கறுப்பு வெள்ளை உலகம்

84

அன்புமதி திடிரென அந்தக் கேள்வியைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.

கொஞ்ச நேர சிரிப்புக்குப் பின் தான் பதில் சொல்ல முடிந்தது.

அன்புமதி எனது 6 வயது மகள்.

சிறிய வயதில் இருந்து சில கேள்விகளால் என்னை வியப்பில் ஆழ்த்துவாள்.

செத்துப் போறதுன்னா என்னாப்பா,என்பது போன்ற கேள்விகள்.

நான் விளக்கமாய் உண்மையான பதில்களைச் சொல்லுவேன்.

அவைகளை பதிவுகளாகவும் போட்டிருக்கிறேன்.

இப்போது வளர வளர கேள்விகள் குறைந்து வருகிறதோ? சிந்திக்க நேரமில்லாமல் தொலைக்காட்சியும் , விளையாட்டும் மூளையில் நிறைந்து போனதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்படிக் கேட்டாள்.

கேள்வி இது தான்.

‘ அப்பா கறுப்பு வெள்ளை படங்கள் வந்த போது இந்த உலகம் கறுப்பு வெள்ளையாகவா இருந்தது ?’

இல்லை எல்லா செயல்களுடன் அவள் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்ற மகிழ்வுடன் அன்புமதியின் கேள்விகான பதிலை சொன்னேன்.

நுழை வாயிலில்…

youngdirector_450x4301

சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.

சென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் உணவு இடைவேளை விட்டு விடுவார்கள். அப்போது தான் அவரைப் பார்க்க வேண்டும்
என்று அறிவுறுத்தப் பட்டிருந்தேன். என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற வினாடிக்காக பதட்டமும், பரபரப்பும், சற்று சந்தோசமும், வருத்தமுமாக கலவையான எண்ண ஓட்டங்களோடு காத்திருந்தேன்.

இவ்வளவு அருகில் இருந்து இவ்வளவு நேரம் படப்பிடிப்பை பார்க்கக் கிடைத்தே பாக்கியமாய் உணர்ந்தேன்.

இடையில் கிடைத்த இடைவேளையின் போது எனக்குப் பக்கத்தில் வந்து நின்றார் இயக்குனர். இணை இயக்குனர் ஒருவரும் உடன் இருந்தார். வேடிக்கையாய் அவர்கள் பேசிய ஒரு விசயம் என் காதிலும் விழுந்ததில் அனிச்சையாய் சிரித்துவிட்டேன்.

இயக்குனரும், உதவியாளரும் திரும்பிப் பார்த்தார்கள்.
படப்பிடிப்புக்குத் தொடர்பில்லாத யாரிவன் என்று பார்த்தார்கள். நான் மனசுக்குள் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குத் தெரிந்தவனாகி விடுவேன் என்று சொல்லிக் கொண்டேன்.

அப்போது தான் ‘ சார் யாரு?’ என்றார் இயக்குனர் என்னைப் பார்த்து. யாரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்னதும் பிரேக்கில பாருங்க என்று சிரித்த படி சொன்னார். எதற்காகவென்று அவர் கேட்கவில்லை. அதற்குள் ‘ரெடி ரெடி’ ஒளிப்பதிவாளர் குரல் கொடுக்க இயக்குனரும் இணை இயக்குனரும் அவசரமாய் கிளம்பினார்கள்.

அது காவல்நிலைய செட். அவ்வளவு இயல்பாய் இருந்தது அது. ஒருமுறை சுவரில் சாயும் போது அது துணி என்பது உரைத்தது. சில இடங்களில் காட் போர்டு சுவர்கள். எது நிசம் எது பொய் என்பதை அறிய முடியாமல் மர்மமாய் இருந்தது.

டிராலி, கிரேன், கிளாப், மைக், நாகரா, லைட்டுகள் என்று ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடிரென்று ‘பிரேக்’ என்று உரத்த சத்தம் கேட்டது. உணவு இடைவேளை
அறிவிக்கப்பட்டாயிற்று கல்லுக்கு உயிர் வந்தது போல பரபரப்பாகிவிட்டேன்.

உடலுக்குள் ரத்தம் வேகமா ஓடத் துவங்கியது. இயக்குனருடன் பேசிய படி கதாநாயகன் செட்டுக்கு வெளியே நடக்கத் துவங்கினார். நானும் ஓடிப் பின் தொடர்ந்தேன்.

