட்டது என்றாலும் நாலு தெரு தள்ளி இருந்த அவனை காண ஒரு போதும் நான் ஏன் முயற்சிக்கவில்லை, அதே போல்அவன் ஏன் என்னை ஒருமுறை கூட சந்திக்கவில்லை என்ற கேள்வி அவ்வப் போது மனதில் வந்து வந்து செல்லும். இப்போது யோசிக்கும் போது, எல்லாம் மறந்து புதிதாய் வாழ அவன் விரும்பி இருக்கலாம்,என்னை சந்தித்தது அவனது பழைய நினைவுகளை கிளறி துன்புறுத்தி இருக்கலாம். அவனது நண்பர்களுக்கு என் மூலம் அவனைப் பற்றிய உண்மை தெரிந்து விடும் என்று அச்சப்பட்டிருக்கலாம். ஏதோ கோபத்தில் அவன் கொலை செய்திருக்கிறான் அதே கோபம் என் மீதும் எப்போதாவது வந்து விட்டால் என்ற பயம் கூட நான் அவனை பார்ப்பதை தவிர்த்தற்கு மூலமாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

எப்படியோ என் மனதுக்குள் அவனை பற்றிய நினைவுகள் நான் வாழும் வரை வாழும்.

ஆத்தா

72303308_59e5b189af_o

‘சமயா, பேச்சியம்மா, எல்லாருக்கும் கைகால் சொகத்தக் குடு. என் பேரப்பிள்ளைக நல்லா படிச்சு, நல்லா இருக்கணும்’ சாமிரூமில் ஆத்தா மனமுருகிப் பிரார்த்தித்தை டேப் ரெக்கார்டர் மீண்டும் சொல்லியது. ஆத்தாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதையே ஓடவிட்டேன். ‘அடியாத்தே’ என்று ஆத்தா கன்னத்தில் விரல்களை வைத்துக் கவனித்தது. நான்,தம்பி, அப்பா, அம்மா, எல்லோரும் சிரித்தோம்.

ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு ஆத்தா வீட்டுக்கு கிளம்பும் போது நான் தான் அடம் பிடித்து டேப்பை எடுத்து வந்தேன்.

சின்ன வயதில் இருந்து விடுமுறைக்கு ஆத்தா வீட்டுக்கு வருவதற்கு ஆண்டு முழுவதும் காத்திருப்போம். நாங்கள் வசிக்கும் மலைப் பிரதேசத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாரதிராஜா கிராமமான கூடலூருக்கு ஏங்கி இருப்போம். அது மட்டுமல்ல ஆத்தாவின் பெட்டிக்கடை கூடுதல் காரணம். நமக்கே நமக்கென்று ஒரு பெட்டிக்கடை அது நிறைய தின்பண்டங்கள். தேன் மிட்டாய், குழல் அப்பளம், இன்னும் கூடலூரின் பிரத்தியேகக் கண்டு பிடிப்பான காசு மிட்டாய். காசு மிட்டாய் என்பது கம்பர்கட் மாதிரியான மிட்டாய்க்குள் காசு மறைந்திருக்கும். 5 பைசா, 10 பைசா, அதிகப் பட்சமாக 25 பைசா வரை உள்ளே இருக்கும். எல்லா மிட்டாயிலும் இருக்காது. லாட்டரி மாதிரி ஏதாவது ஒன்றில் இருக்கும். யாளி மார்க் கலர்கள். குண்டு அடைத்த பாட்டில்கள். ஆரஞ்சு, க்ரேப்ஸ், ஜிஞ்சர், சோடா. நாங்கள் குடித்தது போகத் தான் விற்பனைக்கு. தெருவில் எல்லோரும் என்னையும், தம்பியையும் கடைக்காரி பேரன்னு கூப்பிடுவார்கள்.

ஆத்தா மட்டுமல்ல அமத்தாவும் (அம்மாவைப் பெற்ற பாட்டி) பெட்டிக்கடை தான் வைத்து இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு எதிரில் கடை. அங்கும் எங்கள் ராஜ்ஜியம் தான். முந்திரி பழம் (திராட்சை), மற்றும் காரம் போட்ட முந்திரி அங்கே ஸ்பெஷல். ஜெமினியின் சாயலில் இருப்பார் சீய்யான் (தாத்தா). மில்டரி ரிட்டன். பாசமான மனிதன். அவர் கல்லாவில் இருந்தால் கட்டாயம் காசு கொடுப்பார். ஆனால் அமத்தா கொஞ்சம் வினயமான ஆள்.

அப்பாவிற்கு அமத்தா வீட்டிற்குப் போவது பிடிக்காது. விவரம் தெரிந்து நாங்கள் ஒரு நாள் கூட அமத்தா வீட்டில் தங்கியதே கிடையாது. அம்மாவோடு அங்கு போவோம் ஆனால் தங்கியது இல்லை.

இன்னும் கூடலூரில் எங்களை வசீகரிக்கும் வடக் கொட்டரை, தெக்கொட்டரை. வடக்கே இருக்கும் தியேட்டர் வடக்கொட்டரை. முருகா நீ வரவேண்டும் பாடல் ஊராரை அழைக்கும். மற்ற பாடல்கள் பாடி முடித்து படம் போடுவதற்கு முன் இறுதி அழைப்பாக நாதஸ்வர இசை முழங்கும். அதை கொம்பு ரெக்கார்ட் என்பார்கள். மாற்றி மாற்றி படம் பார்ப்போம்.

கூடலூரில் நாலைந்து ரெக்கார்டிங் சென்டர்கள் இருக்கிறது. பல்லவி ரெக்கார்டிங் சென்டரில் எல்லாப் பாடல்களூம் கிடைக்கும். தெளிவான பதிவாகவும் இருக்கும். சென்ற முறை பதிவு செய்து போன கேசட்டைக் கேட்டு நண்பர்கள் அசந்து போனார்கள். மோகனின் புதிய பாடல்களுக்கு ஒன்று, B.P சீனிவாஸ் பாடல்களுக்கென்று ஒன்று என 2 புதிய கேசட்டுகளோடு வந்திருந்தேன். மலங்காட்டில் கேசட்டில் பாடல் பதிய பெரும் பாடு பட வேண்டும். பஸ்ஸில் போய் வால்பாறையில் தான் கொடுக்க வேண்டும். புது பாட்டு மட்டும் தான் கிடைக்கும். அதுவும் உடனே கிடைக்காது.

எல்லாத்துக்கும் மேலாக ஆத்தா. ஆத்தாவின் அன்பு. அங்கே அம்மாவை தான் ஆத்தா என்பார்கள். ஆனால் அப்பத்தா என்று நாங்கள் அழைக்க வேண்டிய அப்பாவின் அம்மாவை நாங்கள் ஆத்தா என்று தான் கூப்பிடுவோம். சிறுவயதில் இருந்து அப்படித் தான். தாய்க்கும் மேல் பாசம் காட்டும் ஆத்தாவை அப்படி கூப்பிட்டது சரி தான் என்று இப்பவும் தோன்றும். வருடமெல்லாம் தன்னந் தனியாக இருக்கும் ஆத்தா, வருடமெல்லாம் சேர்த்து வைத்த ஆசையை அன்பை காத்திருந்து கொட்டித் தீர்க்கும்.

ஆத்தாவிற்கு சின்ன வயதில் இருந்தே தனிமை தான். அப்பா மட்டும் தான் பிள்ளை. அப்பா வயிற்றில் இருக்கும் போதே சீய்யான் (தாத்தா) இறந்து விட்டாராம். கூலி வேலைக்குப் போய் அப்பாவைக் காப்பாற்றி இருக்கிறது. 12 வயதிலேயே அம்மாவின் கஷ்டத்தைத் தீர்க்க வெளியூருக்கு வேலை தேடிப் போன ஒருவருடன் கிளம்பிப் போய்விட்டார் அப்பா. அப்போது துவங்கிய தனிமை. நவமலையில் பவர்ஹவுஸ் கட்டும் போது எடுபிடி வேலைக்குச் சேர்ந்து டெம்பரவரி லேபராகி பின் மின்வாரியத்தில் சேர்ந்தது வரையான கதைகளை கண்கள் கசிய அப்பா அடிக்கடி சொல்வார்.

அப்பாவிற்கு கல்யாணம் ஆவற்கு முன் சில ஆண்டுகள், அப்புறம் சில ஆண்டுகள் அப்பாவின் கூட இருந்திருக்கிறது. சொந்த ஊரில் வீடு வாங்கிய உடன் ஆத்தா வீட்டுக்கு காவலாய் வந்து விட்டது. வாழ ஏதாவது பிடித்தம் வேண்டும் எனப் பெட்டிக் கடை.

ஆத்தாவை எல்லோருக்கும் பிடிக்கும். மனசின் நல்ல தனத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் சாந்த முகம். பார்த்தால் சின்னப் பிள்ளை போல தோன்றும் குட்டையான பூஞ்சையான உடல் வாகு. தண்டட்டி இல்லாது வெறுமனே வளர்ந்து தொங்கும் காதுகள். சிறுமியாய் இருக்கும் அக்காவை ஆத்தா மடியில் தூக்கி வைத்தபடி இருக்கும் பழைய போட்டோவில் தண்டட்டி இருக்கிறது. இடையில் எப்போது அது கழற்றப் பட்டது பின் ஏன் மீண்டும் போடவில்லை என்பது கேட்கப் படாது விட்டுப் போன கதைகள்.

யாரவது ஒரு கிழவி எப்போதும் கடையில் உட்கார்ந்து கொண்டு ‘ஏலா சின்னத்தாயி’ என்று உரிமையோடு கூப்பிட்டு கதை பேசிக் கொண்டிருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுச் சண்டைகள் ஆத்தாவிடம் பஞ்சாயத்திற்கு வரும். ஆத்தாவின் நியாயமான தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப் படும். சென்றமுறை வந்திருந்த போது வீட்டுச் சண்டையில் பக்கத்து வீட்டு பொன்னமாப்பத்தா அரளி விதையை சாப்பிடப் போன போது ஆத்தா தான் போய் மறித்து பிடிங்கி வந்தது. அப்போது தான் முதன் முதலாய் அரளி விதையைப் பார்த்தேன். ஊரில் அன்றாடம் அரளி விதைச் சாவுகள் நடந்த படி தான் இருக்கும். எங்கும் வளர்ந்து கிடக்கும் செலவில்லாத கொடிய விஷம்.

கடைக்கு வரும் அத்தனை பேருக்கும் தான் கேசட்டில் பேசியதை போட்டுக் காட்டியது. பெருசுகள் வாய் பிளந்து கேட்டார்கள்.

விடுமுறை எப்போதும் போல சந்தோசமாக கழிந்து கொண்டிருந்தது. நானும் தம்பியும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தோம்.

அன்றைக்கு காலையில் சண்டை போடும் சத்தம் கேட்டு தான் கண் விழித்தோம். அப்பா கோபமாய் கிளம்பிப் போனார். அம்மாவிடம் ஆத்தா ஏதோ பேச மாமியாருக்கும் மருமகளுக்கும் வாய்ச் சண்டை துவங்கியது. அம்மாவும் கோபித்துக் கிளம்பியது.

அமத்தா வீட்டில் சுருளியில் குல தெய்வத்திற்கு சாமி கும்பிடுகிறார்கள் போகலாம் என்று அம்மா கேட்டிருக்கிறது. அப்பா வர மறுத்திருக்கிறார். சண்டை துவங்கி இருக்கிறது. அவன் வராட்டி விடும்மா நம்ம போகலாம் என்று ஆத்தா சொல்ல, எல்லாம் உன்னாலே தான் என்று அம்மா ஆத்தாவிடம் சண்டை போட்டிருக்கிறது. பதிலுக்கு ஆத்தா பேச பெரும் சண்டையாகி விட்டது.

ஆத்தா கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தது. அப்புறம் நான், தம்பி, ஆத்தா மூவரும் கிளம்பி சுருளி போனோம். சுருளி அருவியின் கீழ் உள்ள கோவில் திருவிழா கோலம் கொண்டிருந்தது. அதைச் சுற்றிய காட்டுப் பகுதியில் கூட்டம் கூட்டமாய் கெடா வெட்டு, சேவல் வெட்டு நடந்து கொண்டிருந்தது. தற்காலிக கல் அடுப்புகளில் பெரிய பெரிய வட்டகைகளில் சோறு, குழம்பு, வெந்து கொண்டிருந்தது. அங்கங்கே வைக்கோல் பரப்பி அதன் மேல் வெள்ளை வேட்டி விரித்து சோற்றை ஆற வைத்திருந்தார்கள். பல இடங்களில் விருந்து துவங்கி இருந்தது.

அமத்தாவை கண்டுபிடித்தோம். கண்டும் காணாமல் இருந்தது. அம்மாவும் அப்படியே. சீய்யான் தான் முகம் மலர்ந்தார். சோறு, குழம்பு அடுப்பில் இருந்தது. காத்திருந்து பேருக்கு சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

பஸ் ஸ்டேன்டிலேயே தம்பியையும் ஆத்தாவையும் அனுப்பி விட்டு பதியக் கொடுத்த கேசட்டை வாங்கப் போய் விட்டேன்.

திரும்ப வரும் போது ஆத்தா மட்டும் கடையைத் திறந்து வைத்து உட்கார்ந்திருந்தது. வந்ததும் கேசட்டை போட்டுவிட்டேன். ‘கூட்டத்திலே கோவில் புறா’ பாடியது. பதிவு துல்லியமாய் இருந்தது.

ஆத்தாவிடம் தம்பி எங்கே என்று கேட்டேன். பக்கத்து தெருவில் அக்கா வீட்டுக்குப் போனதாகச் சொன்னது. ஆத்தாவிற்கு அழுது கண்கள் வீங்கிக் கிடந்தது. என்ன ஆத்தா என்று கேட்க ஒன்றும் இல்லை என்றது. காலையில் போன அப்பா இன்னும் வரவில்லை. எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆத்தா நினைத்து நினைத்து அழுதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அழுத படியே அவ்வப் போது நாங்கள் ஊருக்கு வரும் போது ஆத்தாவுக்கென்று வாங்கிய இனிப்பை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

கேசட் ஒரு பக்கம் பாடி முடித்தது. மறுபுறம் மாற்ற எந்திரிக்கும் போது அமத்தாவும், அம்மாவும் ஆவேசமாய் சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்கள். ‘அடியே சின்னத் தாயி வெளியில வாளா இவளே, ரெண்டுல ஒண்ண பாத்துப்புடுறேன்.’ என்று அம்மத்தா கத்தியது.

ஆத்தாவுக்கு முன்னால் நான் போனேன். கோபமாய் வந்தது. ‘ ஒழுங்கா வெளில போயிரு. எங்க ஆத்தாவை எதுக்குத் திட்டுற’ என்றேன். ‘போடா இவனே’ என்ற படி ரூமுக்குள் வர முயற்சி செய்த அமத்தாவை தள்ளி விட்டேன். அம்மா அடிக்க வந்தது. கையைப் பிடித்துக் கொண்டேன். அப்புறம் வெளியே தள்ளி விட்டேன்.

‘கேக்க யாரும் இல்லைன்னா நினைச்சே, வாடி வெளில’ அமத்தா கத்தியது. ஆத்தா வெளியே வந்தது. கலங்கிய கண்களுடன் அமைதியாய் நின்றது. ‘நீ உள்ள போ ஆத்தா நான் பாத்துக்கிறேன்’னு சொன்னேன். ஆத்தா அப்படியே நின்றது.

அமத்தா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியது. ஆவேசமாய் கத்தியது. ஆத்தாவிற்கும் அமத்தாவிற்கும் நடுவில் நான் நின்றேன். ‘ நீ இருக்கிற வரைக்கும் எம் புள்ளய நிம்மதியா வாழ விடமாட்டளா ‘ என்றது அமத்தா. ஆத்தா ஆவேசம் வந்து கத்தியது ‘அதுக்குத் தான் அரளி வெதைய தின்னுக்கிட்டு இருக்கேன், நீங்க நல்லா இருங்க ‘ என்ற படி அரளி விதை ஒன்றை எல்லோரும் காணும் படி வாயில் போட்டது.

நான் ஓடிப் போய் ஆத்தாவின் வாயிக்குள் இருப்பதை எடுக்க முயற்சி செய்தேன். ஆத்தா வெறி வந்தது போல் பல்லைக் கடித்துக் கொண்டு வாயைத் திறக்கவில்லை. அம்மாவும், அமத்தாவும் ஓடியே போனார்கள்.

அக்கம் பக்கதில் இருப்பவர்களெல்லாம் ஓடி வந்தார்கள். நான் கதறிய கதறலைப் பார்த்து ஆத்தா வாய் திறந்தது. அரளி விதையை எடுத்து வீசி எறிந்தேன். தெருப் பெண்கள் ஓடி வந்து ஆத்தாவை தாங்கி கொண்டார்கள்.

பக்கத்து வீட்டில் சைக்கிளை வாங்கிக் கொண்டு டாக்டரை கூப்பிட ஓடினேன். கண்ணீர் வழிந்து கொண்டே இருந்ததால் பாதையே மங்கலகாத் தெரிந்தது.

வகாப் டாக்டாரின் அறைக்குள் ஓடினேன். அவர் யாருக்கோ வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தது. அழுகையும் கதறலுமாய் சொல்லி முடித்தேன். ‘சீக்கிரம் போ பின்னாலயே வரேன்னு சொன்னார்.

வீட்டுக்குள் நுழையும் போது அப்பா, தம்பி, அக்கா வந்திருந்தார்கள். தெருவே கூடி இருந்தது. சோப்புத் தண்ணியை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு ஆத்தாவை குடிக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆத்தா பிடிவாதமாய் மறுத்து கொண்டு இருந்தது.

‘ஆத்தா நீ குடிக்கிறயா நான் குடிக்கட்டுமா?’ என்ற படி சோப்புத் தண்ணியை சொம்பில் எடுத்துக் குடிக்கப் போனேன். ஆத்தா குடிக்கிறேன் என்று வாங்கிக் குடிக்கத் துவங்கியது.

வகாப் டாக்டர் வந்து விட்டார். ‘ என்ன ஆத்தா இப்பிடி பண்ணிட்டே’ என்ற படி பக்கதில் போனார். மற்றவர்கள் வழி விட்டார்கள். நாடி பார்த்தார். நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்தார். ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வைத்து சோதித்தார்.

கீழே இறங்கி வந்து அப்பாவிடம் ‘ஒன்னுமே பண்ண முடியாது. ரெம்ப நேரம் ஆகிருச்சு. இன்னும் 5 நிமிசம் தான்’. என்று சொல்லும் போதே அவருக்கும் கண்ணீர் வந்து விட்டது. கூச்சல் பெரிதாகியது.

அப்பா, அக்கா,நான், தம்பி, எல்லோரும் கதறினோம். ஆத்தா உயிரோடிருக்கும் கணங்களை பதிவு செய்ய விரும்பியது போல ஆத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. எங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. வாயில் இன்னதென்று தெரியாமல் ஏதோ சொன்னது. மெல்ல மெல்ல எங்கள் மடியிலேயே உயிரடங்கியது. தன்னிலை மறந்து வெடித்துக் கதறினோம்.

என் வாழ்வில் நெருங்கிய உறவுக்குள் நிகழ்ந்த முதல் மரணம் அது.

பந்தல் கட்டி, பறை அடித்து, சங்கு ஊதிக் கொண்டு இருந்தார்கள். தேர் தயாராகிக் கொண்டு இருந்தது. நாற்காலியில் உட்கார வைத்திருந்தார்கள் ஆத்தாவை . அமர்ந்து கொண்டு தூங்குவது போலவே இருந்தது.

ஓப்பாரியிட்டு கதறிக் கொண்டிருந்தார்கள். மாலைகள் குவிந்து கிடந்தது.

அழுதழுது மயக்கம் வந்த என்னை அப்பாவின் பக்கத்தில் சேரில் உக்கார வைத்து சோடா கொடுத்தார்கள். அனிச்சை செயலாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அப்பா மெதுவாகக் கேட்டார் ‘ ஆத்தா பேசுனதை பதிவு பண்ணுனையே பத்திரமா இருக்கா?’

‘ இல்லப்பா அத அழிச்சு பாட்டு பதிவு பண்ணிட்டேன்’ என்றேன் குற்ற உணர்வுடன்.

அப்பா தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் பெரும் குரலில் தேம்பத் தொடங்கினார்.

நுழை வாயிலில்…

youngdirector_450x4301

சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.

சென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் உணவு இடைவேளை விட்டு விடுவார்கள். அப்போது தான் அவரைப் பார்க்க வேண்டும்
என்று அறிவுறுத்தப் பட்டிருந்தேன். என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற வினாடிக்காக பதட்டமும், பரபரப்பும், சற்று சந்தோசமும், வருத்தமுமாக கலவையான எண்ண ஓட்டங்களோடு காத்திருந்தேன்.

இவ்வளவு அருகில் இருந்து இவ்வளவு நேரம் படப்பிடிப்பை பார்க்கக் கிடைத்தே பாக்கியமாய் உணர்ந்தேன்.

இடையில் கிடைத்த இடைவேளையின் போது எனக்குப் பக்கத்தில் வந்து நின்றார் இயக்குனர். இணை இயக்குனர் ஒருவரும் உடன் இருந்தார். வேடிக்கையாய் அவர்கள் பேசிய ஒரு விசயம் என் காதிலும் விழுந்ததில் அனிச்சையாய் சிரித்துவிட்டேன்.

இயக்குனரும், உதவியாளரும் திரும்பிப் பார்த்தார்கள்.
படப்பிடிப்புக்குத் தொடர்பில்லாத யாரிவன் என்று பார்த்தார்கள். நான் மனசுக்குள் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குத் தெரிந்தவனாகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டேன்.

அப்போது தான் ‘ சார் யாரு?’ என்றார் இயக்குனர் என்னைப் பார்த்து. யாரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னதும் பிரேக்கில பாருங்க என்று சிரித்த படி சொன்னார். எதற்காகவென்று அவர் கேட்கவில்லை. அதற்குள் ‘ரெடி ரெடி’ ஒளிப்பதிவாளர் குரல் கொடுக்க இயக்குனரும் இணை இயக்குனரும் அவசரமாய் கிளம்பினார்கள்.

அது காவல்நிலைய செட். அவ்வளவு இயல்பாய் இருந்தது அது. ஒருமுறை சுவரில் சாயும் போது அது துணி என்பது உரைத்தது. சில இடங்களில் காட் போர்டு சுவர்கள். எது நிசம் எது பொய் என்பதை அறிய முடியாமல் மர்மமாய் இருந்தது.

டிராலி, கிரேன், கிளாப், மைக், நாகரா, லைட்டுகள் என்று ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடிரென்று ‘பிரேக்’ என்று உரத்த சத்தம் கேட்டது. உணவு இடைவேளை
அறிவிக்கப்பட்டாயிற்று கல்லுக்கு உயிர் வந்தது போல பரபரப்பாகிவிட்டேன்.

உடலுக்குள் ரத்தம் வேகமா ஓடத் துவங்கியது. இயக்குனருடன் பேசிய படி கதாநாயகன் செட்டுக்கு வெளியே நடக்கத் துவங்கினார். நானும் ஓடிப் பின் தொடர்ந்தேன்.

செட்டுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. ‘தலைவர் வாழ்க’ கோஷம் முழங்கியது. கதாநாயகன் வந்ததும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஆளூயர மாலைகள் போட்டார்கள். போட்டோ எடுத்தார்கள். நான் யாரென்று தெரியாத அவரை இந்த கூட்டத்தில்
எப்படி சந்திக்கப் போகிறேன் என்று கலங்கினேன். பசியை வெளிக் காட்டாமல் ரசிகர்களிடம் பேசினார். ஒரு வழியாக கை கூப்பி வணங்கி விடை பெற்றார்.

அவரது வெளிநாட்டுக் காரை நோக்கி அவரும் இயக்குனரும் நடந்தார்கள். நான் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பேசிய படியே இருந்ததால் தொந்தரவு செய்து விடக் கூடாது என்று அமைதியாய் பின் நடந்தேன். அதை நடை என்று
சொல்ல முடியாது நடைக்கும் ஓட்டத்திற்கும் இடைப்பட்ட ஒன்று.

அவர்கள் காரை நெருங்கி விட்டார்கள். என் முகம் தெரியும் படியாய் அவருக்கு முன்னே சென்று ‘சார்’என்றேன். கடிதத்தோடு நிற்கும் என்னைப் பார்த்து ஒன்றும் புரியாத முகபாவத்தோடு ‘ என்ன’ என்றார். ‘எஸ்டேட் அரவிந் சார் அனுப்புனாரு’ என்றபடி கடிதத்தை கொடுத்தேன்.

‘ம்.. போன் பண்ணிருந்தான்’ என்ற படி கடிதத்தைப் படித்தார். கடிதத்தைப் படித்து முடித்த உடன் ‘என்ன படிச்சிருக்கீங்க’ என்றார். ‘பீகாம்’ என்றேன். பெயரைக் கேட்டார். சொன்னேன். சிறிது
யோசனைக்குப் பின் இயக்குனரை பெயர் சொல்லி கூப்பிட்டார். இயக்குனர் பவ்வியமாய் ‘சார்’ என்றார். ‘இந்தப் பையனை உங்க அஸிஸ்டென்டா வச்சிக்கங்க’ என்றார். கிட்டத் தட்ட உத்தரவு போலத் தான் இருந்தது. ‘சரிங்க சார்’ என்று தலை வணங்கினார் இயக்குனர்.

என் பெயர் சொல்லி கூப்பிட்டார் கதாநாயகன். அடக்கமாய் பார்த்தேன்.’நல்லா ஓர்க் பன்ணுங்க. அடுத்தடுத்து சீக்கிரமா வளரனும். போய் சாப்பிடுங்க மதியானத்தில இருந்து ஓர்க் பண்ணுங்க. பெஸ்ட் ஆப் லக்’ என்று சொல்லி கை குலுக்கினார்.
காரில் ஏறி கிளம்பினார்.

நடந்ததை நம்ப முடியாமல் கார் போவதைப் பார்த்துக்
கொண்டிருந்தேன்.

ஒரு கடிதம். ஒரு வார்த்தை.ஒரு கணம். ஒருவனின் வாழ்வையே தலைகீழாக்கி விட்டது.

‘ டே’ என்று குரல் கேட்டது.

என்னை யார் இங்கு அப்படி கூப்பிடப் போகிறார்கள் என்று நினைத்த படி என் சந்தோசத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

‘ டே உன்னைத்தான்டா’ என்றது குரல் பின்னிருந்து. சந்தேகத்தோடு திரும்பினால் அழைத்து இயக்குனர். அதிர்ச்சியாய் இருந்தது.

‘உன் பேர் என்னடா’ என்றார்.

பதில் சொன்னேன்.

‘கிளாப் எப்பிடி அடிகிறதுன்னு பாத்துக்க நாளைல இருந்து நீ தான் அடிக்கணும் சீக்கிரம் சாப்பிட்டு வாடா’ சொல்லிவிட்டு போனார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சார்ன்னு கூப்பிட்டவர் அத்தனை சீக்கிரமாய் டே க்கு இறங்கி விட்டாரே என்று யோசித்தேன்.