செட்டுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. ‘தலைவர் வாழ்க’ கோஷம் முழங்கியது. கதாநாயகன் வந்ததும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஆளூயர மாலைகள் போட்டார்கள். போட்டோ எடுத்தார்கள். நான் யாரென்று தெரியாத அவரை இந்த கூட்டத்தில்
எப்படி சந்திக்கப் போகிறேன் என்று கலங்கினேன். பசியை வெளிக் காட்டாமல் ரசிகர்களிடம் பேசினார். ஒரு வழியாக கை கூப்பி வணங்கி விடை பெற்றார்.

அவரது வெளிநாட்டுக் காரை நோக்கி அவரும் இயக்குனரும் நடந்தார்கள். நான் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பேசிய படியே இருந்ததால் தொந்தரவு செய்து விடக் கூடாது என்று அமைதியாய் பின் நடந்தேன். அதை நடை என்று
சொல்ல முடியாது நடைக்கும் ஓட்டத்திற்கும் இடைப்பட்ட ஒன்று.

அவர்கள் காரை நெருங்கி விட்டார்கள். என் முகம் தெரியும் படியாய் அவருக்கு முன்னே சென்று ‘சார்’என்றேன். கடிதத்தோடு நிற்கும் என்னைப் பார்த்து ஒன்றும் புரியாத முகபாவத்தோடு ‘ என்ன’ என்றார். ‘எஸ்டேட் அரவிந் சார் அனுப்புனாரு’ என்றபடி கடிதத்தை கொடுத்தேன்.

‘ம்.. போன் பண்ணிருந்தான்’ என்ற படி கடிதத்தைப் படித்தார். கடிதத்தைப் படித்து முடித்த உடன் ‘என்ன படிச்சிருக்கீங்க’ என்றார். ‘பீகாம்’ என்றேன். பெயரைக் கேட்டார். சொன்னேன். சிறிது
யோசனைக்குப் பின் இயக்குனரை பெயர் சொல்லி கூப்பிட்டார். இயக்குனர் பவ்வியமாய் ‘சார்’ என்றார். ‘இந்தப் பையனை உங்க அஸிஸ்டென்டா வச்சிக்கங்க’ என்றார். கிட்டத் தட்ட உத்தரவு போலத் தான் இருந்தது. ‘சரிங்க சார்’ என்று தலை வணங்கினார் இயக்குனர்.

என் பெயர் சொல்லி கூப்பிட்டார் கதாநாயகன். அடக்கமாய் பார்த்தேன்.’நல்லா ஓர்க் பன்ணுங்க. அடுத்தடுத்து சீக்கிரமா வளரனும். போய் சாப்பிடுங்க மதியானத்தில இருந்து ஓர்க் பண்ணுங்க. பெஸ்ட் ஆப் லக்’ என்று சொல்லி கை குலுக்கினார்.
காரில் ஏறி கிளம்பினார்.

நடந்ததை நம்ப முடியாமல் கார் போவதைப் பார்த்துக்
கொண்டிருந்தேன்.

ஒரு கடிதம். ஒரு வார்த்தை.ஒரு கணம். ஒருவனின் வாழ்வையே தலைகீழாக்கி விட்டது.

‘ டே’ என்று குரல் கேட்டது.

என்னை யார் இங்கு அப்படி கூப்பிடப் போகிறார்கள் என்று நினைத்த படி என் சந்தோசத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

‘ டே உன்னைத்தான்டா’ என்றது குரல் பின்னிருந்து. சந்தேகத்தோடு திரும்பினால் அழைத்து இயக்குனர். அதிர்ச்சியாய் இருந்தது.

‘உன் பேர் என்னடா’ என்றார்.

பதில் சொன்னேன்.

‘கிளாப் எப்பிடி அடிகிறதுன்னு பாத்துக்க நாளைல இருந்து நீ தான் அடிக்கணும் சீக்கிரம் சாப்பிட்டு வாடா’ சொல்லிவிட்டு போனார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சார்ன்னு கூப்பிட்டவர் அத்தனை சீக்கிரமாய் டே க்கு இறங்கி விட்டாரே என்று யோசித்தேன்.