இத்தனைக்கும் இயக்குனரும் இளையவர் தான். ஒரு வேளை உதவி இயக்குனர்களை இயக்குனர்கள் அப்படித் தான் கூப்பிட
வேண்டுமோ என்னமோ? கட்டாயம் அப்படியெல்லாம் இருக்காது. தன்னம்பிக்கை அற்ற சிலர் தன் அதிகாரத்தை நிறுவும் பொருட்டு செய்யும் அல்ப தந்திரம் அது என்பதை விளங்கிக் கொள்ள
அதிக நேரம் ஆகவில்லை.

சினிமாவில் எனக்கான முதல் பாடமாய் இதிலிருந்து துவங்கலாம் என்று தோன்றியது. சில பாடங்கள் பின்பற்றுவதற்காக சில பாடங்கள் பின் பற்றாமல் இருக்க என்பதை நினைத்த படி செட்டுக்குள் நுழைந்தேன்.

அவன்

marker-drawing-man-male-face

ஓவியக் கல்லூரியை நோக்கி கார் முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் விழாவிற்கு எங்கள் இயக்குனர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருக்கிறார். தலை போவதால் தவிர்க்க முடியாமல் வாலாக நானும் உடன் சென்று கொண்டிருந்தேன். இரட்டைவாலாக என் இனமாகிய உதவி இயக்குனர் ஒருவரும் உடன் வந்து கொண்டிருந்தார்.

உதவியாளர்கள் அருகில் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது சில இயக்குனர்களால். பாத்ரூம் போவது, மனைவியிடம் போவது தவிர மற்ற நேரமெல்லாம் உதவியாளர்கள் உடன் இருக்க வேண்டும். அதற்கு பாசமோ பற்றோ காரணம் இல்லை. பொது இடங்களில் அப்படி போவது ஒரு கெத்தாக இருக்கும். இயக்குநரின் செல் போனை பாது காக்க, பதில் சொல்ல. இன்ன பிற ஏவல்கள் புரிய. பொது நிகழ்ச்சியில் பேசியது பற்றி ஜால்ராத் தனமான கருத்துக்களை கேட்க. எல்லாவற்கும் மேலாக தான் கொடுக்கும் 50 ரூபாய் பேட்டாவிற்கு முடிந்த வரை பிழிந்து விட வேண்டும் என்ற நல்லெண்ணமும் காரணம்.

நடு இரவில் இனி எங்கு சாப்பிடுவார்கள் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல் தெரு முனையில் காரை நிறுத்தி இறக்கி விட்டு நாளைக்கு வழக்கம் போல எட்டரை மணிக்கு வந்திரு என்ற கட்டளையோடு பயணம் நிறைவு பெறும்.

பொதுவாய் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏதாவது சொல்லி சமாளிக்கப் பார்ப்பேன். ஆனால் இன்று உற்சாகமாகவே கிளம்பினேன். காரணம் சுரேந்திரன்.

ஒவியக் கல்லூரி என்ற வார்த்தையை எப்போது கேட்டாலும் அவன் தான் நினைவுக்கு வருவான்.

சுரேந்திரன். சென்னைக்கு வந்த புதிதில் கிடைத்த முதல் நண்பன்.

கோவையிலிருந்து வந்திருந்த நண்பருடன் அவருக்குத் தெரிந்த ஒருவரைப் பார்ப்பதற்காக தி.நகர் போகும் போது தெரியாது எனக்கு ஒரு நண்பன் கிடைக்கப் போகிறான் என்று.

அறிமுகக் கை குலுக்கலின் போது பார்க்க வந்தவரின் மகன் என்று நினைத்தேன்.

சொந்தக்காரரான அவரின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான் சுரேந்திரன்.

அப்போது அவன் புதுக் கல்லுரியில் முதல் ஆண்டு வரலாறு படித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனின் லட்சியமெல்லாம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து மாபெரும் ஓவியனாக வேண்டும் என்பதாக இருந்தது.

இந்த ஆண்டு தேர்வு ஆகாததால் வரலாற்றுப் பாடத்தை உறவுகளின் வற்புறுத்தல் காரணமாக சிலுவை போல் சுமந்து கொண்டிருந்தான். இன்னும் கொஞ்சம் பயிற்சித்து அடுத்த ஆண்டு எண்ணியது எய்தும் உறுதியில் இருந்தான்.

நெடு நெடுவென்ற ஆறடி உயரமும். நடுவகிடு எடுக்கப் பட்டு சற்று அதிகமாய் வளர்க்கப் பட்டிருந்த முடியும், ஒடுங்கிய கன்னங்களும் கனவுகள் சுடரும் பெரியபெரிய கண்களுமாக
ஓவியனை போலத் தான் இருந்தான்.,

பார்க்கப் போயிருந்தவர் படம் வரையரது ஒரு பொழப்பா என்றார். அவன் முகம் சுருங்கியது.

சினிமாவிற்காக போராட தயாராய் வந்திருந்த எனக்கு அவனைப் புரிந்து கொள்ள முடிந்தது.

கிளம்பும் முன் தனியே கிடைத்த சந்தர்ப்பத்தில் இது உன்னோட வாழ்க்கை, உன்னோட கனவு, யார் என்ன சொன்னாலும் மனச விட்டுறாதேன்னு நம்பிகை சொல்லி விட்டு கிளம்பினேன்.

சந்தித்துப் பிரிந்த மறுநாள் மாலை எனது அலுவலகத்திற்கு வந்து விட்டான் சுரேந்திரன். எனது அலுவலகம் என்றால் எனக்குச் சொந்தமானது என்று அர்த்தமில்லை.

அப்போது சென்னை வந்த புதிது. கலைவாணர் அரங்கதிற்கு எதிரே எழுந்தருளி இருந்த சின்ன ஒரு தனியார் நிறுவனத்தில் பெயரளவு சம்பளத்திற்கு பெயரளவுக்கு வேலை செய்து கொண்டு இருந்தேன். இராத் தங்கலும் அங்கேயே.

சினிமாவிற்காக வந்திருக்கிறான். சீக்கிரம் போய் விடுவான் என்று தெரிந்தே கிடைத்த வேலை. இவன் ஏதாவது சாதிப்பான் என்ற நம்பிக்கையில் எங்கள் ஊர் துரை டாக்டர் செய்த சிபாரிசில் கிடைத்த வேலை அது.

அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு போனில் பதில் சொல்லும் வேலை.சனி ஞாயிறுகளில் பிரபல இயக்குனர்களின் வீட்டின் முன்னால் அல்லது அலுவகத்தின் முன்னால் வாய்ப்புக் கேட்டு தவமிருக்கும் வேலை.

மாலை 6 மணிக்கு வேலை முடியும் நேரத்தில் சுரேந்தரன் வந்தான். நான் எதிர் பார்க்கவே இல்லை.

தன்னைப் புரிந்து கொள்பவர்களைத் தேடி செய்த யாத்திரைகளின் ஒரு பகுதியாக என் முன்னே நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தான்.

நிறையப் பேசினோம். ஆறுதலும் நம்பிக்கையுமாய் அவரவர் கனவுகளைப் பகிர்ந்து கொண்டோம். பேச்சின் இடையில் தம்மடிக்க வெளியில் வந்தோம். அவனுக்கும் ஒரு சிகரெட் வாங்கி நீட்டிய போது மறுத்தான். டீ, காபி கூட குடிக்காதவனாக இருந்தான். ஆச்சரியமாகத் தான் இருந்ததது.

அடுத்தடுத்த நாட்களில் என்னை அசையாமல் உட்கார வைத்து வித விதமாய் வரைந்து பழகத் துவங்கினான். ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருப்பது கஷ்டம் தான். என் கவிதைகளைப் படிக்கக் கொடுப்பது, நான் படமாக்கப்போகும் எதிக்காலக் கதைகளைச் சொல்வது என்று பதிலுக்கு பழி வாங்கி விடுவேன்.

மனம் குவித்து கூர்மையாய் பார்த்து அசுரத் தனமாய் வரைந்து தள்ளுவான். ஒற்றை பென்சிலையும் வெள்ளைக் காகிதத்தையும் வைத்துக் கொண்டு எதிரில் உள்ள எதையும் அச்சு அசலாய் வரைந்துவிடுவதைப் பார்க்கும் போது மாயஜாலங்கள் செய்யும் ஒருவனை போலவே அவன் எனக்குத் தெரிவான்.

ஒருமுறை நூற்றி ஐம்பது ஹைகூ கவிதைகள் எழுதி வைத்திருந்த நோட்டை படிக்க எடுத்துப் போனான். மறுநாள் அதைத் திருப்பிக் கொடுத்த போது அவன் வைத்திருப்பது பென்சிலா அல்லது பென்சில் போல வடிவில் இருக்கும் மந்திரக் கோலா என்று வியந்து போனேன். அத்தனை கவிதைகளுக்கும் அற்புதமான ஓவியங்கள் வரைந்திருந்தான். அந்த நோட்டே
அச்சடிக்கப் பட்ட புத்தகம் போலவே இருந்தது.

வாரத்திற்கு இருமுறையாவது ஓவியக் கல்லூரிக்கு போய் வருவான். இப்போது படித்துக் கொண்டு இருக்கிறவங்க கூட ஒன்ன மாதிரி ஒழுங்கா போக மாட்டாங்க போல என்று கிண்டல் செய்தால் சிரித்துக் கொள்வான். முதன் முறையாக சுற்றுலா சென்று வந்த பள்ளிச் சிறுவன் போல கல்லூரியை வருணிப்பான்.

வாய்ப்பிருக்கும் போதெல்லாம் ஒன்றாக சுற்றுவோம். சென்னைக்கு அவன் சீனியர் என்பதால் ஓவ்வொரு இடமாக அவன் தான் அறிமுகப் படுத்தினான். நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்து கடைசிப் பேருந்தை விட்டு விட்டு அடிக்கடி
என்னோடேயே தங்கிக் கொள்வான்.

உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐஸ் கட்டிப் போல கண் முன்னாலேயே காணாமல் போகும் அந்த நட்பு என்று நினைக்கவே இல்லை.

அதற்கு அவனோ நானோ கூட காரணம் இல்லை. செமஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பினான் சுரேந்திரன். ஒரு மாதம் விடுமுறை. கிளம்பவே மனசில்லை அவனுக்கு. முடிந்த வரையில் சீக்கிரம் வருவதாகச் சொல்லிக் கிளம்பினான்.

ஒரு மாதத்திற்குள் என்னென்னவோ நடந்து விட்டது. அவன் கிளம்பி பத்து நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு நாளில் எனது அலுவலகம் என்றென்றைக்குமாக இழுத்துச் சாத்தப்படது. உரிமையாளருக்கான கடன் நெருக்கடி முன்னிட்டு எடுக்கப் பட்ட முடிவாய் இருந்தது அது.

தற்காலிக ஏற்பாடாக வடபழநியில் இருந்த ஒரு நண்பனின் அறைக்கு குடிபெயர்ந்தேன். அடுத்து என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு விடைகள் தேடி முகட்டை பார்த்த படி முடங்கி கிடந்த போது தான் அப்பாவின் கடிதம் வந்தது.

அப்பாவுக்குத் தெரிந்த ஒரு நண்பரின் சிபாரிசு கடிதம் அது. பிரபல நடிகர் ஒருவரைச் சந்தித்து தரச் சொல்லி அறிவுறுத்தப் பட்டிருந்தேன். சிபாரிசு கடிதம் தருபவர் நடிகரோடு ஒன்றாகப் படித்தவர்.

நம்பிக்கை இல்லாமல் தான் நடிகரின் அலுவலுகத்திற்குப் போனேன். ஆனால் அந்தக் கடிதம் ஆயிரம் பூட்டுகளைத் திறந்து, ஒரு வார இடைவெளியில் நடிகர்—- தயாரித்து நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக்கியது.

தேர்ந்த ஒரு கரத்தினால் சுழற்றி விடப் பட்ட பம்பரம் போல அப்படி ஒரு சுழற்சி. ஒன்றரை வருடம் கழித்து தான் படம் முடிந்து பம்பரம் கீழே விழுந்தது.

நேரம் கிடைத்ததும் முதல் வேலையாய் சுரேந்திரனை தேடிப் போனேன். அவர்கள் வீடு மாறி இருந்தார்கள். பக்கத்து வீட்டில் யாருக்கும் மாறிப் போன முகவரியைச் சரியாய் சொல்லத் தெரியவில்லை.

அப்படியாக நானும் அவனும் ஓரே ஊரில் இருந்த படியே தொலைந்து போய்விட்டோம்.

எல்லாம் நடந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டது. இது எனக்கு நாலாவது படம். பிரபல இயக்குனர்—- இடம் இணை இயக்குநராய் ஓவியக் கல்லூரிக்கு அவரோடு போய் கொண்டு இருக்கிறேன்.

இந்த ஆறு வருட காலத்தில் சுரேந்திரன் என்ன ஆனான் என்று தெரியவிலை. சென்னையில் இருக்கிறானா? இல்லை வெளியூர்லோ,சொந்த ஊரிலோ இருக்கிறானோ? ஓவியக் கல்லூரியில் படித்தானா? இல்லையா? ஒன்றும் தெரியாது.
இன்றைக்கு மனசு முழுவதும் நினைவாய் என்னோடே இருக்கிறான்.

கார் ஓவியக் கல்லூரிக்குள் நுழைந்தது.

சுரேந்திரனின் கோவில் இது என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

அனைவரும் இயக்குனருக்காக காத்திருந்தார்கள். இறங்கியதும் இயக்குனரின் கழுத்தில் மாலை விழுந்தது. அதை அப்படியே கழற்றி அருகில் இருந்த என்னிடம் கொடுத்தார்.

விழா நடை பெற தயாராய் இருந்ததால் உடனடியாக மேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் எங்கள் இயக்குனர். மேடையில் ஏறும் முன்னால் செல் போனை என்னிடம் கொடுத்து விட்டுத் தான் போனார்.

முன் வரிசையில் அமர்ந்து கொள்ள இருக்கைகள் காட்டப் பட்ட போது நண்பரை உட்கார வைத்து விட்டு, மாலையைக் கொண்டு காரில் வைக்கும் காரணம் சொல்லி தப்பி வந்தேன்.

அங்கே நின்றிருந்த ஓட்டுநரிடம் மாலையை ஒப்படைத்து விட்டு கல்லூரியை சுற்றிப் பார்க்க கிளம்பினேன்.

வழியில் அங்கங்கே சிற்பங்களாய் இருந்தது. சுவர்கள் முழுவதும் மாணவர்களின் ஓவியங்கள். வர்ண கலாட்டாவாக இருந்தது.

கழிப்பறை ஒன்றின் சுவரில் முழுதும் வண்டுகள் எதையோ தனது கால்களில் எடுத்துக் கொண்டு போய் கொண்டு இருந்ததைப் போல் ஓவியம். சிரிப்பு வந்தது. கிராமத்து அநுபவம் இருப்பவர்களால் தான் அதை ரசிக்க முடியும். வண்டுருட்டாம் பழம் என்று சிறுவர்கள் கிண்டல் செய்வார்கள். பொருத்தமான இடத்தில் பொருத்தமான ஓவியம்.

அங்கங்கே மரங்கள். பூக்கள். சிற்பங்கள்.ஓவியங்கள். ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும் பின்னணியில் சுரேந்திரனின் குரல் விவரணை எனக்குள் ஓடியது.

சுற்றி முடித்து திரும்பும் போது விழா பாதி முடிந்திருந்தது. யாரோ ஒருவர் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

நிறைய மாணவர்கள் பெண்களுக்கு இணையாக முடி வளர்த்திருந்தார்கள். பாதிக்குப் பாதி மாணவர்கள் பிரஞ்சு தாடி வைத்திருந்தார்கள். பெண்கள் குறைவாகவே இருந்தார்கள்.

இவர்களுக்கு நடுவே சுரேந்திரன் எங்காவது இருந்து விட மாட்டானா என்றொரு ஆசை விட்டு விட்டு மின்னிக் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதும் தெரிந்து தான் இருந்தது.

முதல் வரிசையில் இருந்து ஒவ்வொருத்தரையாய் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

மாணவர்களில் சில பேர் விழா நடக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி குழு குழுவாக நின்று அரட்டை அடித்துக் கொண்டும், தம் அடித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அவர்களையும் ஒவ்வொருவராய் ஆராயத் தவறவில்லை எனது கண்கள்.

இதற்கிடையில் இயக்குனரின் செல் பேசிக்கு அழைப்பு வந்தது, அங்கே சப்தமாய் இருந்ததால் சிறிது தொலைவுதள்ளிப் போய் பேசினேன். இயக்குனரின் வீட்டில் இருந்து அழைப்பு.

பேசிக் கொண்டிருக்கும் போதே எதிரில் போன ஒருவன் சுரேந்திரன் மாதிரியே இருந்தான். நிறம் மங்கி தாடி அடர்ந்த மெலிந்திருந்த அவன் சுரேந்திரன் தானா என்று சந்தேகமாய் இருந்தது.

முழு கவனமும் அவன் மேல் குவிந்து கண்கள் இமைக்காமல்அவன் மீது நிலைத்தது. நடை கூட அவன் மாதிரியே இருந்தது.

அவன் படித்திருந்தாலும் ஆறு ஆண்டுகளுக்குள் படித்து முடித்து வெளியேறி இருக்க வேண்டும். அவனிருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

ஆனாலும் என்னை அறியாமல் நான் அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

ஒருவேளை அவனைச் சந்திக்க வேண்டும் என்ற எனது ஆசைகள் தான் அவனை அழைத்து வந்து விட்டதா? அல்லது அதே ஆசைகள் காரணமாய் எவனோ ஒருவன் என் நண்பனைப் போலவே தெரிகிறானா?

விரைவாய் நடந்து அருகில் போனேன். சுரேந்திரன் இவ்வளவு மெலிந்திருக்க மாட்டானே என்று மனசு முன்னுக்கும் பின்னுக்குமாக அலைக் கழித்தது.

ஒரு கட்டத்தில் மனசு அது அவன் தான் என்று உறுதி செய்தது.

வேக வேகமாக நடந்து அவனைத் முந்தி முன்னால் போய் அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் தான். அவனே தான்.

அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்காமல் அனிச்சை செயலாய் வாய் ‘சுரேந்திரா’ என்றது.

அவன் அதிர்ந்து நின்றான். அவன் தான். அவனே தான்.

அவன் என்னைப் பார்த்த பார்வையில் யார் நீ என்ற கேள்வி இருந்தது. ஆறு வருட காலத்தில் நானும் மாறித் தானே
இருக்கிறேன்.

நான் தான் என்று பெயரைச் சொன்னதும் சலனமற்ற குளத்தில் கல் எறிந்ததும் எழும் சலனம் போல் முகத்தில் ஒரு மாற்றம்.

‘ஆறு வருசத்துக்கு முன்னால வாலஜா ரோட்டுல என்னோட ஆபிஸ்ல என்ன உக்கார வச்சு வரஞ்சு தள்ளுவியே மறந்துட்டயா?’ என்றேன்.

என்றாவது அவனைச் சந்திப்பேன் என்பது எனக்குத் தெரியும். அதை பல முறை கற்பனையில் பார்த்திருக்கிறேன். ஆனால் இது போல் விளக்கங்கள் சொல்ல நேரும் என்று நினைத்தது இல்லை.

ஓ நீயா என்பது போல மெல்லிதாய் அவனிடம் ஒரு புன்னகை. அதை புன்னகை என்று கூட சொல்ல முடியாது. ஒரு தட்டசைவு அல்லது உதடு திறப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். அவ்வளவு தான்.

‘ நான் மூணு படத்தில வேலை பாத்துட்டேன். இப்ப நாலாவது படம். எங்க டைரக்டர் கூட தான் வந்திருக்கேன். நீ இன்னுமா படிக்கிறா?’ என்று கேட்டதும் உடனடியாய் பதிலில்லை.

அவன் கண்கள் சிவந்து கிடந்ததை அப்போது தான் பார்த்தேன்.

சிறிது நேரம் கழித்து ‘யூஜி முடிசிட்டு இப்போ பீஜீ கடைசி வருசம்’ என்று பதில் வந்தது. அதோடு சேர்ந்து மது வாசனையும்.

நன்றாகக் குடித்திருக்கிறான். அதுவும் கல்லுரிக்குள்ளேயே. அதிர்ந்து போனேன். அவனது மாற்றம் நம்ப முடியாமல்
இருந்தது.

கொஞ்ச நேரம் மெளனமாய் நகர்ந்தது. அவன் ஜீன்சுக்குள் கை விட்டு கிங்ஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். ஒன்றை வாயில் பொருத்திய படியே சிகரெட் பாக்கெட்டை என்னிடம் நீட்டினான். அதில் இன்னும் இரண்டு சிகரெட்டுகள் மீதம் இருந்தது. வேண்டாமென்ற மறுப்பாய் தலையை ஆட்டினேன். அவன் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

ஆழ்ந்து இழுத்து புகையை வெளியேற்றினான். மனிதர்கள் இப்படியா மாறி போக முடியும் நூறு சதவீதமும் என்று வியந்த படி நின்றிருந்தேன். ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அப்புறம்’ என்றான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.பின் சமாளித்து ‘ஒன்னோட போன் நம்பர் குடு’ என்றேன்.

அவன் முகம் தீவிரமானது’ வீட்டுக்கு மட்டும் தான் போன்ல பேசுறது, போனே ரெம்பத் தொல்லை’ என்றான்.

எனக்கு சுளீரென வலித்தது. என்னடா ஏன் இப்படி ஆகிட்ட என்ன ஆச்சு இப்படி ஏதாவது கேட்டு விட என் நட்பு துடித்தது. ஆனாலும் அவனுக்குள் நடந்திருக்கும் தலை கீழ் மாற்றம்
அதற்கெல்லாம் அனுமதிக்குமா? என்று சந்தேகமாய் இருந்ததால் அமைதியாய் இருந்தேன். அவனும் அமைதியாய் இருந்தான்.

சரி கிளம்பி விடலாம் என்று நினைத்த கணத்தில் கிளம்புறேன் என்ற ஒற்றை வார்த்தை விடை பெறலின் பின் அவன் நடந்து போனான். அவன் நடந்து நடந்து சென்று ஏதோ வகுப்பறைகுள் நுழைந்தான். அவன் சென்று மறைவது வரைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.

ஆனாலும் சுரேந்திரனின் கதைக்கு இது முடிவாக இருக்காது எனத் தோன்றியது. சில நாட்களுக்குப் பிறகோ, இல்லை சில மாதங்கள் ஆண்டுகளுக்குப் பிறகோ ஒரு சந்திப்பு அல்லது ஒரு செய்தி நிகழ சாத்தியமானவைகளாய் எண்ணியதைத் தாண்டி ஏதேனும் திருப்பம் நிகழ்த்தும் என்ற நம்பிக்கையோடு திரும்பி நடக்கத் துவங்கினேன்.

முன்னறிய முடியாதவை…

zzthecommunicators202055

பட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி ஏதோ இருப்பதை துரித கதியிலான தட்டுதல் உணர்த்தியது.

இத்தனை சப்தத்திலும் ப்ரியா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலா லேசாக நெளிந்தாள். மெதுவாக தொட்டிலை ஆட்டி விட்டு விரைவாய் கதவைத் திறந்தேன். மருது சாரும், காளியம்மா அக்காவும் நின்றிருந்தார்கள். அவர்கள் நாங்கள் இதற்கு முன் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள். நான்கு வீடு தள்ளி அவர்கள் வீடு இருக்கிறது.

இந்த அதிகாலையில் என்ன அவசரம் என்று விளங்காமல் அவர்களைப் பார்த்தேன். ஏதோ சொல்லத் தயங்கி நிற்பதைப் போல இருந்தது.

‘ என்ன சார், உள்ள வாங்க ?’ என்றதும்.

‘ஒன்னும் பதட்டப் படாதீங்க , காலைல ஊர்லருந்து போன் வந்தது . ப்ரியாவோட அப்பாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லயாம், குடும்பத்தோட உடனே வரச் சொன்னாங்க சீக்கிரம் கிளம்புங்க ‘

இதைச் சொல்வதற்குள் அவர் பட்ட சிரமும் அவரின் கலங்கிய கண்களும் எனக்கு சந்தேகமாய் இருந்தது.

‘ என்ன சார் ஆச்சு என்ன சொன்னாங்க ‘ கேட்டுக் கொண்டிருக்கும் போதே ப்ரியா எழுந்து வந்து விட்டாள். பேசியதெல்லாம் காதில் விழுந்திருக்கிறது.

‘அப்பாவுக்கு என்ன ஆச்சு ‘ என்றாள்.

‘ சீரியசா இருக்காராம் உடனே வரச் சொன்னாங்க’ சொல்லச் சொல்லவே குரல் உடைந்து போனது மருது சாருக்கு.

‘எதையோ மறைக்கிறீங்க எதுவா இருந்தாலும் சொல்லிருங்க சார்’ என்று அழுது உடைந்து ப்ரியா கேட்டாள்.

‘ மனச தேத்திக்கோ ப்ரியா உங்க அப்பா இறந்து போயிட்டாரு.’ காளியம்மா அக்கா விசயத்தை உடைத்தார்கள்.

பெரும் வீறிடல் கிளம்பியது ப்ரியாவிடமிருந்து.

வாழ்வில் எப்போதும் ஏற்படாத அளவு குற்ற உணர்வு மலையென அழுத்தத் துவங்கியது என் மனதில்.

ப்ரியாவை அவளது அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட போது கூட கொஞ்சமும் குற்ற உணர்வு வந்ததில்லை.

ப்ரியாவை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.

என் மனிதத்தனம் முழுதும் உருகிக் கரைந்து ப்ரியாவின் முன்னால் ஒரு மிருக உருக்கொண்டு நிற்பதாய் தோன்றியது.

ப்ரியாவுக்கு மட்டுமல்ல நிலாவின் வாழ்விலும் உறுத்தலாகவே இருக்கப் போகிறது இந்த மறைவு.

நாளைய நம்பிக்கையில் நேற்றைக்குச் செய்த பெரும் பிழை மனதை அறுத்தது.

சரி செய்ய முடியாத பெரும் பிழை தான் அது.

பேத்தி பிறந்து ஏழு மாதங்கள் ஆகியும் பார்க்க முடியாமல் போய்விட்டார்.

பார்க்க வந்த வரை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது என் கோபம்.

ஒரு ஞானியைத் தவிர எந்த மனிதனாக இருந்தாலும் செய்திருக்கக் கூடிய தவறு தான்.

வாழ்வில் அதை இனித் திருத்த முடியாது என்ற போது அது மிகப் பெரும் வலியாய் இதயத்தை அறுக்கத் துவங்கியது.

கோவையில் நண்பர் சபாபதியின் கல்யாணத்தில் தான் ப்ரியாவை முதன் முதலில் பார்த்தேன். ப்ரியாவின் அம்மாவும் சபாபதியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்கள்.

நான் மாப்பிள்ளைத் தோழனாகவும், ப்ரியா மணப் பெண்ணின் தோழியாகவும் இருந்தாள்.கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் வரை ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு திரிந்தோம்.

அவளுக்கு நானொரு பட்டப் பெயர் சூட்ட , அவள் எனக்கொரு பெயர் வைக்க கலாட்டாவாக இருந்தது.