இத்தனைக்கும் இயக்குனரும் இளையவர் தான். ஒரு வேளை உதவி இயக்குனர்களை இயக்குனர்கள் அப்படித் தான் கூப்பிட
வேண்டுமோ என்னமோ? கட்டாயம் அப்படியெல்லாம் இருக்காது. தன்னம்பிக்கை அற்ற சிலர் தன் அதிகாரத்தை நிறுவும் பொருட்டு செய்யும் அல்ப தந்திரம் அது என்பதை விளங்கிக் கொள்ள
அதிக நேரம் ஆகவில்லை.

சினிமாவில் எனக்கான முதல் பாடமாய் இதிலிருந்து துவங்கலாம் என்று தோன்றியது. சில பாடங்கள் பின்பற்றுவதற்காக சில பாடங்கள் பின் பற்றாமல் இருக்க என்பதை நினைத்த படி செட்டுக்குள் நுழைந்தேன்.

திருமண அறிமுகம்

may-3-2008-my-card-020

அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .

என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.

பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.

15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.

ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் கூப்பிடுவாள்.

நர்மதாவிற்கு அலங்காரம் நடக்கும் போது பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அலங்காரம் முடிந்து மண்டபத்திற்கு காரில் கிளம்பும் போது நர்மதாவுடம் காரில் ஏறிக் கொண்டாள்.

மண்டபத்தில் தாய் மாமன் நான் மாலையிட்டு கல்யாண மேடைக்கு அழைத்து வந்ததை சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை சுரேஷை ஏற்கனவே பல முறை பார்த்திருப்பதால் மேடை மீது ஏறி இருவரிடமும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

நேரமானதும் பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க தாலி கட்டுதல் முடிந்தது.

கூட்டம் நிரம்பிய மண்டபத்தில் குழந்தைகள் கூட்டத்தில் விளையாட தோழமைகள் அதிகமிருந்ததால் ஒரே ஓட்டமும் விளையாட்டாக இருந்தாள் அன்புமதி.

எல்லாம் முடிந்து மணப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் வர அனைவரும் கிளம்பிய போது அன்புமதியை தேடி கூட்டிக் கொண்டோம்.

மாப்பிள்ளை வீட்டில் சடங்குகள் முடிந்து கிளம்ப வேண்டிய நேரம்
நெருங்கியது.

என் அக்கா சாந்தி மற்றும் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இனி முதல் இத்தனை காலம் தனது கண்களில் ஒன்றாக இருந்த நர்மதா அடுத்த வீட்டுப் பெண். இனி அவள் வீடு இது தான் என்று உணர்ந்து
கண்கள் கலங்கத் துவங்கியிருந்தனர்.

மாப்பிளை வீடு நான்கைந்து தெருக்கள் தள்ளித் தான் இருக்கிறது என்றாலும் அது நீண்ட தொலைவு தான் இனிமேல்.

இனி மாப்பிள்ளை வீட்டின் விதிகள் தான் நர்மதாவைக் கட்டுப்படுத்தும்.

விட்டுப் பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தவர்களை அனுபவப் பட்ட முதிர்ந்த ஒரு குரல் ’ கிளம்புங்கப்பா அங்க வேலை கிடக்குதில்ல ’ என்று கிளப்பிவிட்டது.

பெண் வீட்டினர் அனைவரும் கிளம்பத் தயாரானோம்.

அக்கா சாந்திக்கும், மணப் பென்ணின் தங்கை நிவேதாவுக்கும் கண்கள் ஊற்றெடுத்துக் கொண்டன எனக்கும் கூட கண்கள் கலங்குவதை கட்டுப் படுத்த முடியவில்லை.

உமா பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த அன்புமதியை அழைத்து வந்தாள்.

நர்மதாவின் கண்களிலும் கண்ணீர் நிரம்பி வழியக் காத்திருந்தது.

ஒவ்வொருவராய் நர்மதாவிடமும் மாப்பிள்ளையிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.

அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் கடைசியாய் கிளம்பிக் கொண்டிருந்தோம்.

அன்புமதி நர்மதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நாங்கள் வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தோம். அன்புமதி திடிரென பிடித்திருந்த என் கைகளை விலக்கி விட்டு நர்மதாவை நோக்கி ஓடினாள்.