மறுநாள் வீடு திரும்பும் போது ப்ரியா முற்றிலும் மாறு பட்ட தோற்றத்துடன் நின்றாள்.

கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாய் முகத்தில் இருந்த சந்தோசமும் , சிரிப்பும் பெயருக்குக் கூட தென்படவில்லை.

சீக்கிரம் வரவில்லை என்று வீட்டில் திட்டுவார்கள். யாராவது வந்து விட்டு விட்டுத் திரும்ப வேண்டும் என்றாள்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது வீட்டைப் பற்றிய அவளது பயம்.

காளிதாசன் அண்ணன் கொண்டு போய் விடக் கிளம்பினார்கள். நீயும் வருகிறாயா என்று என்னையும் கூப்பிட உடனே ஒப்புக் கொண்டேன். அவளின் வீட்டையும் , வீட்டினரையும் பார்க்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.

மாலை ஏழு மணி இருக்கும் ஒண்டிப் புதூரில் இருக்கும் ப்ரியாவின் வீட்டிற்குப் போய் சேரும் போது.

அவளின் அம்மாவை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

ப்ரியாவின் அப்பாவும் என் எதிர்கால மாமனாராகிய ஆறுமுகம் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.

கட்டையாய் கறுத்த உருவம். மீசை இல்லை. கச்சிதமாய் உடம்பு இருந்ததால் வயசு தெரியாமல் சின்னப் பையன் மாதிரி இருந்தார். வெள்ளை வேட்டி, வெற்றுடம்பில் ஒரு துண்டு.

அவர் வாங்க என்று சொல்லும் போதே எனக்கு போதையே வரும் படியான மதுவாசம் அடித்தது.

அவரது கை குலுக்கும் போது இரும்பு போன்ற பலம் ஆச்சரியமாக இருந்தது.

பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிய படியே ஒரு மணி நேரம் விடவில்லை.

ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாக்கெட் சிச்சருக்கு மேல் காலியாகி இருக்கும்.

கட்டிலில் அமர்ந்த படி ஊதித் தள்ளி வீடே புகை மண்டலமாக இருந்தது.

நான் சினிமாவில் இருப்பதாய் அறிமுகம் ஆனதும் சில பிரபலங்களின் பெயரைச் சொல்லி எனக்கு நண்பர்கள் தான் என்றார்.

வெளியே வந்தும் ரெம்ப நேரத்திற்குப் பிறகும் அவரின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது காதில்.

ரொம்ப காலத்திற்கு முன் மில் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். விருப்ப ஓய்வு பெற்று, அதில் வந்த பணத்தையெல்லாம் யாரையோ நம்பி கடனாய் கொடுத்து தொலைத்து விட்டார்.

ப்ரியாவின் அம்மாவின் அரசாங்க சம்பளத்தில் குடும்பம் ஓடுகிறது.

அவரே பெருமையாய் பேசும் போது சொன்ன படி 33 ஆண்டுகளாக குடிப்பவர்.

ஒரு நாளைக்கு ரூ 100க்கு (95ம் ஆண்டுக்கான விலையில்) குடித்தாகனும்.

வீட்டில் கேட்கும் போது கறி, கோழி, முட்டை கிடைத்தாக வேண்டும் இல்லை என்றால் என்னவாகும் என்பதற்கு வீட்டில் இன்சிலேசன் டேப் வைத்து ஓட்டப் பட்டிருக்கும் சுவிட்ச் போர்டுகள், ஒடுங்கிக் கிடக்கும் பீரோ போன்றவை உதாரணங்கள்.

இவை அத்தனையும் விட கோவிலில் சிலைக்கு பவ்வியமாய் பூசை செய்யும் பூசாரியைப் போல் ப்ரியாவின் அம்மா தன் கணவனின் எல்லாத் தேவைகளையும் முக்கல் முனகல் ஏதும் இல்லாமல் செய்து கொடுப்பது தான் ஆச்சரியம். அவர்களின் திருமணம் காதல் திருமணமாம். அந்தக் காதல் தானோ என்னவோ?

இதெல்லாம் தெரிந்த பிறகு தான் ப்ரியாவின் மீது காதல் பெருகி வளர்ந்தது.

நான் சென்னையில் இருந்த படியும் அவள் கோவையில் இருந்த படியும் கடிதத்தில் காதலித்துக் கொண்டிருந்தோம்.

இடையில் கோவை வரும் போது சில முறை அவள் வீட்டிற்குப் போய் அவளின் அப்பாவின் போதை புராணத்தை மணிக் கணக்கில் கேட்டுத் திரும்புவேன்.

ஒருமுறை பல மணி நேரம் என்னைப் போகக் கூடாது என்று கிளம்ப விடவே இல்லை. இரவு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்த போது ப்ரியாவின் அம்மா அவர் பார்க்காத போது காகிதத்தில் எழுதப் பட்ட குறிப்பு ஒன்றை கையில் திணித்தார்கள். அதில் ‘ அப்பா என்று சொல்லவும் விட்டு விடுவார் ‘ என்று எழுதி இருந்தது.

பசங்க யாரவது வீட்டிற்கு வந்தால் இது தொடர்ந்து நடக்கிற விசயம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பாவம் எங்களின் காதலைப் பற்றி தெரியாமல் பிதற்றி இருக்கிறார் ப்ரியாவின் அம்மா என்று மனதில் நினைத்த படி கூடுதலாய் ஒரு மணி நேரத்தை செலவழித்து கடைசி பேருந்தையும் விட்டு விட்டு நடந்து திரும்பினேன்.

எங்கள் வீட்டில் என் காதல் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் வயது கடந்து கொண்டிருப்பதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்று துடித்தார்கள்.

இதற்குள் ப்ரியாவின் வீட்டில் விசயம் தெரிந்து தண்டிக்கப் பட்டாள். வேறு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியும் ஆரம்பமானது.

ஆனது ஆகட்டும் என்று என் அப்பா, அம்மா, மாமா, தம்பி அனைவரும் ஒரு வாடகை காரை அமர்த்தி ப்ரியாவின் வீட்டிற்குப் போய் பெண் கேட்டார்கள்.

அவளின் அப்பா ‘பெண்ணைப் படிக்க வைக்கணும் , உங்களுக்கு கொடுக்க முடியாது, அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நீங்க தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு குடும்பத்தோட தற்கொலை செஞ்சுக்குவோம்,’ என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இது நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுத சிதம்பரம் வந்த போது , தேர்வுகளை எழுதி முடித்து விட்டு என் வீட்டிற்கு ப்ரியாவை அழைத்து வந்து விட்டேன்.

எனது உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில் சொன்ன படி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வார்களோ என்று பயந்த படி இருந்தாள் ப்ரியா.

அவள் எதிர்பார்த்த படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சமாதானத்திற்கு வந்தார்கள் அவளின் அப்பாவும், அம்மாவும்.

கோவையில் ஒரு வரவேற்பு விழா நடத்தினார்கள்அவர்களின் உறவினர்கள் முன்னிலையில்.

அன்றைக்கு இரவே சென்னைக்கு கிளம்பினோம் நானும் , ப்ரியாவும் எனது பெற்றோரும் .

கிளம்புவதற்கு சற்று முன் என்னை தனியே அழைத்து என் மாமனார் ‘ அவளை நல்லா அடக்கி வையுங்க, நான் என் பொண்டாட்டியை வச்சிருக்க மாதிரி. ஏய்னு சத்தம் போட்டா ஒன்னுக்கு போயிரு வா’ என்று எந்த மாமனாரும் இது வரை உலகில் வழங்கி இராத அறிவுரை வழங்கினார்.

அம்மாவும் , அப்பாவும் சென்னை வந்து நான் பார்த்து வைத்த வீட்டிற்கு முன் பணம் கொடுத்தார்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை சரவணா ஸ்டோரில் வாங்கிக் கொடுத்து விட்டு,இரண்டு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கும் வாங்கி வைத்தார்கள்.

கையில் 2500 பணம் கொடுத்து விட்டு மகனே இனி உன் சமத்து என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்கள்.

இந்த நாளுக்கு இடைப் பட்ட மூன்றரை ஆண்டுகளில் சில முறை தான் ஊருக்குப் போய் இருக்கிறோம்.

மருமகனாக ப்ரியாவீட்டிற்கு போயிருந்த போது கூட அதே போல் குடித்து வீட்டு சொன்னதையே சொல்லி உயிரை எடுத்துக் கொண்டிருந்தார்.

காதலின் போது கட்டாயமாக தாங்கிக் கொள்ள நேர்ந்தது.

திருமணத்தின் பின் இரண்டாம் முறை போயிருந்த போது பகலில் குடித்து விட்டு உளற ஆரம்பித்தார் பொறுக்க மாட்டாமல் உடை மாற்றிக் கொண்டு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

மாமனார் இரண்டு முறை சென்னை வந்திருக்கிறார்.

ப்ரியாவின் தங்கை வேதாவிற்கு பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விட்டிருந்த போது அவளை அழைத்துக் கொண்டு முதன் முறை வந்திருந்தார்.

ரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு வந்த போது இரவு 10 மணியாகி விட்டது. சாப்பிட டிபன் கொடுத்த போது கறி பக்கத்துல எங்கயாவது கடையில் கிடைக்குமா என்றார். நானும் ப்ரியாவும் அதை எதிர் பார்க்கவில்லை.

நாளைக்கு எடுத்து சமைச்சுக்கலாம் என்று ஒருவழியாய் சமாதானப் படுத்தி விட்டோம்.

மறுநாள் போரடிக்கிறது என்றார். பொண்ணு வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை வைத்தாவது தண்ணியடிக்காமல் இருப்பார் என்று நினைத்தேன். மாலையில் அவரால் முடியவில்லை.

தண்ணியடிக்க வேண்டும் கடை எங்கே இருக்கிறது கூப்பிடுப் போக வேண்டும் என்றார். எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியவில்லை.

கடையை மட்டும் காட்டுங்கள். வரும் போது நானே வந்து விடுகிறேன் என்றார் . ஒப்புக் கொண்டேன்.

வீட்டிலிருந்து பக்கத்தில் தான் கடை. போகும் போதே வழியெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.தெருப் பெயர், வீட்டு எண்ணை சொல்லச் சொல்லி மனப் பாடம் செய்து கொண்டார்.

கடையைப் பார்த்ததும் பக்தனுக்கு கோவிலைக் கண்டதும் வரும் பக்தி மாதிரி முகம் மலர்ந்து உள்ளே சென்றார்.

சரியாக வந்து விடுவேன் நீங்கள் கிளம்பலாம் என்று அவர் சொல்லி இருந்தாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. கூடவே இவர் சரியாக வீட்டிற்கு வருகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

அவருக்குத் தெரியாமல் காத்திருந்து பின் தொடர முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார். பக்கத்துக் கடையில் சிகரெட் வாங்கினார்.

நடக்கத் துவங்கினார். சரியான திசை தான்.

அவர் திரும்பினாலும் உடனே தெரியாத அளவு இடைவெளியில் பின் தொடர்ந்தேன்.

அவரின் நடையில் தள்ளாட்டம் இல்லை. எத்தனை வருட சர்வீஸ். மகள் வீடு என்பதால் குறைவாகக் கூட குடித்திருக்கலாம்.

சரியான பாதை வழியாகவே போனார்.

இன்னும் ஒரு தெரு தான் இருந்தது. அதைத் தாண்டினால் எங்கள் தெரு.

நான் அவரைக் கவனித்த படியே நடந்தேன்.

சடாரென எங்கள் தெருவுக்கு முந்தைய தெருவில் திரும்பி நடக்கத் துவங்கினார்.

நான் நடையை விரைவு படுத்தினேன். அவர் என்ன தான் செய்கிறார் என்பதைப் பார்க்கிற ஆவலும் இருந்தது.

இடது பக்கம் ஒரு வீட்டிற்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார். விரைந்து போய் அவர் கைகளைப் போய் பிடித்துக் கொண்டேன். அதிர்ந்து பர்த்தார். நம்ம வீடு அடுத்த தெருவில் என்றேன்.

எங்கள் வீட்டின் எண் தான் அவர் நுழைந்த வீட்டிற்கும்.

நல்ல வேளை பின்னாலேயே வந்தீங்க என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார். ப்ரியாவிடம் இதைச் சொல்லி விடாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்.

அதன் பின் ஓரிரு நாளில் கிளம்பிவிட்டார். அவரின் சுதந்திரமும், அதிகாரமும் கொடிகடிப் பறக்கும் அவரின் வீட்டிற்கு அவசர அவசரமாய் கிளம்பிவிட்டார்.

அதன் பிறகு ப்ரியாவின் வளை காப்பிற்கு முந்தைய நாள் சென்னைக்கு மீண்டும் வந்தார்.

அவளின் அப்பா, அம்மா, தங்கைகள், எனது அப்பா, அம்மா எல்லோரும் வந்திருந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் எனது அப்பா, அம்மா தொடர்ந்த நச்சரிப்பை இனியும் தாங்க முடியாது என்ற ஒரு கட்டத்தில் குழந்தைக்கு ஒப்புக் கொண்டோம்.

வளைகாப்பை சென்னையிலேயே நடத்த வேண்டுமென்று நானும், ப்ரியாவும், விருப்பப் பட்டோம்.

கல்யாணம் பொள்ளாச்சியில், வரவேற்பு கோவையில், சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பாக இதைக் கருதினோம்.

ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதை பொறுமையாய் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று பேக்கைத் தூக்கிவிட்டார்கள். அதோடு ஏதோ எசகு பிசகாக வார்த்தை ப்ரியாவின் அம்மாவோ அப்பாவோ சொல்ல எனக்கு வந்த கோபத்தில் ஏதோ பேச அது பெரும் சண்டையாக முடிந்தது.

அனைவரும் மதிக்கும் படியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் பெயரை கெடுக்கும் படியாக நடந்து கொண்டது என்னை ஆத்திரமுற்றவனாக்கி இருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. ஆளுக்காள் கத்தி, திட்டி பெரும் புயல் அடிப்பது போலிருந்தது.

எதையும் யோசிக்காமல் ப்ரியாவின் அப்பா கிளம்ப அம்மாவும், ப்ரியாவின் இரு தங்கைகளும் கிளம்பி விட்டார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து என் அப்பா, அம்மாவே சென்னயில் வளைகாப்பை நடத்தி விட்டு ப்ரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினார்கள்.

பின் வீட்டைக் காலி செய்து விட்டு நானும் கோவைக்குப் போய்ச் சேர்ந்தேன்.

குப்புசாமி மருத்துவமனையில் அவ்வப் போது செக்கப்புக்கு போய் வருவோம்.

அப்படி ஒருநாள் போய்விட்டு வரும் போது ப்ரியாவின் அம்மா வந்துவிட்டுப் போனதாக என் அம்மா சொன்னார்கள்.

அவர்கள் ஏன் வந்தார்கள் வந்தால் பார்க்க முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

ஒரு வழியாய் நிலா பிறந்தாள்.

நிலா பிறந்து ஒரு 10 நாள் இருக்கும் ஒரு நாள் மாலை ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும், தங்கைகளும் எங்கள் வீடு நோக்கி வந்து கொண்டிருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டேன்.

ப்ரியாவிடம் சொன்னேன் வரட்டும் நல்லா கேட்கிறேன் என்றாள். நீ பேசுனா தப்பாயிடும் உள்ள போஎன்ன நடந்தாலும் வெளிய வராதே என்று சொல்லிவிட்டேன்.

வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போதே திண்ணையில் நின்றிருந்தேன்.

கோபம் எனக்கு பொங்கிப் பொங்கி வந்தது. வாயும் வயிறுமாய் இருந்தவளை ஒருநாள் கூட பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளாமல், வலியில் துடித்து கதறும் போது ஆறுதல் சொல்லாமல் தனது பொறுப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு, ஊரில் வந்து கேவலப் படுத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் என்ன தைரியமாக வருகிறார்கள்.

‘எங்க வந்தீங்க’ வர வரவே வார்த்தையால் நிறுத்தினேன்.

‘ எங்க பொண்ணப் பாக்கிறதுக்கு ‘ பதிலாய் சொன்னார்.

‘ இது வரைக்கும் பாத்ததெல்லாம் போதும், நாங்க பாத்துக்கிறோம், கிளம்புங்க ‘ என்றேன்.

அவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

‘ அப்ப இனி எல்லாம் அவ்வளவு தானா ? எல்லாம் முடிஞ்சிருச்சா? ‘ என்றார் வேகமாக.

‘அப்படித் தான் ‘ என்றேன் முடிவாக.

கோபம் பெருகிய முகத்தோடு முறைத்து விட்டுத் திரும்பினார்.

அது தான் எனக்கும் அவருக்குமான கடைசிச் சந்திப்பு என்பது தெரியவில்லை அப்போது.

ஒருவேளை தெரிந்திருந்தால் அந்த நிகழ்வு அப்படி இருந்திருக்காது என்பது உறுதி.

எப்படி அவரின் இறந்த உடலைக் காண்பது என்று தெரியவில்லை. ஒருவேளை பாவி என்று மாமியார் மண்ணெடுத்து வீசி வசை பாடினால் என்ன செய்வது என்று மனம் அடித்துக் கொண்டது பயண வழியெல்லாம்.

இரவு வரை எங்களுக்காக காத்திருந்தது சடங்குகள்.

ப்ரியா குழந்தையை காலடியில் போட்டு கதறினாள்.

ப்ரியா தனது தங்கையிடம் கொடுத்த நிலாவின் போட்டோவை அவர் பார்த்துவிட்டு எல்லோரிடமும் பேத்தி என்று காட்டிக் கொண்டிருந்தாராம்.

ஓரிரு நாட்களில் கிளம்பி சென்னை வந்து பேத்தியைப் பார்க்கவும் முடிவு செய்திருந்தாராம்.

வழக்கம் போல் இரவு தண்ணியடித்து விட்டுப் படுத்தவர். உறக்கத்திலேயே போயிருக்கிறது உயிர்.

அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு கணமும் மனம் கொந்தளித்து இருந்தது.

இறந்த பிறகு லேமினேட் செய்து மாட்டப் படிருந்த புகைப் படத்திலிருந்து சிரித்த படி அவர் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவர்களின் வீட்டில் திருவாளர் ஆறுமுகம் அவர்கள் படமாய் இருக்கிறார். ஆனால் எனக்குள் உயிருள்ள வரை வைத்துப் போற்ற வேண்டிய பாடமாய்.

பட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி ஏதோ இருப்பதை துரித கதியிலான தட்டுதல் உணர்த்தியது.

இத்தனை சப்தத்திலும் ப்ரியா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலா லேசாக நெளிந்தாள். மெதுவாக தொட்டிலை ஆட்டி விட்டு விரைவாய் கதவைத் திறந்தேன். மருது சாரும், காளியம்மா அக்காவும் நின்றிருந்தார்கள். அவர்கள் நாங்கள் இதற்கு முன் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள். நான்கு வீடு தள்ளி அவர்கள் வீடு இருக்கிறது.

இந்த அதிகாலையில் என்ன அவசரம் என்று விளங்காமல் அவர்களைப் பார்த்தேன். ஏதோ சொல்லத் தயங்கி நிற்பதைப் போல இருந்தது.

‘ என்ன சார், உள்ள வாங்க ?’ என்றதும்.

‘ஒன்னும் பதட்டப் படாதீங்க , காலைல ஊர்லருந்து போன் வந்தது . ப்ரியாவோட அப்பாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லயாம், குடும்பத்தோட உடனே வரச் சொன்னாங்க சீக்கிரம் கிளம்புங்க ‘

இதைச் சொல்வதற்குள் அவர் பட்ட சிரமும் அவரின் கலங்கிய கண்களும் எனக்கு சந்தேகமாய் இருந்தது.

‘ என்ன சார் ஆச்சு என்ன சொன்னாங்க ‘ கேட்டுக் கொண்டிருக்கும் போதே ப்ரியா எழுந்து வந்து விட்டாள். பேசியதெல்லாம் காதில் விழுந்திருக்கிறது.

‘அப்பாவுக்கு என்ன ஆச்சு ‘ என்றாள்.

‘ சீரியசா இருக்காராம் உடனே வரச் சொன்னாங்க’ சொல்லச் சொல்லவே குரல் உடைந்து போனது மருது சாருக்கு.

‘எதையோ மறைக்கிறீங்க எதுவா இருந்தாலும் சொல்லிருங்க சார்’ என்று அழுது உடைந்து ப்ரியா கேட்டாள்.

‘ மனச தேத்திக்கோ ப்ரியா உங்க அப்பா இறந்து போயிட்டாரு.’ காளியம்மா அக்கா விசயத்தை உடைத்தார்கள்.

பெரும் வீறிடல் கிளம்பியது ப்ரியாவிடமிருந்து.

வாழ்வில் எப்போதும் ஏற்படாத அளவு குற்ற உணர்வு மலையென அழுத்தத் துவங்கியது என் மனதில்.

ப்ரியாவை அவளது அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட போது கூட கொஞ்சமும் குற்ற உணர்வு வந்ததில்லை.

ப்ரியாவை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.

என் மனிதத்தனம் முழுதும் உருகிக் கரைந்து ப்ரியாவின் முன்னால் ஒரு மிருக உருக்கொண்டு நிற்பதாய் தோன்றியது.

ப்ரியாவுக்கு மட்டுமல்ல நிலாவின் வாழ்விலும் உறுத்தலாகவே இருக்கப் போகிறது இந்த மறைவு.

நாளைய நம்பிக்கையில் நேற்றைக்குச் செய்த பெரும் பிழை மனதை அறுத்தது.

சரி செய்ய முடியாத பெரும் பிழை தான் அது.

பேத்தி பிறந்து ஏழு மாதங்கள் ஆகியும் பார்க்க முடியாமல் போய்விட்டார்.

பார்க்க வந்த வரை பார்க்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது என் கோபம்.

ஒரு ஞானியைத் தவிர எந்த மனிதனாக இருந்தாலும் செய்திருக்கக் கூடிய தவறு தான்.

வாழ்வில் அதை இனித் திருத்த முடியாது என்ற போது அது மிகப் பெரும் வலியாய் இதயத்தை அறுக்கத் துவங்கியது.

கோவையில் நண்பர் சபாபதியின் கல்யாணத்தில் தான் ப்ரியாவை முதன் முதலில் பார்த்தேன். ப்ரியாவின் அம்மாவும் சபாபதியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறார்கள்.

நான் மாப்பிள்ளைத் தோழனாகவும், ப்ரியா மணப் பெண்ணின் தோழியாகவும் இருந்தாள்.கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் வரை ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு திரிந்தோம்.

அவளுக்கு நானொரு பட்டப் பெயர் சூட்ட , அவள் எனக்கொரு பெயர் வைக்க கலாட்டாவாக இருந்தது.

மறுநாள் வீடு திரும்பும் போது ப்ரியா முற்றிலும் மாறு பட்ட தோற்றத்துடன் நின்றாள்.

கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாய் முகத்தில் இருந்த சந்தோசமும் , சிரிப்பும் பெயருக்குக் கூட தென்படவில்லை.

சீக்கிரம் வரவில்லை என்று வீட்டில் திட்டுவார்கள். யாராவது வந்து விட்டு விட்டுத் திரும்ப வேண்டும் என்றாள்.

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது வீட்டைப் பற்றிய அவளது பயம்.

காளிதாசன் அண்ணன் கொண்டு போய் விடக் கிளம்பினார்கள். நீயும் வருகிறாயா என்று என்னையும் கூப்பிட உடனே ஒப்புக் கொண்டேன். அவளின் வீட்டையும் , வீட்டினரையும் பார்க்க கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.

மாலை ஏழு மணி இருக்கும் ஒண்டிப் புதூரில் இருக்கும் ப்ரியாவின் வீட்டிற்குப் போய் சேரும் போது.

அவளின் அம்மாவை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

ப்ரியாவின் அப்பாவும் என் எதிர்கால மாமனாராகிய ஆறுமுகம் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.

கட்டையாய் கறுத்த உருவம். மீசை இல்லை. கச்சிதமாய் உடம்பு இருந்ததால் வயசு தெரியாமல் சின்னப் பையன் மாதிரி இருந்தார். வெள்ளை வேட்டி, வெற்றுடம்பில் ஒரு துண்டு.

அவர் வாங்க என்று சொல்லும் போதே எனக்கு போதையே வரும் படியான மதுவாசம் அடித்தது.

அவரது கை குலுக்கும் போது இரும்பு போன்ற பலம் ஆச்சரியமாக இருந்தது.

பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிய படியே ஒரு மணி நேரம் விடவில்லை.

ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாக்கெட் சிச்சருக்கு மேல் காலியாகி இருக்கும்.

கட்டிலில் அமர்ந்த படி ஊதித் தள்ளி வீடே புகை மண்டலமாக இருந்தது.

நான் சினிமாவில் இருப்பதாய் அறிமுகம் ஆனதும் சில பிரபலங்களின் பெயரைச் சொல்லி எனக்கு நண்பர்கள் தான் என்றார்.

வெளியே வந்தும் ரெம்ப நேரத்திற்குப் பிறகும் அவரின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது காதில்.

ரொம்ப காலத்திற்கு முன் மில் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறார். விருப்ப ஓய்வு பெற்று, அதில் வந்த பணத்தையெல்லாம் யாரையோ நம்பி கடனாய் கொடுத்து தொலைத்து விட்டார்.

ப்ரியாவின் அம்மாவின் அரசாங்க சம்பளத்தில் குடும்பம் ஓடுகிறது.

அவரே பெருமையாய் பேசும் போது சொன்ன படி 33 ஆண்டுகளாக குடிப்பவர்.

ஒரு நாளைக்கு ரூ 100க்கு (95ம் ஆண்டுக்கான விலையில்) குடித்தாகனும்.

வீட்டில் கேட்கும் போது கறி, கோழி, முட்டை கிடைத்தாக வேண்டும் இல்லை என்றால் என்னவாகும் என்பதற்கு வீட்டில் இன்சிலேசன் டேப் வைத்து ஓட்டப் பட்டிருக்கும் சுவிட்ச் போர்டுகள், ஒடுங்கிக் கிடக்கும் பீரோ போன்றவை உதாரணங்கள்.

இவை அத்தனையும் விட கோவிலில் சிலைக்கு பவ்வியமாய் பூசை செய்யும் பூசாரியைப் போல் ப்ரியாவின் அம்மா தன் கணவனின் எல்லாத் தேவைகளையும் முக்கல் முனகல் ஏதும் இல்லாமல் செய்து கொடுப்பது தான் ஆச்சரியம். அவர்களின் திருமணம் காதல் திருமணமாம். அந்தக் காதல் தானோ என்னவோ?

இதெல்லாம் தெரிந்த பிறகு தான் ப்ரியாவின் மீது காதல் பெருகி வளர்ந்தது.

நான் சென்னையில் இருந்த படியும் அவள் கோவையில் இருந்த படியும் கடிதத்தில் காதலித்துக் கொண்டிருந்தோம்.

இடையில் கோவை வரும் போது சில முறை அவள் வீட்டிற்குப் போய் அவளின் அப்பாவின் போதை புராணத்தை மணிக் கணக்கில் கேட்டுத் திரும்புவேன்.