என்ன ஏதுவென்று தெரியாமல் திரும்பிப் பார்ப்பதற்குள் அன்புமதி ஓடிப் போய் நர்மதாவின் கைகளைப் பிடித்து,

‘ எல்லாரும் போறாங்கடி, வாடி நர்மதா , நீ மட்டும் ஏன் இங்க இருக்க வாடி வாடி விட்டுட்டு போயிறப் போறாங்க’

என்று மறுபடி மறு படி சொல்லிய படி நர்மதாவை இழுக்க ஆரம்பித்தாள்.

அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போனோம்.

சில அழுத மனங்கள் விம்மலை வெளிப் படுத்தின, சிலருக்கு சிறுமியின் அறியாமை இதழ்களில் சிரிப்பைச் சிந்தியது.

ஓடிச் சென்று அன்புமதியைத் தூக்கிக் கொண்டேன்.

‘ நர்மதாவுக்கு இங்க வேலை இருக்கு அதை முடிச்சிட்டு அப்புறமா வரும் , என்று சொன்னேன் அன்புமதியிடம்.

நம்பாமல் ‘ அப்புறம் வருவியாடி’ என்று நர்மதாவை அன்பு கேட்க
நர்மதா அழுத விழிகளோடு ஆமென தலையாட்டினாள்.

அன்புமதியை தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

வாசல் வரை நர்மதாவை திரும்பிப் பார்த்த படி வந்தாள் மதி.

போகும் போதோ, போய் சேர்ந்த பிறகோ பொங்கிப் பெருகும் அன்புமதியின் கேள்விகளுக்கு வழக்கம் போல் உண்மையான பதில்களால் திருமணத்தை அறிமுகம் செய்து வைப்பதாய் உறுதி கொண்டேன்.

வாழ்க ஜனநாயகம்

இரண்டு நாளுக்கு முன்பு தினத் தந்தியில் ஒரு செய்தியைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை.
வேறு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விட்டுப் போனவர்களை இணைக்கும் இறுதி முயற்சியாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்திருந்தது . அதில் ஒன்று செல்பேசி எண், மற்றொன்று தொலைபேசி எண். 8ம் தேதி கடைசி நாள் அதற்குள் அந்த எண்களுக்கு பேசினால் வீடு தேடி வந்து வாக்காளர் பட்டியலில் உங்களை இணைத்துக் கொள்வார்கள் என்றது அந்த செய்தி.

நமது நாடு எவ்வளவு முன்னேறிவிட்டது. குடிமக்களை என்னமாய் மதிக்கிறது ஆனது ஆகட்டும், போனது போகட்டும் என்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். உணர்ச்சி வசப்பட்டு என்ன செய்தேன் என்கிறீர்களா? அந்த எண்களுக்கு முயற்சி செய்தேன்.

முதலில் செல்பேசிக்கு, எண்களை மெனக்கிட்டு எனது செல்பேசியில் சேமித்திருந்தேன். என்ன பதில் என்று ஆவலுடன் அவர்கள் வீட்டுக்கு வர வசதியாய் வீட்டில் இருக்கும் நாளாகப் பார்த்து இன்றைக்குப் பேசினேன். எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தேன் சிறிது நேரத்திற்குப் பிறகு ‘ இந்த எண் சுவிட்ச்டு ஆப் ‘ என்றது ஒரு பதிவுக் குரல்.

கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனாலும் தொலைபேசி எண் கையிலிருக்கும் தெம்பு இருந்தது. மனம் தளராத விக்கிரமாதித்யனாக தொலைபேசி எண்ணை தேடி அழுத்தி விட்டுக் காத்திருந்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ‘ டெம்ரவர்லி அவுட் ஆப் ஆடர் ‘ என்று சொல்லி அதுவும் கைவிட்டது.

எனக்கு பெரும் கோபமாகிவிட்டது. என் மேல் தான். அரசு சம்பந்தப்பட்ட செயல்கள் இப்படித் தான் என்பதை கால காலமாக உணர்ந்தும் அல்ப நம்பிக்கையில் செயல்பட்டு விட்டது குறித்து ஆயாசமாக இருந்தது.

என்னைப் போல எத்தனை பேர் பேச முயற்சி செய்து கொலை வெறியில் சுத்துறாங்களோ?

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். 9382136694 – 25383695 –

வாழ்க ஜனநாயகம்…..

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்