ஒருமுறை பல மணி நேரம் என்னைப் போகக் கூடாது என்று கிளம்ப விடவே இல்லை. இரவு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்த போது ப்ரியாவின் அம்மா அவர் பார்க்காத போது காகிதத்தில் எழுதப் பட்ட குறிப்பு ஒன்றை கையில் திணித்தார்கள். அதில் ‘ அப்பா என்று சொல்லவும் விட்டு விடுவார் ‘ என்று எழுதி இருந்தது.

பசங்க யாரவது வீட்டிற்கு வந்தால் இது தொடர்ந்து நடக்கிற விசயம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பாவம் எங்களின் காதலைப் பற்றி தெரியாமல் பிதற்றி இருக்கிறார் ப்ரியாவின் அம்மா என்று மனதில் நினைத்த படி கூடுதலாய் ஒரு மணி நேரத்தை செலவழித்து கடைசி பேருந்தையும் விட்டு விட்டு நடந்து திரும்பினேன்.

எங்கள் வீட்டில் என் காதல் அங்கீகரிக்கப் பட்டது. ஆனால் வயது கடந்து கொண்டிருப்பதால் உடனே திருமணம் நடத்த வேண்டும் என்று துடித்தார்கள்.

இதற்குள் ப்ரியாவின் வீட்டில் விசயம் தெரிந்து தண்டிக்கப் பட்டாள். வேறு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியும் ஆரம்பமானது.

ஆனது ஆகட்டும் என்று என் அப்பா, அம்மா, மாமா, தம்பி அனைவரும் ஒரு வாடகை காரை அமர்த்தி ப்ரியாவின் வீட்டிற்குப் போய் பெண் கேட்டார்கள்.

அவளின் அப்பா ‘பெண்ணைப் படிக்க வைக்கணும் , உங்களுக்கு கொடுக்க முடியாது, அதை மீறி ஏதாவது செஞ்சீங்கன்னா நீங்க தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு குடும்பத்தோட தற்கொலை செஞ்சுக்குவோம்,’ என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இது நடந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தேர்வு எழுத சிதம்பரம் வந்த போது , தேர்வுகளை எழுதி முடித்து விட்டு என் வீட்டிற்கு ப்ரியாவை அழைத்து வந்து விட்டேன்.

எனது உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில் சொன்ன படி குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்வார்களோ என்று பயந்த படி இருந்தாள் ப்ரியா.

அவள் எதிர்பார்த்த படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் எதிர்பாராத விதமாக திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் சமாதானத்திற்கு வந்தார்கள் அவளின் அப்பாவும், அம்மாவும்.

கோவையில் ஒரு வரவேற்பு விழா நடத்தினார்கள்அவர்களின் உறவினர்கள் முன்னிலையில்.

அன்றைக்கு இரவே சென்னைக்கு கிளம்பினோம் நானும் , ப்ரியாவும் எனது பெற்றோரும் .

கிளம்புவதற்கு சற்று முன் என்னை தனியே அழைத்து என் மாமனார் ‘ அவளை நல்லா அடக்கி வையுங்க, நான் என் பொண்டாட்டியை வச்சிருக்க மாதிரி. ஏய்னு சத்தம் போட்டா ஒன்னுக்கு போயிரு வா’ என்று எந்த மாமனாரும் இது வரை உலகில் வழங்கி இராத அறிவுரை வழங்கினார்.

அம்மாவும் , அப்பாவும் சென்னை வந்து நான் பார்த்து வைத்த வீட்டிற்கு முன் பணம் கொடுத்தார்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை சரவணா ஸ்டோரில் வாங்கிக் கொடுத்து விட்டு,இரண்டு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கும் வாங்கி வைத்தார்கள்.

கையில் 2500 பணம் கொடுத்து விட்டு மகனே இனி உன் சமத்து என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்கள்.

இந்த நாளுக்கு இடைப் பட்ட மூன்றரை ஆண்டுகளில் சில முறை தான் ஊருக்குப் போய் இருக்கிறோம்.

மருமகனாக ப்ரியாவீட்டிற்கு போயிருந்த போது கூட அதே போல் குடித்து வீட்டு சொன்னதையே சொல்லி உயிரை எடுத்துக் கொண்டிருந்தார்.

காதலின் போது கட்டாயமாக தாங்கிக் கொள்ள நேர்ந்தது.

திருமணத்தின் பின் இரண்டாம் முறை போயிருந்த போது பகலில் குடித்து விட்டு உளற ஆரம்பித்தார் பொறுக்க மாட்டாமல் உடை மாற்றிக் கொண்டு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

மாமனார் இரண்டு முறை சென்னை வந்திருக்கிறார்.

ப்ரியாவின் தங்கை வேதாவிற்கு பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விட்டிருந்த போது அவளை அழைத்துக் கொண்டு முதன் முறை வந்திருந்தார்.

ரயிலில் வந்து இறங்கி வீட்டிற்கு வந்த போது இரவு 10 மணியாகி விட்டது. சாப்பிட டிபன் கொடுத்த போது கறி பக்கத்துல எங்கயாவது கடையில் கிடைக்குமா என்றார். நானும் ப்ரியாவும் அதை எதிர் பார்க்கவில்லை.

நாளைக்கு எடுத்து சமைச்சுக்கலாம் என்று ஒருவழியாய் சமாதானப் படுத்தி விட்டோம்.

மறுநாள் போரடிக்கிறது என்றார். பொண்ணு வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை வைத்தாவது தண்ணியடிக்காமல் இருப்பார் என்று நினைத்தேன். மாலையில் அவரால் முடியவில்லை.

தண்ணியடிக்க வேண்டும் கடை எங்கே இருக்கிறது கூப்பிடுப் போக வேண்டும் என்றார். எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியவில்லை.

கடையை மட்டும் காட்டுங்கள். வரும் போது நானே வந்து விடுகிறேன் என்றார் . ஒப்புக் கொண்டேன்.

வீட்டிலிருந்து பக்கத்தில் தான் கடை. போகும் போதே வழியெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.தெருப் பெயர், வீட்டு எண்ணை சொல்லச் சொல்லி மனப் பாடம் செய்து கொண்டார்.

கடையைப் பார்த்ததும் பக்தனுக்கு கோவிலைக் கண்டதும் வரும் பக்தி மாதிரி முகம் மலர்ந்து உள்ளே சென்றார்.

சரியாக வந்து விடுவேன் நீங்கள் கிளம்பலாம் என்று அவர் சொல்லி இருந்தாலும் எனக்கு மனசு கேட்கவில்லை. கூடவே இவர் சரியாக வீட்டிற்கு வருகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

அவருக்குத் தெரியாமல் காத்திருந்து பின் தொடர முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார். பக்கத்துக் கடையில் சிகரெட் வாங்கினார்.

நடக்கத் துவங்கினார். சரியான திசை தான்.

அவர் திரும்பினாலும் உடனே தெரியாத அளவு இடைவெளியில் பின் தொடர்ந்தேன்.

அவரின் நடையில் தள்ளாட்டம் இல்லை. எத்தனை வருட சர்வீஸ். மகள் வீடு என்பதால் குறைவாகக் கூட குடித்திருக்கலாம்.

சரியான பாதை வழியாகவே போனார்.

இன்னும் ஒரு தெரு தான் இருந்தது. அதைத் தாண்டினால் எங்கள் தெரு.

நான் அவரைக் கவனித்த படியே நடந்தேன்.

சடாரென எங்கள் தெருவுக்கு முந்தைய தெருவில் திரும்பி நடக்கத் துவங்கினார்.

நான் நடையை விரைவு படுத்தினேன். அவர் என்ன தான் செய்கிறார் என்பதைப் பார்க்கிற ஆவலும் இருந்தது.

இடது பக்கம் ஒரு வீட்டிற்குள் நுழைய காலடி எடுத்து வைத்தார். விரைந்து போய் அவர் கைகளைப் போய் பிடித்துக் கொண்டேன். அதிர்ந்து பர்த்தார். நம்ம வீடு அடுத்த தெருவில் என்றேன்.

எங்கள் வீட்டின் எண் தான் அவர் நுழைந்த வீட்டிற்கும்.

நல்ல வேளை பின்னாலேயே வந்தீங்க என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார். ப்ரியாவிடம் இதைச் சொல்லி விடாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்.

அதன் பின் ஓரிரு நாளில் கிளம்பிவிட்டார். அவரின் சுதந்திரமும், அதிகாரமும் கொடிகடிப் பறக்கும் அவரின் வீட்டிற்கு அவசர அவசரமாய் கிளம்பிவிட்டார்.

அதன் பிறகு ப்ரியாவின் வளை காப்பிற்கு முந்தைய நாள் சென்னைக்கு மீண்டும் வந்தார்.

அவளின் அப்பா, அம்மா, தங்கைகள், எனது அப்பா, அம்மா எல்லோரும் வந்திருந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் எனது அப்பா, அம்மா தொடர்ந்த நச்சரிப்பை இனியும் தாங்க முடியாது என்ற ஒரு கட்டத்தில் குழந்தைக்கு ஒப்புக் கொண்டோம்.

வளைகாப்பை சென்னையிலேயே நடத்த வேண்டுமென்று நானும், ப்ரியாவும், விருப்பப் பட்டோம்.

கல்யாணம் பொள்ளாச்சியில், வரவேற்பு கோவையில், சென்னையில் இருக்கும் நண்பர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பாக இதைக் கருதினோம்.

ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும் ஒப்புக் கொள்ளவில்லை. அதை பொறுமையாய் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று பேக்கைத் தூக்கிவிட்டார்கள். அதோடு ஏதோ எசகு பிசகாக வார்த்தை ப்ரியாவின் அம்மாவோ அப்பாவோ சொல்ல எனக்கு வந்த கோபத்தில் ஏதோ பேச அது பெரும் சண்டையாக முடிந்தது.

அனைவரும் மதிக்கும் படியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் பெயரை கெடுக்கும் படியாக நடந்து கொண்டது என்னை ஆத்திரமுற்றவனாக்கி இருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை. ஆளுக்காள் கத்தி, திட்டி பெரும் புயல் அடிப்பது போலிருந்தது.

எதையும் யோசிக்காமல் ப்ரியாவின் அப்பா கிளம்ப அம்மாவும், ப்ரியாவின் இரு தங்கைகளும் கிளம்பி விட்டார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து என் அப்பா, அம்மாவே சென்னயில் வளைகாப்பை நடத்தி விட்டு ப்ரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினார்கள்.

பின் வீட்டைக் காலி செய்து விட்டு நானும் கோவைக்குப் போய்ச் சேர்ந்தேன்.

குப்புசாமி மருத்துவமனையில் அவ்வப் போது செக்கப்புக்கு போய் வருவோம்.

அப்படி ஒருநாள் போய்விட்டு வரும் போது ப்ரியாவின் அம்மா வந்துவிட்டுப் போனதாக என் அம்மா சொன்னார்கள்.

அவர்கள் ஏன் வந்தார்கள் வந்தால் பார்க்க முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

ஒரு வழியாய் நிலா பிறந்தாள்.

நிலா பிறந்து ஒரு 10 நாள் இருக்கும் ஒரு நாள் மாலை ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும், தங்கைகளும் எங்கள் வீடு நோக்கி வந்து கொண்டிருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டேன்.

ப்ரியாவிடம் சொன்னேன் வரட்டும் நல்லா கேட்கிறேன் என்றாள். நீ பேசுனா தப்பாயிடும் உள்ள போஎன்ன நடந்தாலும் வெளிய வராதே என்று சொல்லிவிட்டேன்.

வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போதே திண்ணையில் நின்றிருந்தேன்.

கோபம் எனக்கு பொங்கிப் பொங்கி வந்தது. வாயும் வயிறுமாய் இருந்தவளை ஒருநாள் கூட பக்கத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளாமல், வலியில் துடித்து கதறும் போது ஆறுதல் சொல்லாமல் தனது பொறுப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து விட்டு, ஊரில் வந்து கேவலப் படுத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் என்ன தைரியமாக வருகிறார்கள்.

‘எங்க வந்தீங்க’ வர வரவே வார்த்தையால் நிறுத்தினேன்.

‘ எங்க பொண்ணப் பாக்கிறதுக்கு ‘ பதிலாய் சொன்னார்.

‘ இது வரைக்கும் பாத்ததெல்லாம் போதும், நாங்க பாத்துக்கிறோம், கிளம்புங்க ‘ என்றேன்.

அவருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

‘ அப்ப இனி எல்லாம் அவ்வளவு தானா ? எல்லாம் முடிஞ்சிருச்சா? ‘ என்றார் வேகமாக.

‘அப்படித் தான் ‘ என்றேன் முடிவாக.

கோபம் பெருகிய முகத்தோடு முறைத்து விட்டுத் திரும்பினார்.

அது தான் எனக்கும் அவருக்குமான கடைசிச் சந்திப்பு என்பது தெரியவில்லை அப்போது.

ஒருவேளை தெரிந்திருந்தால் அந்த நிகழ்வு அப்படி இருந்திருக்காது என்பது உறுதி.

எப்படி அவரின் இறந்த உடலைக் காண்பது என்று தெரியவில்லை. ஒருவேளை பாவி என்று மாமியார் மண்ணெடுத்து வீசி வசை பாடினால் என்ன செய்வது என்று மனம் அடித்துக் கொண்டது பயண வழியெல்லாம்.

இரவு வரை எங்களுக்காக காத்திருந்தது சடங்குகள்.

ப்ரியா குழந்தையை காலடியில் போட்டு கதறினாள்.

ப்ரியா தனது தங்கையிடம் கொடுத்த நிலாவின் போட்டோவை அவர் பார்த்துவிட்டு எல்லோரிடமும் பேத்தி என்று காட்டிக் கொண்டிருந்தாராம்.

ஓரிரு நாட்களில் கிளம்பி சென்னை வந்து பேத்தியைப் பார்க்கவும் முடிவு செய்திருந்தாராம்.

வழக்கம் போல் இரவு தண்ணியடித்து விட்டுப் படுத்தவர். உறக்கத்திலேயே போயிருக்கிறது உயிர்.

அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு கணமும் மனம் கொந்தளித்து இருந்தது.

இறந்த பிறகு லேமினேட் செய்து மாட்டப் படிருந்த புகைப் படத்திலிருந்து சிரித்த படி அவர் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவர்களின் வீட்டில் திருவாளர் ஆறுமுகம் அவர்கள் படமாய் இருக்கிறார். ஆனால் எனக்குள் உயிருள்ள வரை வைத்துப் போற்ற வேண்டிய பாடமாய்.

திருமண அறிமுகம்

may-3-2008-my-card-020

அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .

என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.

பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.

15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.

ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் கூப்பிடுவாள்.

நர்மதாவிற்கு அலங்காரம் நடக்கும் போது பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அலங்காரம் முடிந்து மண்டபத்திற்கு காரில் கிளம்பும் போது நர்மதாவுடம் காரில் ஏறிக் கொண்டாள்.

மண்டபத்தில் தாய் மாமன் நான் மாலையிட்டு கல்யாண மேடைக்கு அழைத்து வந்ததை சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை சுரேஷை ஏற்கனவே பல முறை பார்த்திருப்பதால் மேடை மீது ஏறி இருவரிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

நேரமானதும் பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க தாலி கட்டுதல் முடிந்தது.

கூட்டம் நிரம்பிய மண்டபத்தில் குழந்தைகள் கூட்டத்தில் விளையாட தோழமைகள் அதிகமிருந்ததால் ஒரே ஓட்டமும் விளையாட்டாக இருந்தாள் அன்புமதி.

எல்லாம் முடிந்து மணப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் வர அனைவரும் கிளம்பிய போது அன்புமதியை தேடி கூட்டிக் கொண்டோம்.

மாப்பிள்ளை வீட்டில் சடங்குகள் முடிந்து கிளம்ப வேண்டிய நேரம்
நெருங்கியது.

என் அக்கா சாந்தி மற்றும் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இனி முதல் இத்தனை காலம் தனது கண்களில் ஒன்றாக இருந்த நர்மதா அடுத்த வீட்டுப் பெண். இனி அவள் வீடு இது தான் என்று உணர்ந்து
கண்கள் கலங்கத் துவங்கியிருந்தனர்.

மாப்பிளை வீடு நான்கைந்து தெருக்கள் தள்ளித் தான் இருக்கிறது என்றாலும் அது நீண்ட தொலைவு தான் இனிமேல்.

இனி மாப்பிள்ளை வீட்டின் விதிகள் தான் நர்மதாவைக் கட்டுப்படுத்தும்.

விட்டுப் பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தவர்களை அனுபவப் பட்ட முதிர்ந்த ஒரு குரல் ’ கிளம்புங்கப்பா அங்க வேலை கிடக்குதில்ல ’ என்று கிளப்பிவிட்டது.

பெண் வீட்டினர் அனைவரும் கிளம்பத் தயாரானோம்.

அக்கா சாந்திக்கும், மணப் பென்ணின் தங்கை நிவேதாவுக்கும் கண்கள் ஊற்றெடுத்துக் கொண்டன எனக்கும் கூட கண்கள் கலங்குவதை கட்டுப் படுத்த முடியவில்லை.

உமா பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த அன்புமதியை அழைத்து வந்தாள்.

நர்மதாவின் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழியக் காத்திருந்தது.

ஒவ்வொருவராய் நர்மதாவிடமும் மாப்பிள்ளையிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.

அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் கடைசியாய் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

அன்புமதி நர்மதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாங்கள் வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தோம். அன்புமதி திடிரென பிடித்திருந்த என் கைகளை விலக்கி விட்டு நர்மதாவை நோக்கி ஓடினாள்.

என்ன ஏதுவென்று தெரியாமல் திரும்பிப் பார்ப்பதற்குள் அன்புமதி ஓடிப் போய் நர்மதாவின் கைகளைப் பிடித்து,

‘ எல்லாரும் போறாங்கடி, வாடி நர்மதா , நீ மட்டும் ஏன் இங்க இருக்க வாடி வாடி விட்டுட்டு போயிறப் போறாங்க’

என்று மறுபடி மறு படி சொல்லிய படி நர்மதாவை இழுக்க ஆரம்பித்தாள்.

அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போனோம்.

சில அழுத மனங்கள் விம்மலை வெளிப் படுத்தின, சிலருக்கு சிறுமியின் அறியாமை இதழ்களில் சிரிப்பைச் சிந்தியது.

ஓடிச் சென்று அன்புமதியைத் தூக்கிக் கொண்டேன்.

‘ நர்மதாவுக்கு இங்க வேலை இருக்கு அதை முடிச்சிட்டு அப்புறமா வரும் , என்று சொன்னேன் அன்புமதியிடம்.

நம்பாமல் ‘ அப்புறம் வருவியாடி’ என்று நர்மதாவை அன்பு கேட்க
நர்மதா அழுத விழிகளோடு ஆமென தலையாட்டினாள்.

அன்புமதியை தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

வாசல் வரை நர்மதாவை திரும்பிப் பார்த்த படி வந்தாள் மதி.

போகும் போதோ, போய் சேர்ந்த பிறகோ பொங்கிப் பெருகும் அன்புமதியின் கேள்விகளுக்கு வழக்கம் போல் உண்மையான பதில்களால் திருமணத்தை அறிமுகம் செய்து வைப்பதாய் உறுதி கொண்டேன்.

டாம் அன்ட் ஜெர்ரிகள்

tom_and_jery11

அன்புமதிக்கு டாம் அன்ட் ஜெர்ரி என்றால் அவ்வளவு பிடிக்கும்.

வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் டிவிடியில் இருக்கும் டாம் அன்ட் ஜெர்ரி படங்களைப் பார்ப்பது தான் வேலை..

6 வயது சிறுமிக்கு இயல்பான பொழுது போக்கு தான் என்றாலும் அவ்வப் போது எனக்கு உறுத்தலாக இருக்கும்.

ஓரே வீட்டில் யாரோ போல நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது இப்போதெல்லாம்.

நாங்கள் என்பது நான், மனைவி உமா , மகள் அன்புமதி.

நகர வாழ்வின் கைகளில் சோழி முத்துகள் போல உருட்டி எறியப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நொடிகள் தோறும் என்று உணர்கிற தருணங்கள் வாழ்வின் அபத்தங்களை வலிக்கச் சொல்கின்றன.

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உலுக்கி எழுப்பி…

அவசர குளியல், அவசர உணவோடு அவசரமாய் உடை மாற்றி பள்ளிக்கு அனுப்புகிறோம்.

அடுத்து அவசரமாக நாம் குளித்து உண்டு உடை மாற்றி அலுவலகங்கள் எனும் தீரா பசியுடைய கட்டிட வாய்களின் உணவாக ஓடுகிறோம்.

மாலைப் பொழுதில் சக்கைகளாய் களைத்து திரும்பும் நாமும் குழந்தைகளும் ..

கடலில் அள்ளிய உள்ளங்கை நீரென வடிந்து கொண்டிருக்கும் தினசரி நாட்களின் எஞ்சிய உயிருள்ள பொழுதுகளை தொலைக் காட்சிகள், கணிணிகள், வீட்டு வேலைகள் என்று முகம் தெரியாத தாக உதடுகள் ஈரம் துளியுமின்றி உறிஞ்சிக் கொள்கின்றன…

மூவரும் ஒன்றாய் வீட்டில் இருக்கும் பொழுதுகள் மிகக் குறைந்ததாய் இருக்கின்றது.

என்றாவது ஆபூர்வமாய் ஒன்றாய் இருக்கும் நேரங்களையும் ஆளுக்கொரு வேலையில் கழித்து விடுகிறமென்ற உறுத்தல் விழித்திருக்கிறது எப்போதும்.

அப்படி மூவரும் இணைந்திருந்த ஒரு நாள் அது…

கணிணியில் முன் அமர்ந்திருந்தேன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் உமா.

அன்புமதி டாம் அன்ட் ஜெர்ரி பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

குழந்தையுடன் நேரம் செலவழிப்பதில்லை என்று முந்தைய நாளில் தான் பேசி வருந்திக் கொண்டிருந்தோம்.

டாம் அன்ட் ஜெர்ரி பார்ப்பதில் இருந்து கவனம் திருப்பி அருகில் அழைத்துக் கொள்ளத் தோன்றியது.

அன்பு என்று கூப்பிட்டேன்.

அடுத்த அறையில் இருந்தே என்னப்பா என்றாள்.

இங்க வாப்பா என்றதும் தனது முக்கிய வேலையின் போது அழைக்கப்படுவது குறித்த அலுப்போடு வந்தாள்.

என்ன பண்ணுற என்று தெரியாதது போல் கேட்டேன்.

டாம் அனட் ஜெர்ரி பார்க்கப் போறேன் என்றாள்.

விளையாட்டாய் பேசி எங்களுடன் இருக்க வைக்க வேண்டுமென்று தோன்றியது என்ன சொல்லமென்று யோசிக்கையில் மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது.

எல்லாக் குடும்பங்களும் போல எப்போதும் எதாவது வாக்குவாதம், சண்டை நடந்து கொண்டிருக்கும் எனக்கும், உமாவுக்கும்.

குழந்தைகள் முன்னால் சண்டையோ வாக்குவாதமோ வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அது ஒவ்வொரு முறையும் மறந்து போவதும் அதன் பிறகு அடுத்த சண்டைக்கு முந்தைய நிமிடம் வரை நினைவில் இருப்பது என்ன மாயமோ?

ஒரு சில நிகழ்வுகளில் அன்புமதி நாட்டாமையாக மாறி சாமாதானப் படுத்தி தீர்ப்பளித்ததும் உண்டு.

இதெல்லாம் கண நேரத்தில் துண்டுக் காட்சியாக ஓடித் தீர்ந்தது.

அன்புமதியை டாம் அன்ட் ஜெர்ரி பார்ப்பதிலிருந்து சமாதானப் படுத்தி அழைத்து வரும் வார்த்தை நாவின் நுனிக்கு வந்து சேர்ந்தது.

‘ நாங்க தான் நிஜ டாம் அன்ட் ஜெர்ரி இங்க இருக்கோம்ல எங்களைப் பார்த்தா போதாதா பாப்பா’

சாமர்த்தியமாய் பேசிய திருப்தியை அனுபவிக்கும் முன் ஒரு வினாடி கூட யோசிக்காமல் அன்புமதி சொன்ன பதில் குறி தவறாத ஒரு கத்தியைப் போல் சரியாய் பாய்ந்து இன்னும் வலித்துக் கொண்டு இருக்கிறது.

அப்படி மதி என்ன சொன்னாளென்றாள்…

‘ ஆனா இந்த டாம் அன்ட் ஜெர்ரில காமெடியே இல்லையேப்பா ‘

வாழ்க ஜனநாயகம்

இரண்டு நாளுக்கு முன்பு தினத் தந்தியில் ஒரு செய்தியைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை.
வேறு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விட்டுப் போனவர்களை இணைக்கும் இறுதி முயற்சியாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்திருந்தது . அதில் ஒன்று செல்பேசி எண், மற்றொன்று தொலைபேசி எண். 8ம் தேதி கடைசி நாள் அதற்குள் அந்த எண்களுக்கு பேசினால் வீடு தேடி வந்து வாக்காளர் பட்டியலில் உங்களை இணைத்துக் கொள்வார்கள் என்றது அந்த செய்தி.

நமது நாடு எவ்வளவு முன்னேறிவிட்டது. குடிமக்களை என்னமாய் மதிக்கிறது ஆனது ஆகட்டும், போனது போகட்டும் என்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். உணர்ச்சி வசப்பட்டு என்ன செய்தேன் என்கிறீர்களா? அந்த எண்களுக்கு முயற்சி செய்தேன்.

முதலில் செல்பேசிக்கு, எண்களை மெனக்கிட்டு எனது செல்பேசியில் சேமித்திருந்தேன். என்ன பதில் என்று ஆவலுடன் அவர்கள் வீட்டுக்கு வர வசதியாய் வீட்டில் இருக்கும் நாளாகப் பார்த்து இன்றைக்குப் பேசினேன். எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தேன் சிறிது நேரத்திற்குப் பிறகு ‘ இந்த எண் சுவிட்ச்டு ஆப் ‘ என்றது ஒரு பதிவுக் குரல்.

கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனாலும் தொலைபேசி எண் கையிலிருக்கும் தெம்பு இருந்தது. மனம் தளராத விக்கிரமாதித்யனாக தொலைபேசி எண்ணை தேடி அழுத்தி விட்டுக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ‘ டெம்ரவர்லி அவுட் ஆப் ஆடர் ‘ என்று சொல்லி அதுவும் கைவிட்டது.

எனக்கு பெரும் கோபமாகிவிட்டது. என் மேல் தான். அரசு சம்பந்தப்பட்ட செயல்கள் இப்படித் தான் என்பதை கால காலமாக உணர்ந்தும் அல்ப நம்பிக்கையில் செயல்பட்டு விட்டது குறித்து ஆயாசமாக இருந்தது.

என்னைப் போல எத்தனை பேர் பேச முயற்சி செய்து கொலை வெறியில் சுத்துறாங்களோ?

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். 9382136694 – 25383695 –

வாழ்க ஜனநாயகம்…..

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்